நாட்டின் வரலாற்றில் நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பிரிவினைவாத நோக்கில் செய்த அழிவுகளை விட அதிகமான அழிவுகளை செய்துள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போது அவர் இதனை கூறினார்.
இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும், தொழிற்கல்வி தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை.
அந்த கல்விமுறை தொடர்பில் அறியாமை அல்லது போதிய அளவில் புரிதல் இன்மை அல்லது தெரிந்துக் கொள்வதற்கான ஆர்வம் இன்மை போன்ற விடயங்களை சுட்டிக்காட்டலாம்.
தொழிற்கல்வி பற்றி சிந்திக்காமல், பல்கலைக்கழகம் சென்று வரவேண்டும் என்ற நோக்கம் மாத்திரமே இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் கல்வித்துறையில் முன்னேற்றங்களை செய்யாததன் மூலம் நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தியுள்ளனர்.
எமது நாடு பின்னடைவான நிலைமையில் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சோமாலியா, எத்தியோப்பியா, சூடான் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஒவ்வொன்றும் வேறுப்பட்டது.
இதனால் எமது நாட்டின் பின்னடைவை வாத பிரதிவாதங்கள் ரீதியாகஏற்றுக்கொள்ள முடியாது.
சுகாதாரம் போன்ற பொதுவசதிககளை எடுத்து கொண்டால் இலங்கை உயர்ந்த நிலையில் உள்ளது. இந்த விடயங்களில் எத்தியோப்பிய, சோமாலியா போன்ற நாடுகள் மிகவும் கீழ் நிலையில் உள்ளன.
எமது நாட்டில் தொழில் கல்வியில் முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. 1893 ஆம் ஆண்டு தொழில் பயிற்சி கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் பின்னர் 100 வருடங்கள் கழிந்தே அதனை சீர்செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
குமுதினிப் படுகொலை நினைவுத் தூபி இடித்தழிப்பு: நெடுந்தீவில் ஈ.பி.டி.பி அட்டகாசம்
இலங்கை கடற்படையால் குமுதினிப் படகில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நெடுந்தீவில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை இடித்து அழிக்கும் நடவடிக்கைகளில் இலங்கைப் புலனாய்வுத் துறையும் ஈ.பி.டி.பியும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
1985ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிற்கும் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கும இடையில் குமுதினிப் படகில் சென்று கொண்டிருந்த பொது மக்கள் மீது இலங்கை கடற்படையினரால் காட்டுமிராட்டித் தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதில் 36 பேர் கடற்படையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் நினைவு தொடர்பாக நெடுந்தீவு மாவிலி துறைமுகப்பகுதியில் குமுதினி படுகொலை நினைவுத் தூபியும் மண்டமும் அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஈ.பி.டி.பி வசமுள்ள நெடுந்தீவு பிரதேச சபையும் இலங்கைப் புலனாய்வுத் துறையும் இணைந்து நினைவு மண்டபத்தை முற்றாக இடித்து அழித்துள்ளனர்.
அத்தோடு நினைவுத் தூபியையும் அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாகத் தெரியவருகின்றது.
உறவுகளை இழந்தவர்கள் கடந்த 28 வருடங்களாக குறித்த இடத்தில் நினைவு அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர். நினைவு தூபி இடிக்கப்பட்டதால் இவர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டால் தாம் கொலை செய்யப்படுவோம் என்ற காரணத்தினால் நெடுந்தீவு மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
அத்தோடு எஞ்சிய இடத்தையாவது தடுத்து நிறுத்துமாறு பொது மக்கள் கோரியுள்ளனர்.
கொழும்பு கொமன்வெல்த் மாநாடு: பிரதமர் பங்கேற்றால் விளைவுகளை காங்கிரஸ் சந்திக்கும்! தமிழக கட்சி தலைவர்கள்
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால் அதற்கான விளைவுகளை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் என்றும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறும் திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை:
கருணாநிதி:
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் செல்லக்கூடாது என்று தமிழ் உணர்வு படைத்த எல்லாக் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.
தமிழகச் சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் மாநாட்டுக்குப் பிரதமர் செல்ல உள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.
தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்கள் நடத்தும் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொண்டால், அதனுடைய விளைவுகளை அவர் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரிடும். வினை விதைத்தவர்கள், வினை அறுப்பார்கள்.
பிரதமர் மட்டுமல்லாது, இந்தியாவைச் சார்ந்த துரும்புகூட இந்த மாநாட்டுக்குச் செல்லக்கூடாது.
விஜயகாந்த்:
தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங் செயல்படுவது வேதனைக்குரியது.
கொமன்வெல்த் என்பது சர்வதேச அமைப்பு, அதனால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்போம் என்று கூறுவது மனித உரிமை மீறல்களை இந்தியா அனுமதிக்கிறது என்றுதான் பொருள்படும்.
கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது இந்தியா மட்டும் எந்தக் காரணத்தையாவது கூறிக்கொண்டு, மாநாட்டில் பங்கேற்றாலும், அது தமிழக மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்துவதாகவே அமையும்.
எனவே, பிரதமர் தன் முடிவினை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
ராமதாஸ்:
இந்தியாவின் பாதுகாப்புக்கும், அண்டை நாடுகளுடனான உறவைப் பேண வேண்டியது அவசியம் என்பதாலும் இந்த முடிவை எடுப்பதாகக் காங்கிரஸ் கூறுகிறது.
இலங்கை எப்போதும் இந்தியாவுக்குச் சாதகமாகவே செயல்பட்டது இல்லை.
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க தீர்மானித்திருப்பதை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.
பிரதமர் தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
தொல்.திருமாவளவன்:
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதை பிரதமர் தவிர்க்க வேண்டும்.
இந்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்திக்கும்.
காங்கிரஸ் அதன் முடிவைத் திரும்ப பெறக் கோரி நவம்பர் 3ம் திகதி எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
வத்தேகம பிரதேசத்தில் பண்டைய நாணயக் குற்றிகள் மீட்பு - புத்தளம் பிரதேசத்தில் போலி நாணயத்தாள்
கண்டி வத்தேகம பிரதேசத்தில் பண்டைய நாணயக் குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.
வத்தேகம பாரதீ தமிழ் மஹா வித்தியாலத்தின் பின் பகுதியிலிருந்து இந்தப் பண்டைய நாணயக் குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.
1870 மற்றும் 1872ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நாணயக் குற்றிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
அதிபரும் மாணவர்களும் மண்ணை வெட்டி எடுத்த போது இந்தப் பணம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நாணயக் குற்றிகளை தொல்பொருள் ஆய்வாளர்களிடம் வத்தேகம பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
புத்தளம் பிரதேசத்தில் போலி நாணயத்தாள்
புத்தளம் பிரதேசத்தில் போலி நாணத்தாள் மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திலிருந்து வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட பணத் தொகுதியில் இந்த போலி நாணயத்தாள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் நீதிமன்றின் நாளாந்த நடவடிக்கைகளின் போது திரட்டப்பட்ட பணம் வங்கியொன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த பணத் தொகுதியில் இரண்டாயிரம் ரூபா போலி நாணத்தாள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அபராதம் அல்லது பிணைப் பணமாக செலுத்தப்பட்ட தொகையில் இந்த போலி நாணயத்தாள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பணத்தை வைப்புச் செய்த நீதிமன்ற காசாளரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இராணுவத்தை வெளியேற்றுமாறு மாகாண சபையினால் கோரிக்கை விடுக்க முடியாது!- உதய கம்மன்பில
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுஇமாறு வட மாகாண சபையினால் கோரிக்கை விடுக்க முடியாது. அது மாகாண சபை விடயதானத்துக்கு அப்பாற்பட்டது என்பதைக்கூட கூட்டமைப்பினால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவது அரசாங்கத்தின் கடமை என்று வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உதய கம்மன்பில இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
வட மாகாண சபையை கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கும் என்பது எமக்குத் தெரியும். எனவேதான் வடக்குத் தேர்தலுக்கு முன்னதாக 13வது திருத்தச் சட்டத்தின் சில அதிகாரங்களை நீக்குமாறு வலியுறுத்தி வந்தோம்.
இதேவேளை 13 வது திருத்தச் சட்டத்தில் இல்லாத விடயங்களையே வட மாகாண முதலமைச்சர் தனது முதல் உரையில் கூறியுள்ளார்.
