மன்மோகன் சிங் கலந்துகொள்ளாமை வெட்கப்படவேண்டிய விடயமாகும் – ராவணா
12 Nov,2013
மன்மோகன் சிங் கலந்துகொள்ளாமை வெட்கப்படவேண்டிய விடயமாகும் – ராவணா
தெற்காசியாவின் வல்லரசு என்ற ரீதியில் பொது நலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமையானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இதனால் இலங்கைக்கு எதுவிதமான பாதகமும் கிடையாது என ராவணா சக்தியின் தலைவர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் மாநாட்டில் கலந்து கொண்டு பிரச்சினைகளை பேசியிருக்க வேண்டுமென்றும் தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பாக இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவிக்கையில்,
மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளாமையானது இலங்கைக்கு பாதகமானது அல்ல. இதனை அரசாங்கம் பொருட்படுத்தாது மாநாட்டை கோலாகலமாக ஆரம்பித்துள்ளதோடு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இளவரசர் சார்ள்ஸும் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறானதோர் சூழ்நிலையில் தெற்காசியாவின் வல்லரசான இந்தியாவின் பிரதமர் இம் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லையென்றால் அது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கே வெட்கமாகும். எமக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது.
தமிழர் மீது உண்மையாக இலங்கை தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் பொது நலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசியிருக்க வேண்டும்.
அதிகார ஆசை
ஆனால் தமிழ் மக்கள் மீது இந்தியப் பிரதமருக்கு அக்கறை கிடையாது. அவர் அக்கறைப்படுவதெல்லாம் 2014 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கே ஆகும். மத்தியில் ஆட்சியமைக்க வேண்டுமானால் தமிழ் நாட்டின் ஆதரவு சிங்கிற்கு அவசியமாகும்.
எனவே தான் ஜெயலலிதாவினதும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களினதும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து மாநாட்டில் கலந்து கொள்வதை சிங் தவிர்த்துக் கொண்டுள்ளார் இது வெட் கப்பட வேண்டிய நிலையாகும் என்றார்.