கொழும்பில் இந்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டின் மூலம் இலங்கைக்கு பல நன்மைகள் கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கண்டில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறினார்.
இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகளின மனங்களில் இருக்கும் எதிர்மறையான மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த இந்த மாநாடு ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்றும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.
1818 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியை காட்டிக்கொடுத்த ராஜபக்ஷ வம்சத்தவர்!
1818 ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸவில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த புரட்சியை, ராஜபக்ஷ வம்சத்தை சேர்ந்த ஒருவர் காட்டிக்கொடுத்ததாக ஆங்கிலேயரின் வரலாற்றுச் சிறப்புமிக்க குறிப்பேடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புரட்சி பற்றிய தகவல்களை மெதமுலன ராஜபக்ஷ வம்ச பரம்பரையை சேர்ந்தவர் என அந்த குறிப்பேடுகளில் கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் அரும்பொருட் காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ள (1812-1822) ஜோன் டோயிலி என்பவர் தனது தலைமை அதிகாரிக்கு எழுதிய குறிப்பில் இது பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரட்சையை அடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரபுக்களான சில அதிகாரம்ங்களின்(பிரதானிகள்) தகவல்களின் அடிப்படையில் புரட்சிக்கு தலைமை தாங்கும் பிக்கு உட்பட நிலமேக்களை கைதுசெய்வோம்.
தகவல்களை வழங்கிய பிரபுக்கள் வேறு பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒற்றரான பிரபு ஒருவர் மூலம் புரட்சி பற்றிய சகல தகவல்களையும் நான் பெற்றுள்ளேன். அவர் புரட்சிக்கு குரல் கொடுத்து வந்த எமது முக்கியமான ஒற்றர்.
இந்த ஒற்றர் வேறு யாருமல்ல வணிக சிந்தாமணி மோஹெட்டி தோன் ராஜபக்ஷ என்பவராவார் என கொழும்பு வார இதழ் ஒன்றை மேற்கோள் காட்டி சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜபக்ஷ என்ற இவர் மெதமுல ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு உறவு முறையானவர் என கலாநிதி அலுத்வெவ செனரத் தேரர் எழுதிய மெதமுலன மாரெக்க என்ற பத்திரிகை விசேட இணைப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்படி வரலாற்றுச் சிறப்புமிக்க குறிப்போட்டின் பிரகாரம் ராஜபக்ஷவினர் 1818 புரட்சியின் ஊடாகவே ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் சம்பந்தப்படுகின்றனர்.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரப் போராட்டத்தில் தலைமை தாங்கிய தேசிய வீரர்களில் வணிக சிந்தாமணி மோஹெட்டி ராஜபக்ஷவும் ஒருவர்.
ஆங்கிலேயர் இந்த புரட்சியை கொடூரமான முறையில் அடக்கிய பின்னர் உயிர் பாதுகாப்பு தேடி அவர் மெதமுலனவுக்கு சென்றுள்ளார். இவர் ராஜபக்ஷவின் பாரம்பரையை சேர்ந்தவர் என்றே கருதப்படுகிறது.
மட்டு.சத்துருக்கொண்டானில் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் இன்று காலை காயங்களுடன் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்திற்கு முன்னாலுள்ள வீதியிலேயே குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுனாமிக்குப் பின்னர் குடியேற்றப்பட்ட பனிச்சையடி திராய்மடு கிராமத்தைச் சேர்ந்த தருமலிங்கம் நிரஞ்சன் (26 வயது) என்ற இளைஞனே இவ்விபத்தில் பலியானவரென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் நேற்றிரவு 8. 30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியெ சென்றதாக அவரது உறவினர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
இளைஞன் பயணம் செய்த துவிச்சக்கர வண்டியுடன் சடலம் காணப்பட்டதையடுத்து, பிரதேச வாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த இளைஞன் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ள பிரதேச வாசிகள், முச்சக்கரவண்டி ஒன்றே இந்த இளைஞரை மோதிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது: ஜெயந்தி நடராஜன்
இலங்கை கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக் கொள்ள கூடாது என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தாம் கடிதம் எழுத உள்ளதாக மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
இனப்படுகொலை நடத்தி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கை அரசு நடத்தும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என தாம் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளதாகவும், இதே கருத்தை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதப் போவதாகவும் கூறினார். ெ
தமிழீழ தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர் இசைப்பிரியா பற்றி வெளியான வீடியோ தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெயந்தி நடராஜன், பாதிக்கு மேல் அதை பார்க்க முடியாமல் அதிர்ச்சியுற்றதாக தெரிவித்தார்.