அதாவது வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு வட மாகாண சபையினால் கோரிக்கை விடுக்க முடியாது. அது மாகாண சபை விடயதானத்துக்கு அப்பாற்பட்டது.
இராணுவம் எங்கு இருக்கவேண்டும் என்பதனை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதியே தீர்மானிப்பார். அதில் எவரும் தலையிட முடியாது. இது மாகாண சபையுடன் தொடர்புறாத விடயம்.
இது இவ்வாறிருக்க மாகாண சபைக்குரிய ஆளுநரை நியமிப்பது ஜனாதிபதியாகும். ஜனாதிபதியின் பிரதிநிதியாகவே ஆளுநர் நியமிக்கப்படுகின்றார். ஜனாதிபதி தனக்கு தேவையானவரையே வட மாகாண சபையின் ஆளுநராக நியமிப்பார்.
ஆளுநரை விலக்க வேண்டுமாயின் அதற்கென அரசியலமைப்பில் ஒரு முறைமை காணப்படுகின்றது. அதனை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம். அதனைவிடுத்து ஆளுநரை விலக்கவேண்டும் என்று கோருவதில் அர்த்தம் இல்லை.
சட்டம் தெரிந்தவர்கள் வடக்கு மாகாண சபையில் இருந்த போதிலும் இந்த விடயம் தெரியாமல் உள்ளனர்.
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நாய்கள் தொல்லை
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கட்டக்காலி நாய்களினால் தொல்லை ஏற்பட்டுள்ளது.
கட்டாக்காலி நாய்களின் சஞ்சரிப்பினால் இதுவரையில் இரண்டு வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிவேக நெடுஞ்சாலையின் நிர்வாக உயரதிகாரி பீ.கே. ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் வலைகளின் மூலம் பிடிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடந்து சென்ற நபர் ஒருவர் சந்கேத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரில் சென்ற நபர் காரிலிருந்து இறங்கி பாதையில் நடந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விக்னேஸ்வரனின் கடிதம் கிடைக்கப்பெற்றது: இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் கடிதம் கிடைக்கப் பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயிட் அக்பாருடின் ( Syed Akbaruddin) தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி மாலை கடிதம் கிடைக்கப்பெற்றது. கடிதத்தின் உள்ளடக்கம் பற்றிய விபரங்களை வெளியிட முடியாது.
வடக்கில் மாகாணசபை தேர்தல் நடாத்தியமைக்கு விக்னேஸ்வரன் கடிதத்தில் நன்றி தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பு கடிதம் மற்றும் ஏனைய பிற காரணிகளின் அடிப்படையில் அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என அக்பருடின் தெரிவித்துள்ளார்.
தம்புள்ள காளிகோயிலை இடித்தழித்தது காட்டுமிராண்டித் தனமானது!- இந்துமகா சபை மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா கண்டனம்
தம்புள்ள காளிகோயில் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளமையானது காட்டுமிராண்டித்தனமான ஒரு செயற்பாடு என்று வர்ணித்துள்ள இந்து மகா சபை, இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஒருபோதும் நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
அந்நியராட்சிக் காலமான போர்த்துக்கீசர் காலத்தில் நாட்டிலிருந்த பல ஆலயங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
அதே போன்றதொரு நிலமையையே தம்புள்ள சம்பவம் நினைவுபடுத்துவதாகவும் இந்தச் சம்பவத்தை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் இந்து மகா சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த விடயத்தில் அரசாங்கமும் பௌத்த சாசன அமைச்சும் உடனடியாகத் தலையிட்டு அந்த ஆலயத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேற்படி சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இந்து மகா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுதேச மதமாகிய இந்து மத ஆலயத்தை அழித்துவிட்டு அந்த இடத்தில் புனித மையம் என்ற போர்வையில் மாற்று மதச் சின்னமொன்றை அமைக்க முற்பட்டுள்ள செயலானது மிகவும் அநாகரிகமான ஒரு செயற்பாடாகும். மனித நாகரிகம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், பல்லின மக்கள் வாழுகின்ற எமது நாட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மனிதத்தை நேசிக்கின்ற, மதத்தை நேசிக்கின்ற எவருமே இந்த அநாகரிக செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தச் செயற்பாடானது நாட்டிலுள்ள அனைத்து இந்து மக்களையும் அவமதிக்கும் செயற்பாடாகும். இதனால் அனைத்து இந்து மக்களின் மனங்களும் வேதனைப்படுத்தப்பட்டுள்ளன.
