இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டை கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் நிர்ப்பந்திக்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குநர் பிராட் அடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பேசுகிறார்களா அல்லது மௌனமாக இருக்கிறார்களா என்று உலக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் போரின்போது நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, இலங்கையை கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் வெளிப்படையாக நிர்ப்பந்திக்க வேண்டும். இல்லையெனில் சர்வதேச அமைப்பு என்ற நம்பகத்தன்மையை கொமன்வெல்த் இழந்து விடும்.
சர்வதேச விசாரணை:
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது, சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருப்பது குறித்து, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையர் வலியுறுத்தியிருப்பதை கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று பிராட் அடம்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
அழைக்காமல் மாநாடு வந்து இலங்கையை விமர்சித்த பிரிட்டிஷ் அமைச்சர்!- பிரதிநிதிகள் முறையீடு
பொதுநலவாய மக்கள் பேரவை மாநாட்டின் இறுதி நிகழ்விற்கு அழைப்பு எதுவுமின்றி வருகை தந்த பிரித்தானிய வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஹியுகோ சுவயர் (Hugo Swire) இலங்கை தொடர்பில் தவறாக கருத்துக்கள் தெரிவித்தது தொடர்பில் இலங்கைப் பிரதிநிதிகள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இவரின் செயற்பாடு தொடர்பில் பொதுநலவாய செயலாளர் நாயகத்திற்கும் பிரித்தானிய அரசாங்கத்திற்கும் எழுத்து மூலம் முறையிடப் போவதாக கூறியதுடன், மக்கள் பேரவையின் இறுதி அறிக்கை கையளிக்கும் நிகழ்வை இலங்கைப் பிரதிநிதிகள் பகிஷ்கரிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பொதுநலவாய மக்கள் பேரவை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு பண்டபத்திலுள்ள ஊடக நிலையத்தில் நடைபெற்றது.
இங்கு பொதுநலவாய மக்கள் மன்ற தலைவர் சேர். ஆனந்த் சத்யானந்த், உபகுழு தலைவர் டாக்டர் லலித் சந்ரதாஸ, சேவாலங்கா ஸ்தாபகர் தலைவர் குமார நவரத்ன ஆகிய இலங்கைப் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த உப குழுத்தலைவர் லலித் சந்ரதாஸ,
சகல சமூக அமைப்பு பிரதிநிதிகளும் இணைந்து மக்கள் மன்றத்தின் பிரகடனத்தை தயாரித்து அது குறித்து இறுதிநாளில் ஆராய்ந்தோம்.
இங்கு அழைப்பு எதுவுமின்றி வந்த பிரித்தானிய அமைச்சருக்கு பேச அவகாசம் வழங்கப்பட்டது. இது தொடர்பில் எமக்கு சந்தோஷம் உள்ளது. பிரகடனம் தொடர்பில் அவர் பேசுவார் என நினைத்தோம். ஆனால் அவர் இலங்கை மற்றும் மாலைதீவை விமர்சித்து பேசினார்.
இதன் மூலம் இலங்கையிலுள்ள சிவில் அமைப்புகளுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் எம்மிடம் வினவியுள்ளது.
மனித உரிமை, நல்லாட்சி என்பன குறித்துப் பேசும் பிரித்தானியா இவ்வாறு நடந்து கொண்டது குறித்து அதிருப்தி அடைகிறோம். இது தொடர்பில் பிரித்தானியாவுக்கு அறிவிக்க உள்ளோம்.
மக்கள் மன்றத்தின் அறிக்கை எதிர்வரும் சனிக்கிழமை வெளிவிவகார அமைச்சர்களுக்கு கையளிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்காதிருக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பில் மக்கள் பேரவையுடன் பேச உள்ளோம் என்றார்.
சேவா லங்கா ஸ்தாபகர் தலைவர் பேசுகையில், இந்த மாநாட்டிற்கு எந்த அரசியல்வாதியும் அழைக்கப்படவில்லை. அழைக்காமல் வந்து இலங்கை குறித்து அவர் விமர்சித்து பேசினார். இதனால் சமூக அமைப்புகளுக்கிடையிலான நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மன்றத் தலைவர் ஆனந்த் சந்யாவிந்த் பேசுகையில், மாநாடு சிறப்பாக நடந்தது. சிறந்த ஆவணமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராமலே இந்த சம்பவம் நடந்தது. தலைவர் என்ற வகையில் இதன் பொறுப்பை நான் ஏற்கிறேன் என்றார்.