இலங்கை அரசாங்கமும், மக்களும் தங்களின் உள்விவகாரங்களை தாங்களே தீர்த்துக் கொள்ளும் திறனும், புரிதலையும் கொண்டிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனா அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிராக எடுக்கின்ற எத்தனிப்புகள், இலங்கையின் சுயாதீனத்தை பாதிக்கும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
மனித உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கான பாதையை தீர்மானிப்பதற்கு, இலங்கைக்கு காணப்படும் உரிமையை சர்வதேச நாடுகள் மதிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு டிசம்பர் 10ல்...!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து பல்நோக்கு ஒழுங்கு விசாரணை கண்காணிப்பு முகமை நடத்தி வரும் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை டிசம்பர் 10ஆம் திகதி தடா நீதிமன்றம் வழங்கவுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், விடுதலை புலி இயக்கத்தின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உட்பட பலர் இன்றும் தேடப்படும் குற்றவாளியாக உள்ளனர்.
எனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை முடிந்த பின்னர், சி.பி.ஐ. அதிகாரிகளை கொண்டு பல்நோக்கு ஒழுங்குமுறை விசாரணை கண்காணிப்பு முகமையை (எம்.டி.எம்.ஏ.) 17.6.1999 அன்று மத்திய அரசு அமைத்தது.
இந்த அமைப்பு ஒவ்வொரு மாதம் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த ரகசிய அறிக்கையை, சென்னையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு (தடா) நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறது.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சென்னை தடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கை கடந்த 14 ஆண்டுகளாக விசாரித்து வரும் எம்.டி.எம்.ஏ. விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
எனவே இந்த அமைப்பின் விசாரணையை இந்த நீதிமன்றம் கண்காணிக்கவேண்டும். அந்த விசாரணையை துரிதப்படுத்தவும், உண்மையான குற்றவாளிகளை கண்டறியவும் எம்.டி.எம்.ஏ.வுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தடா சட்டத்தின்படி, மனு ரகசிய விசாரணை அடிப்படையில் விசாரிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மனு மீதான தீர்ப்பை டிசம்பர் 10ஆம் திகதி வழங்குவதாக அறிவித்தார்.
முரளிதரன் கூற்று தமிழ் மக்களின் இதயங்களைப் புண்படுத்துகின்றது! மன்னிப்பு கோர வேண்டும்!- வீ புத்திரசிகாமணி
முத்தையா முரளிதரன் வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரச்சினையுமில்லை என வெளிநாட்டு அரசிஇயல்வாதிகளுக்கு கூறியிருப்பது தமிழ் மக்களின் இதயங்களை புண்படுத்துகின்றதும் எமக்கு வேதனை அளிக்கின்றதுமான கூற்றாக இருக்கின்றது என முன்னாள் நீதித்துறை பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுஇகையில்,
முத்தையா முரளிதரனுக்கு எப்போதுமே தமிழ் உணர்வு இருந்தது இல்லை என்பது இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்றாகத் தெரிந்த விடயமாகும்.
அரசாங்கம் உட்பட பல சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனக் கூறுகின்ற இந்நிலையில் இவர் பிரச்சினை இல்லையெனக் கூறுவது வேடிக்கையாக இருந்தாலும் எமது மக்களை இது எந்தளவிற்கு பாதித்திருக்கும் என்பதை தமிழ் உணர்வு இல்லாததால் அவரால் உணரமுடியாது.
அரசாங்கம் நல்லிணக்க ஆணைகுழுவின் சிபாரிசுகளை நடைமுறைபடுத்த முயற்சிக்கின்ற இவ்வேளையில், இவரது விளையாட்டுத்தனமும் அபத்தமாக சொல்லுகின்ற வார்த்தைகளும் எமக்காக வாதிடும் சிங்கள அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தையும்கூட நிந்திப்பதாக அமைந்துள்ளது.
எனவே, தமிழ் மக்களிடமும் எமக்காக பேசுகின்ற அரசியல்வாதிகளிடமும் அரசாங்கத்திடமும் மன்னிப்புக் கோரி இதுபோன்ற விளையாட்டுத்தனமான அறிக்கைகளையும் பேச்சுகளையும் சொல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இவர் ஏதாவது பதவி பட்டங்களை எதிர்பார்பாரேயானால் அதற்கு வேறுவிதமாக செயற்பட வேண்டுமேயொழிய வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் எமது மக்களை துன்புறுத்தக் கூடாது என்றார்.
போதைப் பொருள் விற்பனையாளர்களை நாடாளுமன்றிலிருந்து விரட்டும் போராட்டம் ஆரம்பிக்கப்படும்!- பொதுபல சேனா
கொழும்புக்கு ஹெரோயின் போதைப் பொருளை வவரழைப்பவர்களின் பெயர்களும் அவர்களின் ஊர் விபரங்களும் தனக்கு தெரியும் எனவும் அது பற்றி அவசியமான இடங்களில் அறிவித்துள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் பெயர்களை ஊடகங்களில் வெளியிடுவது நாகரீகமான செயல் அல்ல. தற்பொழுது கைது செய்யப்படும் நபர்கள் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பிரதிபலனே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களை அங்கிருந்து விரட்டும் போராட்டம் ஆரம்பிக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்கள், பாதாள உலக குழுவினர், சண்டியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, முதுகெலும்புள்ளவர்களை பொதுபல சேனாவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த சாசனத்தை பாதுகாக்க வேண்டும்!– சஜித் பிரேமதாச - பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை!– சிறிரங்கா
பௌத்த சாசனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமேன ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விகாரைகளை அமைக்க அரசாங்கம் நிதியில்லை எனக் கூறினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனது தந்தையின் ஆட்சிக் காலத்தில் பௌத்த சாசன நிதியொன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
மக்களை நலனைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் ஆட்சி நடாத்தவில்லை.