தம்புள்ள காளிகோயில் தொடர்பான விடயம் கடந்த சில மாதங்களாக இழுபறி நிலையில் இருந்த போதிலும் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இது இந்த நாட்டிலுள்ள ஒட்டுமொத்த இந்து மக்களையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.
எனவே, தம்புள்ள காளிகோயில் இடிக்கப்பட்ட விடயம் தொடர்பாக பௌத்த சாசன அமைச்சு உடனடியாகத் தலையிட்டு தம்புள்ள காளிகோயில் சூழலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு அந்த ஆலயத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் அந்த இடத்தில் வசித்த இந்து மக்களை மீண்டும் அதே இடத்தில் குடியிருப்பதற்கான நிலமையையும் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலமே நாட்டிலுள்ள பல இலட்சக்கணக்கான இந்து மக்களின் மனங்களில் நல்லெண்ணத்தை வளர்க்க முடியும்.
தம்புள்ளை காளிகோயில் மீதான காட்டு மிராண்டித்தனமான தாக்குதலும் சிறுபான்மை மக்களின் மதத்தலங்களின் மீதான திட்டமிடப்பட்ட அழிப்பும்
கடந்த காலங்களில் பல தடவைகள் திட்டமிட்ட தாக்குதலுக்கிலக்கான தம்புள்ளை காளிகோயிலை பாதுகாக்க வேண்டும் என்று பல தடவைகள் கோரிக்கைகள் விடப்பட்டும் எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் திட்டமிட்டு அலட்சியம் செய்யப்பட்டிருந்த இந்தவேளையல் திடீரென கடந்த 29ம் திகதி அதிகாலை மதம்பிடித்த பொளத்த பிக்கு ஒருவரின் தலமையில் வந்த காடையர் குழுவினர்களினால் அநாகீகமான முறையில் இந்துக்களின் மனதினை புண்படுத்தும் கைங்கரியம் அரங்கேறியிருப்பதை எந்த மதத்தினைச் சேர்ந்த சாதாரண மக்களால்கூட ஜீரணித்துக் கொள்ள முடியாதுள்ளது.
அதுவும் அதற்கு புத்தரின் புனித போதனையை கற்றறிந்த பௌத்தபிக்கு ஒருவர் தலைமைதாங்கியுள்ளார் என்பதனை அறியும் போது புத்தரின் போதனையை நேசிக்கும் மக்கள் அனைவரும் வேதனை அடைவார்கள் என்பது யதார்த்தம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை காளிகோயில் மீதான தாக்குதலைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேதான் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
ஏற்கனவே தம்புள்ளையில் இஸ்லாமியர்களின் புனித பள்ளிவாசல் தாக்கப்பட்டது. இதற்போது இந்து மக்களின் புனிதமானதும் சக்தியின் அம்சம் எனக் கொள்ளப் படுவதுமான காளி அம்மன் கோயில் தரைமட்டமாக்கப்பட்டது.
இதுதானா இன்றைய சிறுபன்மை மக்களின் மதத்தலங்களின் மீதான அரசின் பாதுகாப்பு? ஏற்கனவே தாக்குதல்கள் நடாத்தப்பட்ட பல பள்ளிவாசல்கள் மற்றும் இந்து ஆலயங்கள் மீதான சம்பவங்கள் தொடர்பானவர்களை இற்றைவரை பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடிக்காமல் உள்ளதற்கான காரணம் என்ன? இதுதான் எமது நாட்டின் ஜனநாயகமா?
எனவே மேற்படி சம்பவங்கள் மேலும் மேலும் தொடர்வதை வன்மையாக கண்டிப்பதோடு, இச்சம்பவங்களோடு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் எம்மதங்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அவசரமாகவும், அவசியமாகவும் பாதுகாப்புதுறை மேற்கொள்வதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு தகுந்த தண்டனையையும் வழங்க வேண்டியது.
