சனல்-4 ஊடகவியலாளருடன் ஜனாதிபதி கை குலுக்கினார்!!: தேநீர் அருந்த வருமாறு அழைப்பு
சனல்-4 ஊடகவியலாளர்களை தேநீர் அருந்த வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி, பொதுநலவாய வணிக அரங்கத்தை ஆரம்பித்துவைத்ததன் பின்னர் காரிலேறுவதற்கு தயாரானபோது சனல்-4 ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்டனர்.
அக்கேள்விகளை கவனிக்காது அவர்களை தேநீர் அருந்தவருமாறு ஜனாதிபதி சிரித்தவாறே கூறிவிட்டு சென்றுவிட்டார். இலங்கை வந்துள்ள சனல்-4 ஊடகவியலாளர்களை ஜனாதிபதி எதிர்கொண்டபோது தான் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுகளை மனங்கொள்வதில்லையென கூறினார்.
ஊடகவியலாளர்கள், பாதுகாப்பு உத்தியோகதத்தர்கள் மற்றும் அவரது பாரிவாரங்களிடையே காணப்பட்ட ஜனாதிபதி ‘ இல்லை, நாம் அப்படியானவர்கள் அல்ல’ என உரத்துக் கூறினார்.
சனல்-4 ஊடகவியலாளரான ஜொனதன் மில்லர் தாம் ஜனாதிபதியை சந்திக்க முடியுமா எனக்கேட்டபோது அவர் ஆம் என பதிலளித்தார். ‘அதற்கென்ன, நாம் தேநீர் விருந்தில் சந்திப்போம்’ எனக் கூறினார்.
தன்னை பாதுகாத்து நின்ற பாதுகாப்பு ஊழியர்களை கடந்து அவர் வரமுயன்றபோது மில்லர் தனது குரலை உயர்த்தி தன்னை சனல்-4 ஊடகவியலாளர் என அடையாளப்படுத்தினார்.
பின்னர் ஜனாதிபதி, மில்லரை நோக்கிவந்து கைகளை குலுக்கினார்.
மில்லருடன் சேர்ந்து நடந்த ஜனாதிபதி நாம் மீண்டும் சந்திப்போம் என்றார்.
சந்திப்புக்கு ஒத்துக்கொண்டதற்காக மில்லர் ஜனாதிபதிக்கு நன்றி கூறினார். ஜனாதிபதி தனது வாகனத்தில் ஏறியபோது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பகிஷ்கரிப்பை பற்றிய கேள்வியை மில்லர் உரத்த குரலில் கேட்டனர்.
ஜனாதிபதி இதற்கு பதில் கூறவில்லை. ஆனால் தான் ஊடகவியலாளர்களை சந்திக்கவிரும்புவதாக அவர் கூறியதை கேட்க முடிந்தது.
ஆவணப்படங்களை இன்னும் தயாரிப்பேன்: சனல்-4 இயக்குநர்!!
யுத்த குற்றங்கள் தொடர்பில் சாட்சியங்கள் கிடைக்குமாயின் அவை தொடர்பிலான ஆவணப்படங்களை எதிர்காலத்தில் இன்னும் இன்னும் தயாரிப்பேன் என்று சனல்-4 ஊடகவியலாளரும் ‘யுத்த சூன்ய வலயம்’ படத்தின் இயக்குநருமான கலம் மக்றே தெரிவித்துள்ளார்.
‘ஐக்கியத்துக்கான சக்தி’ எனும் ஐக்கிய தேசியக்கட்சி சார்பான அமைப்பு ஜாதிக சேவா சங்கம் தனது தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வலுவான சான்றுகள் கிடைக்குமாயின் அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் பற்றி ஆவணப்படங்களை இன்னும் தயாரிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளை மறுக்காமல் அரசாங்கம் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தவேண்டுமென என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் என்ற வகையில் தான் தனது கடமையை செய்துவருவதாகவும் அவர் கூறினார். உண்மையான சான்றுகளின் அடிப்படையிலேயே தான் ஆவணப்படங்களை தயாரித்ததாக மக்றே கூறியுள்ளார்.