அம்பாந்தோட்டையில் கோடிக் கணக்கான ரூபா செலவில் துறைமுகம் அமைக்கப்பட்டது. எனினும், இந்தத் துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவதில்லை.
இந்தத் துறைமுகத்தின் ஊடாக எவருக்கும் தொழில் வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை.
தரகுப் பணம் கிடைக்காமல் விடும் என்ற காரணத்தினால் பல நல்ல திட்டங்களை ஆட்சியாளர்கள் முன்னெடுப்பதில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாணந்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை – ஜே.சிறிரங்கா
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
சிலோன் டீ என்ற பெயரை உலகிற்கு எடுத்துச் சென்றது எமது மக்களே. எனினும், எமது மக்களுக்கு என்ன கிடைத்துள்ளது.
இன்னமும் மக்கள் லயன் அறைகளில் மிக நெருக்கடியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
பெருந்தோட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் ஏழு பேர்சஸ் காணி வழங்கப்பட வேண்டும்.
பெருந்தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்.
நாடாளுமன்றில் உரைகளை எழுதிப் படிக்கும் கலாச்சாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
ஏதேனும் குறிப்புக்களை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.
முழு உரையையும் வாசிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இது ஓர் பின்தங்கிய நிலையாகவே கருதப்பட வேண்டும்.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை என சிறிரங்கா தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறப்பிட்டுள்ளார்.
அடுத்த வருடத்திற்கான தேர்தல்களுக்கு 2035 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
அடுத்த வருடம் நடத்தப்பட உள்ள தேர்தல்களுக்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தல்கள் திணைக்களத்திற்கு 2 ஆயிரத்து 35 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் தேர்தல்கள் அடுத்த வருடம் மூன்று கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.
அத்துடன் பதவிக்காலம் முடிவடைந்துள்ள சில உள்ளுராட்சி சபைகளின் தேர்தல்களும் அடுத்த வருடம் நடத்தப்பட உள்ளன.
தேசிய ரீதியான தேர்தல் ஒன்றை நடத்த வேண்டுமானால் 230 கோடி ரூபா தேவைப்படும் எனவும், அப்படியான தேர்தல் ஒன்று திடீரென நடத்தப்பட்டால் அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அதற்கான நிதியை ஒதுக்கும் எனவும் தேர்தல்கள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.
அடுத்த ஆண்டு தேர்தல்களுக்காக 2035 கோடி ரூபா ஒதுக்கீடு
அடுத்த ஆண்டு தேர்தல்களுக்காக 2035 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டில் சில தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேல், தென் மற்றும் ஊவா மாகாணசபைத் தேர்தல்களும், சில உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களும் நடத்தப்பட உள்ளன.
தேசிய ரீதியான ஓர் தேர்தலை நடாத்த 230 கோடி ரூபா தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல்களை நடாத்துவதற்காக 2035 கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வீசா இன்றி இலங்கையில் தங்கியிருக்கும் ஆயிரம் பேரை கைது செய்ய நடவடிக்கை
வீசா இன்றி இலங்கையில் தங்கியிருக்கும் ஆயிரம் பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்கள புலனாய்வுப் பிரிவினர் இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
வீசா காலம் முடிவடைந்து பல ஆண்டுகள் சிலர் இவ்வாறு நாட்டில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசித்த சிலர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்,
இன்னும் சிலர் திருமணம் செய்து கொண்டுள்ளனர், சிலரைக் காணவில்லை.
இந்தியா, ரஸ்யா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வீசா காலம் முடிவடைந்து நாட்டில் தங்கியுள்ளனர்.
இவர்களை கைது செய்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்டர்போல் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் 80 இலங்கையர்கள்! கைது செய்ய விசாரணைகளை ஆரம்பம்
பயங்கரவாத நடவடிக்கைகள், நிதி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 80 இலங்கையர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ( இன்டர்போல்) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலங்கைக்கு வெளியில் பல நாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களில் நான்கு பேர் பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர்.
பிரித்தானியாவில் இருக்கும் நான்கு பேரில் ஒருவர் வங்கி உரிமையாளர் எனவும் இவர் விடுதலைப் புலிகளின் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் என கூறப்படுகிறது.
இவர்களை கைது செய்ய ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார், இன்டர்போல் பொலிஸாருக்கு உதவி வருவதாக தெரியவருகிறது.
இரண்டாம் இணைப்பு
இலங்கையைச் சேர்ந்த 80 பேர் இன்டர்போல் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத நடவடிக்கைகள், நிதி மோசடிகள் மற்றும் வேறும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் ஐந்து பேர் பிரிட்டனில் வாழ்ந்து வருகின்றனர்.