இசைப்பிரியா விடயத்தில் பெண்கள் அமைப்புக்கள் மௌனம் காப்பது ஏன்?- அரியநேத்திரன் எம்.பி கேள்வி
இசைப்பிரியா காணொளி விவகாரம் உலகமெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் பெண்ணொருவருக்கு இழைக்கப்பட்ட உயர்ந்த கொடூரத்தை பார்த்திருந்தும் இலங்கையிலுள்ள எந்தவொரு மாதர் அமைப்பும், பெண்ணுரிமை சங்கங்களும் தமது கண்டனத்தை தெரிவிக்காமை கவலையளிப்பதாக பா. உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இசைப்பிரியாவுக்கு ஏற்பட்ட கொடுமையை சாதாரண ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையாகப் பார்க்கப்பட வேண்டும். இலங்கையில் எத்தனையோ மாதர் அமைப்புக்கள், பெண்ணுரிமை சங்கங்கள் இயங்கி வருகின்றன.
பல்வேறு காரணங்களுக்கு குரல் கொடுக்கும் இந்த பெண்கள் அமைப்புக்கள், இசைப்பிரியாவுக்கு இழைத்த இந்தக் கொடுமையை பார்த்தும் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்ணுரிமை மாதர் உரிமை அரசியல் உரிமை ஆண்களுக்கு நிகரான சமத்துவ உரிமைக்காக போராடி வருகின்றோமென்று கூறிக்கொள்ளும் இந்த பெண்கள் அமைப்புக்கள் இத்தகைய கொடூரத்தை கண்டும் கூட ஜனநாயக ரீதியான தமது கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை. இசைப்பிரியா ஒரு போராளி என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு அவரை நிர்வாணமாக்கி பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கி அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
நாகரீகத்தன்மையுள்ள எந்த மனிதனும் செய்யத்தகாத செயலை இந்த காட்சி மூலம் காணமுடிகிறது. இது மனித குல நாகரீகத்துக்கே இழுக்குத்தரும் செயல் என்பதை இலங்கையிலுள்ள பெண்ணுரிமை அமைப்புக்களும் உலகநாடுகளின் அமைப்புக்களும் ஜனநாயக வழியிலாவது இதைக்கண்டிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இளம் தாய் மீது கத்திக்குத்து!- வெள்ளவத்தையில் சம்பவம்
இளம் தாயொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தையிலுள்ள பிரபல ஆடையகம் ஒன்றின் வாசலில் வைத்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆடையகத்தை நெருங்கிய தருணத்தில் அங்கு வந்த நபரொருவர் குறித்த தாயின் தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.
இதன்போது அருகில் நின்றிருந்தவர்கள் தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் போது சந்தேகநபர் அளித்துள்ள வாக்குமூலத்தில், குறித்த இளம் தாயை கொலை செய்யும் நோக்குடனேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தான் கத்தியால் தாக்குதல் மேற்கொண்ட போது அருகில் இருந்தவர்கள் தன்னை பிடித்ததாகவும் இதன் போது தனது கையிலிருந்த கத்தி தவறி விட்டதாகவும் இல்லையேல் அப்பெண்ணை கொலை செய்திருப்பேன் எனவும் சந்தேகநபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்தலத்துக்கு சென்ற வெள்ளவத்தை பொலிஸார் படுகாயமடைந்த பெண்ணை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன் தடயப் பொருட்களையும் மீட்டுள்ளனர்.
இக்கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள கத்தியை மீட்டுள்ள பொலிஸார் பெண்ணின் பாதணிகளையும் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் கைது செய்யப்படும் போது குடிபோதையில் இருந்துள்ளார். சந்தேக நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இசைப்பிரியா படுகொலை மன்னிக்கமுடியாத குற்றம்! இனியும் இலங்கை மறைக்க முடியாது! அமைச்சர் நாராயணசாமி
இறுதிப்போரில் இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையானது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். இப்படியான நிகழ்வுகள் நடக்கவில்லை என்று இலங்கை மறைக்க முடியாது. இவ்வாறு இந்தியப் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி.நாராயணசாமி நேற்று வலியுறுத்தினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கு இது தொடர்பான சனல் - 4 வீடியோ வலிமையான ஆதாரமாகும்.
இத்தகைய கொடூரங்களைப் புரிந்தவர்கள் மீது இலங்கை அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் மற்றும் ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதான இறுதி முடிவை இந்தியப் பிரதமர் எடுப்பார்.
இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர் கொல்லப்படுவதை காண்பிக்கும் வகையிலான வீடியோவை சனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் கொடூரமானவையாக இருந்தன. எந்தச் சமூகமும் இதை ஏற்றுக்கொள்ளாது.
மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என்று இலங்கை அரசு தொடர்ச்சியாக கூறிவருகின்றது. ஆனால், அங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கு இசைப்பிரியா பற்றிய வீடியோ வலிமையான ஆதாரமாகும்.
