இந்திய மீனவர்கள் விடயத்தில் ஐ.நா தலையிட வேண்டுமென கோரிக்கை
04 Dec,2013
இலங்கையில் இந்திய மீனவர்கள் மனிதாபிமானமற்ற வகையில் நடத்தப்படுகின்றனர்.
இது இந்திய மீனவர்களுக்கு மாத்திரம் அல்ல. இந்தியாவுக்கும் மரியாதைக் குறைவான செயல் என்று தமிழக படகு உரிமையாளர் சங்க தலைவர் என் ஜே போஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவதாக இலங்கை கூறுகிறது.
எனினும் அவர்கள் விலங்கிடப்பட்டு குற்றவாளிகளை போல நடத்தப்படுவதற்கு புகைப்பட ஆதாரங்கள் உள்ளன.
எனவே இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் தலையிடவேண்டும் என்று போஸ் கோரியுள்ளார்.
இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று போஸ் கேட்டுள்ளார்.
கடல் எல்லையை தாண்டிச் செல்பவர்களே தாக்கப்படுகின்றனர்: கே . மகாதேவன்
இந்திய கடற்பகுதியில் எந்த தமிழக மீனவர்களும் தாக்கப்படுவதில்லை. கடல் எல்லையை தாண்டி செல்லும்போதே அவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாக இந்திய கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பொறுப்பதிகாரி கமாண்டர் அமர் கே.மகாதேவன் சென்னையில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இந்த கருத்தை வெளியிட்டார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது நாட்டிற்கு பல்வேறு வகையில் அச்சுறுத்தல்கள் உள்ளன. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்ததார்.
இதனிடையே, இலங்கையைச் சேர்ந்த ஆறுபேர் இந்திய கடல் எல்லையில் நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் கடலோரக்காவல் படையினரால் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்றையதினம் இவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தும் கடந்த 10 நாட்களில் இதுவரை 56 பேர் கைதானதாக அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.