இன்றைய அரசின் கட்டாய கடப்பாடாகும். மேலும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான மதத்தலங்களில் மீதான வன்முறை தாக்குதல்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் சம்பந்தப் பட்டவர்களையே சாரும். என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கொடிய பாம்பிடமிருந்து தாயின் உயிரைக் காப்பாற்றிய அதிசய சிசு
கொடிய விசமுடைய பாம்பு ஒன்றிடமிருந்து தாயின் உயிரைக் காத்த அதிசய சிசு ஒன்று தொடர்பிலான தகவல் குருணாகல் வெல்லாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
தாயைக் கொத்துவதற்கு தயாரான பாம்பை ஏழு மாத சிசுவொன்று கையால் பிடித்து, தாயைக் காப்பற்றியுள்ளது.
வெல்லாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சிசுவை சுமந்து வேலி ஓரத்திற்கு சென்ற தாயை வேலியில் இருந்து பாம்பு கொத்த முற்சித்த போது, சிசு அதன் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு சத்தமாக அழுதுள்ளது.
இதனால் பாம்பினால் தாயைக் கொத்த முடியவில்லை.
பாம்பு சிசுவின் கையை இறுக்கமாக சுற்றிக் கொண்டுள்ளது.
சிசுவின் கையிலிருக்கும் பாம்பை பிரித்தெடுக்க அயலவர்கள் முயற்சித்துள்ளனர். எனினும், பாம்பின் ஒரு பகுதியை மக்கள் இழுத்து எடுத்த போதிலும், ஒரு பகுதி சிசுவின் கையைப் பற்றி சுற்றிய நிலையில் காணப்பட்டது.
இதனால் பதற்றமடைந்த கிராம மக்கள் சிசுவை வைத்தியசாலைக்கு எடுத்தச் சென்றுள்ளனர்.
விசம் குழந்தைக்கு ஏறாமல் இருக்கும் வகையில் கருவிகளைக் கொண்டு பாம்பை கையிலிருந்து அகற்றி, சிசுவை குருணாகல் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்போது குறித்த சிசுவிற்கு ஆபத்து இல்லை எனவும், கொடிய விசமுடைய பாம்பு ஒன்றின் தலையை சிசு இறுக்கமாக பற்றிப் பிடித்துள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டி.ஐ.ஜி கொலை செய்கிறார்! பிக்குகள் பாதாள உலகத்தை வழிநடத்துகின்றனர்! இதுதான் ஆசியாவின் ஆச்சரியம்!
பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொலைகளை செய்கின்றார், பௌத்த பிக்குகள் பாதாள உலக குழுக்களை வழிநடத்துகின்றனர், தந்தை மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறார் என்ன ஆச்சரியம் இது என ஜே.வி.பியின் தென் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐந்து நாட்களுக்கு ஒன்று என்ற கணக்கில் மதுபான நிலையங்கள் திறக்கப்படுகின்றன. ஆறு நாட்களுக்கு ஒன்று என்ற கணக்கில் நாட்டில் உள்ள பாடசாலைகள் மூடப்படுகின்றன.
2006 ஆம் ஆண்டு 35, 2007 ஆம் ஆண்டு 36, 2009 ஆம் ஆண்டு 40, 2010 ஆம் ஆண்டு 51, 2011 ஆம் ஆண்டு 41, 2012 ஆம் ஆண்டு 35 என மதுபான நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆறு வருடங்களில் 635 மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால் இலங்கையில் ஆறு நாட்களுக்கு ஒன்று என்ற கணக்கில் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன.
தனது மனைவியை 25 ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைத்த நாடு இது.
இந்தியாவுக்கு தங்கத்தை கொண்டு செல்வதற்காக இலங்கையர்கள் தமது பின்புறத்தை 10 ஆயிரம் ரூபாவுக்கு குத்தகைக்கு கொடுக்கின்றனர்.
நினைத்து பார்த்தால் வெட்கப்பட வேண்டியதாக உள்ளது.
இப்படிதான் இலங்கை என்ற நாடு தற்போதுள்ளது.
கொள்கைகள் பற்றி பேசி மாத்திரம் பிரயோசனமில்லை.
ஆடைகள், சாரிகள், மண் வெட்டிகள், உள் அடைகள் விநியோகிப்பதே அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது.
இது தான் ஆசியாவின் ஆச்சரியம் என்றார்.