இசைப்பிரியா தமிழர் என்பது ஒரு புறமிருக்கட்டும், ஒரு பெண்ணை இவ்வாறு நிர்வாணமாக்கி கொலை செய்வது மன்னிக்க முடியாத மனித விரோத நடவடிக்கையாகும், குற்றமாகும். இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது இலங்கை அரசு விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை, இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாடு தொடர்பில் இந்திய மத்திய அரசு இன்னும் எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லை.
மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் மத்தியக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது என்று வெளியான செய்திகள் தவறானவையாகும்.
கொழும்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கலைஞர் கருணாநிதியும் மாநாட்டுக்கு போக வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு புறம்பாக தமிழக காங்கிரஸ் தலைவரும் பிரதமரிடம் இதை வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர்களான சிதம்பரம், வாசன் ஆகியோரும், நானும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முடிவெடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
பொதுநலவாய நடைபெறுவதற்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன. எனவே, மத்திய அரசு பிரதமரின் பங்குபற்றல் தொடர்பில் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.
அது இன்னும் பரிசீலனை மட்டத்திலேயே இருக்கின்றது. எது எப்படியிருந்த போதிலும், தமிழகத்தினதும் இலங்கைத் தமிழர்களினதும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே பிரதமர் மன்மோகன் சிங்கின் முடிவு அமையும் என்றார்.
அரச காணிகள் தொடர்பான பிணக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடல்
2013/1 இலக்க காணி சுற்றுநிரூபத்திற்கு அமைவாக அரச காணிகளில் குடியிருக்கும் மக்களின் பிணக்குகள் தொடர்பில் அந்தந்த பிரதேச செயலாளர்கள் தீர்வுகளைக் கண்டு வருகின்றனர்.
இருந்த போதிலும் பல பிணக்குகளுக்கு பிரதேச செயலாளர்களால் தீர்வுகள் காணமுடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவேதான் பிரதேச செயலாளர்கள் இவ்வாறான பல இடங்களில் கொள்கை ரீதியான பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் அவ்வாறான பிணக்குகளை எவ்வாறு கொள்கை ரீதியாக தீர்த்து வைப்பது என்பது தொடர்பில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவினால் எற்பாடு செய்யப்பட்ட ஒரு பயிற்சிக் கலந்துரையாடலே எதிர்வரும் 5,6,7 ஆம் திகதிகளில் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக வட மாகாண காணி ஆணையாளர் தயானந்தா, யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் கிளிநொச்சி மவாட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கலந்துரையாடல் குறித்து செய்தியாளர்களிடம் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்கள்,
இவ்வாறான கலந்துரையாடல்கள் காலத்திற்கு காலம் நடைபெறுகிறது எனவும், அந்த வகையிலேயே மேற்படி திகதிகளில் அநுராதபுரத்தில் நடைபெறவிருக்கின்ற கூட்டமும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்ட காணி தொடர்பான பிணக்குகளும், புதன்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட காணி பிணக்குகளும், வியாழக்கிழமை மன்னார், வவுனியா மாவட்ட காணிப் பிணக்குகளும் ஆராயப்படவிருக்கின்றன.
இதனைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறப் போவதில்லை எனவும் இவ்வாறான காணி தொடர்பிலான கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படுகிறது.
இதேவேளை இங்கு கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்,
எதிர்வரும் வாரம் அநுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் காணி தொடர்பான கூட்டமானது, பிரதேச செயலாளர்களால் தீர்வுகள் காண முடியாத அரச காணிகள் தொடர்பான பிணக்குகளுக்கு கொள்கை ரீதியாக எவ்வாறு தீர்வுகளைக் காண்பது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமே நடைபெறவுள்ளது.
மாறாக காணி சுவீகரிப்பு சம்பந்தமான கூட்டம் அதுவல்ல எனத் திட்டவட்டமாக கூறமுடியும்.
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவானது காணி சுவீகரிப்புக்கு ஆதரவாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்யவில்லை. அவர்கள் அதனை எற்றுக்கொள்ளப் போவதும் இல்லை.
கடந்த முப்பது வருடங்களாக வடக்கில் காணிகள் தெடர்பில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்து வைப்பது சம்பந்தமான ஒரு பயிற்சிக் கூட்டமாகவே எதிர்வரும் 5,6,7 ஆம் திகதிகளில் அநுராதபுரத்தில் நடக்கவிருக்கிறது என அவர் தெரிவித்தார்.
