மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியின் அடாவடித்தனத்தைக் கண்டித்து மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களிலும் பகிஸ்கரிப்பும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெறுகின்றன.
மட்டக்களப்பு - மண்முனை தென்மேற்கு - பட்டிப்பளை பிரதேச செயலகம் உள்ளிட்ட 14 பிரதேச செயலகங்களிலும் பகல் 12.05க்கு வேலைப் பகிஸ்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
நேற்று பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் புகுந்த மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளினால் திட்டியதுடன், அலுவலகத்திலுள்ள பொருட்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டார்.
இதனைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபையிலிருந்து நாடாளுமன்றம் வரை சென்ற புலிகளின் ஆவிகளின் உரை: ஜாதிக ஹெல உறுமய
மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
விடுதலைப் புலிகளின் மாவீரர்களை நினைவு கூருவது மற்றும் நினைவு நிகழ்வுகளை நடத்துவது சட்ட விரோதமானது என பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளதால், புலிகளை நினைவு கூர்ந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தி தண்டனை வழங்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிரிழந்த புலிகளின் உறுப்பினர்களுக்கான நினைவிடங்களை அமைக்கவும் மலர் அஞ்சலி, தீபம் ஏற்றுதல், பிரபாகரனின் புகைப்படத்தை காட்சிக்கு வைத்தல், புலிச்சின்னம், புலிக்கொடி ஆகியவற்றை காட்சிப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவற்றை இன்று நாடாளுமன்றம் வரை கொண்டு வந்துள்ளது.
யாழ்ப்பாணம், கரவெட்டி பிரதேச சபையிலும் உயிரிழந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சிகப்பு மற்றும் மஞ்சள் நிற பூக்களை கொண்டு வழிப்பாடுகளை நடத்தியுள்ளனர்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கழிந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் ஆவிகளின் மாவீரர் உரையானது கரவெட்டி பிரதேச சபையில் இருந்து நாடாளுமன்றம் வரை எதிரொலித்தமை தொடர்பில் அரசாங்கம் இதனை விட கூடிய கவனத்தை செலுத்த வேண்டும்.
புலிகளின் அரசியல் முன்னணி, புலிகளின் சர்வதேச முன்னணி மற்றும் அவர்களின் ஒத்துழைப்பு முன்னணி என்பவற்றைதோற்கடிக்க அரசாங்கம் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் மறைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் வெளியில் வரும் காலம் வெகு தூரத்தில் இருக்காது என்றார்.
கிளிநொச்சியில் இராணுவ அச்சுறுத்தலையும் மீறி வட மாகாண உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மாவீரர்களுக்கு அஞ்சலி
கிளிநொச்சியில் பலத்த அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மாவீரர்களை நினைவில் நிறுத்தி அவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினால் அவர்களைக் கொல்வோம் கடத்துவோம் என இராணுவத்தினர் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நேற்று மாலை 6.05 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திலும் கிருஸ்ணர் ஆலயத்திலும் மாவீரர் ஈகத்திற்குத் தலைவணங்கி பசுபதிப்பிள்ளை அவர்களால் மணியெழுப்பி சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
பொது மக்களும் அகவணக்க நிகழ்வில் இணைந்து கொண்டனர். இப்பகுதிகளைச் சூழப் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பதற்றமான சூழ் நிலை காணப்பட்ட பொழுதிலும் அவர்களது எந்தவொரு அச்சுறுத்தல்களும் எம் மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் தம்முயிரை ஈந்த மாவீரச் செல்வங்களை நினைவு கூறுவதைத் தடுக்க முடியாது என்பதனை நேற்றைய நிகழ்வு உணர்த்தியுள்ளது.
மாவீரர் நாளன்று மாலை 6 மணிக்கு பூஜை செய்ததாக குமுளமுனை பிள்ளையார் கோவில் ஐயர் கைது!
முல்லைத்தீவு, குமுளமுனை பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றின் ஐயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 6 மணியளவில் இராஜரட்ணம் என்ற ஐயரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டனர்.
நவம்பர் 27 மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் கோவிலில் விளக்கு ஏற்றச் சென்றதாக குறிப்பிட்டு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் செயற்படுவது சட்டவிரோத செயல் என பொலிஸார் அறிவித்தல் விடுத்தனர்.
பொலிஸாரின் அறிவித்தலை மீறி செயற்பட்டமையின் காரணமாக இராஜரட்ணம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஆனால் தற்போது விநாயகர் ஷஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அனைத்து பிள்ளையார் கோவில்களிலும் மாலையிலேயே பூஜை நடைபெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கையின் சட்டத்தின் ஆட்சி நிலை தொடர்பாக அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் சங்கம் கவலை!
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நிலை குறித்து அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் சங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
இலங்கையில் சட்டத் தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் நீதித்துறைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மைக்கல் கோல்பிரன் கவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் முன்னாள் பிரதமர் நீதியரசருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் விசாரணைகள் மற்றும் அவரது பதவி நீக்கம் என்பன தொடர்பில் இயற்கை நீதியின் கொள்ளைகள் பின்பற்றப்படவில்லை.
சுயாதீனமான சட்டத் தொழில் மற்றும் நீதித்துறை சட்டத்தின் ஆட்சியில் முக்கிய அங்கமாகும் என்றார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த மாத முற்பகுதியில் கொழும்பில் நடத்தவிருந்த மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள வீசா அனுமதி கோரியிருந்த சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமை நிறுவனத்தின் மூன்று உறுப்பினர்களுக்கு இலங்கை அரசாங்கம் வீசா வழங்குவதை நிராகரித்தது.
கொழும்பில் நடந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இதற்கான காரணமாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.
வீசா நிராகரிக்கப்பட்டவர்களின் ஒருவரான மனித உரிமை நிறுவனத்தின் உறுப்பினரும் ஐ.நாவின் விசேட அறிக்கையாளருமான கெப்ரியலா கானுல், நீதித்துறை சார்ந்தவர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் பதிலடி நடவடிக்கைகள் தொடர்பிலும் பிராந்திய மனித உரிமை வழிமுறைகள் குறித்தும் கடும் கவலை வெளியிட்டிருந்தார்.
நீதித்துறை மற்றும் நீதித்துறை தொழில்சார் நபர்கள் மீதான பதிலடிகள் நிறுவன மற்றும் செயல்பாட்டு சுதந்திரம் மீதான தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச அறங்கூறுநர் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் சர்வதேச நாடுகளை சேர்ந்த நீதியாளர்கள் மற்றும் சிரேஷ்ட நீதிபதிகள் 56 பேர் இணைந்து கையெழுத்திட்ட கடிதம் ஒன்றில் சர்வதேச தரங்களை இலங்கை அரசாங்கம் அலட்சியம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதிபதிகளின் பதவி நீக்கம் தொடர்பாகவும் அந்தக் கடித்தில் கவலை வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்த வேண்டும் என மைக்கல் கோல்பிரன் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதியமைச்சர் கருணாவின் உறவினர் எனக் கூறி பண மோசடி செய்த நபர் கைது!
ஐரோப்பிய நாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றை நடாத்தி வந்த ஒருவரை கொழும்பு மோசடி தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மூன்று கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த குறித்த சந்தேக நபர் வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) உறவினர் எனக் கூறியே இந்த நபர் மேற்படி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இத்தாலி, அவுஸ்திரேலியா. ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி நபர்களிடம் 8 லட்சம் ரூபா முதல் 20 லட்சம் ரூபா வரை பணத்தை பெற்றுள்ளார்.
கொழும்பு மோசடி தடுப்பு பிரிவில் சந்தேக நபருக்கு எதிராக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென் மாகாணத்தில் ஆளும் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட போவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொய்!- கயந்த கருணாதிலக்க
நடைபெறவுள்ள தென் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையுமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிறப்பிலேயே ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவன் என்ற வகையில் அடிப்படையற்ற பொய்யான பிரசாரங்களையும் வதந்திகளையும் மறுப்பதை தவிர வேறு எதனையும் செய்ய முடியாது.
சிலர் பிரதேசத்தில் இப்படியான வதந்திகளை பரப்பி வருகின்றனர். பணத்திற்கும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் சிறப்புரிமைகளுக்காக நான் எனது அரசியல் கௌவரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன். அதற்கான தேவையுமில்லை.
எவ்வாறாயினும் அடுத்த தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி என்னை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்தால் கட்சியின் நலன் கருதி அது பற்றி கவனத்தில் கொள்ள நான் தயாராக இருக்கின்றேன் என்றார்.