இதேவேளை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவிக்கையில்,
நீதியமைச்சின் கீழ் உள்ள இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவானது வடக்கு கிழக்கில் அரச காணிகளில் குடியிருக்கும் மக்களின் பிணக்குகளை தீர்க்கின்ற போது பிரதேச செயலாளர்கள் கொள்கை ரீதியான பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தான் குடியிருக்கும் அரச காணியினை வேறொருவருக்கு விற்பனை செய்வது, மிக குறுகிய காலத்திற்குள் அரச காணியினை பிடித்து குடியிருப்பது உள்ளிட்ட பிணக்குகளுக்கு எவ்வாறு தீர்வுகளை காண்பது தொடர்பில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது எனத் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கு உபசரிப்பை வழங்கி குற்றங்களை மூடி மறைத்து விட முடியாது: ஜே.வி.பி
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டை நடத்துவதன் மூலம் ராஜபக்ச ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்படும் குற்றங்களை மூடி மறைக்க முடியாது என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முக்கியமாக சட்டவிரோதமான நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்த நீக்கப்பட்டமை, சுமார் 11 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை, ரத்துபஸ்வல ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்தமை போன்ற குற்றங்களை அரச தலைவர்களின் மாநாட்டை நடத்துவதால் மறைத்து விட முடியாது.
அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு கூட ஏற்பட்டுள்ள வெள்ளை வான் அச்சுறுத்தலை வெள்ளை துணியை கொண்டு மூடுவதால் மறைக்க முடியாது. இவை அனைத்து வெட்ட வெளிச்சமாகியுள்ளன.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கு உண்ணவும் குடிக்கவும் கொடுத்து, பென்ஸ் கார்களை வழங்கி உபசரித்து, நாடு சுத்தமாக இருக்கின்றது என்பதை காட்டி இவற்றையொல்லாம் மறைத்து விட முடியாது.
இதனால் அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டு விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் அரசாங்கம் தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியப்படுத்துகிறது: சீமான்
இசைப்பிரியாவிற்கு சிங்கள பேரினவாத அரசு இழைத்த கொடூரச் செயல் வெளியாகியுள்ள நிலையில், திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டமை வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சும் சம்பவம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 1-11-2013 அன்று சேலம் வணிகவரித்துறை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் பெருமதிப்பிற்குரிய கொளத்தூர் மணி அவர்களின் கைது செய்யப்பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தங்கை இசைப்பிரியாவிற்கு சிங்கள பேரினாவாத இலங்கை அரசு இழைத்த கொடூரச்செயல்கள் காணொளி சாட்சியமாக இங்கிலாந்தின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டு இருப்பதை கண்டு உலகத் தமிழினம் கொதித்து,வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சூழலில் கொளத்தூர் மணி அவர்களை தமிழக காவல்துறை கைது செய்திருப்பது வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வாக அமைந்து விட்டது.
பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற வன்முறை செயல்களை நாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஆனால் தன் இனம் அழிந்து, தமிழீழம் சுடுகாடாக மாற்றப்பட்ட சூழலில், மனிதத்தன்மையற்ற கொடூரங்களை இழைத்த சிங்கள பேரினவாத அரசினை நியாயப்படுத்தும் முகமாக நடைபெறும் பொதுநலவய மாநாட்டில் 8 கோடி தமிழர்கள் வாழும் இந்தியா கலந்துக் கொள்ள முடிவு எடுத்திருப்பதாக வருகின்ற செய்திகள் இளைய சமூகத்தினரை வன்முறை பாதையில் திருப்புவதற்கான அடிப்படையாக அமைகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சியினரும் ஒன்று சேர்ந்து கோரிக்கை விடுத்தும் கூட, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டும் கூட மத்திய காங்கிரசு அரசு தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியப்படுத்தி வருகிறது.
நாம் கத்தி கதறினாலும் கேட்காத இந்திய நாட்டின் செவிட்டுச் செவிகளை வன்முறைப் பாதையில் தான் திறக்கலாம் என்று நம்புகிற அளவிற்கு தமிழின இளையோரை இந்தியப் பெருநாடு விரக்திக்கு ஆளாக்கி இருக்கிறது என்பதை ஆட்சியாளர்களும், தலைவர்களும் உணர்ந்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நாடறிந்த தலைவர். அவரை நட்டநடு இரவில் கைது செய்ய வேண்டிய அவசரமும் ,அவசியமும் என்ன என்பதை தமிழக காவல் துறை விளக்கவேண்டும்.
இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவய மாநாட்டிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் கொளத்தூர் மணி அவர்களின் போராட்டங்களை முடக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அவரை நள்ளிரவு 2 மணிக்கு அவசர அவசரமாக தமிழக காவல்துறை கைது செய்து இருக்கிறது.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை கைது செய்திருக்கிற தமிழக அரசின் நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.