முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நளினியும், முருகனும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகிறார்கள். இன்று காலை 7.45 மணிக்கு முருகன் பொலிஸ் பாதுகாப்புடன் வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நளினியை சந்தித்து பேசினார்.
அப்போது முருகனிடம் நளினி தன்னை சிறையில் பார்க்க வருபவர்களை சரியாக பார்க்க அனுமதிப்பது இல்லை என்றும் மேலும் தனக்கு வழங்கப்படும் சாப்பாடு சரியில்லை என்றும் தெரிவித்தார். இதை கேட்ட முருகன் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் ஜெயிலில் இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முருகன் கூறினார்.
பின்னர் அவர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வேலூர் ஆண்கள் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்தார். மதிய உணவு சாப்பிட மறுத்தார்.
சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் வேலூர் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
மேல் மாகாண சபைத் தேர்தலில் ஹிருணிக்கா போட்டியிட உள்ளார்?
எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிக்கா பிரேமச்சந்திர போட்டியிட தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அவர் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
ஹிருணிக்காவின் தந்தையான பிரேமச்சந்திர கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது முல்லேரியா பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது கொலையை அடுத்து நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகள் மற்றும் அரசியல் துறையில் அடிக்கடி ஹிருணிக்காவின் பெயர் பலமாக பேசப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு இனத்திற்கும் தனித் தனியான பொலிஸ் அமைக்க முடியாது!– பொலிஸ்மா அதிபர் இளங்கக்கோன்
ஒவ்வொரு இனத்திற்கும் தனித் தனியான பொலிஸ் அமைக்க முடியாது என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து இன மக்களையும் உள்ளடக்கும் வகையில் பொலிஸ் திணைக்களம் சேவையாற்றும்.
ஒவ்வொரு இனத்திற்கும் தேவையான வகையில் பொலிஸ் பிரிவுகள் அமைக்க முடியாது.
வடக்கு பொலிஸ் நிலையங்களில் குறைந்தபட்சம் மூன்று நான்கு தமிழ் உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இரண்டாயிரம் தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தாகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே தனியான ஓர் இனத்திற்கு பொலிஸ் நிலையம் அமைக்கும் சாத்தியம் கிடையாது என பொலிஸ் மா அதிபர் இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
மதுவரி திணைக்கள அதிகாரி போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் கைது! - மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை ஒருவர் தற்கொலை
மதுவரி திணைக்கள அதிகாரிகள் போல் நடித்து மக்களுக்கு தொல்லை கொடுத்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு வந்த இரண்டு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் மினுவங்கொட யாகொடமுல்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக மினுவங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு பணப் பைகள், 8 சொல்லிடப் பேசிகள், பெண்கள் பயன்படுத்தும் கைப்பை, இரு கூரிய ஆயுதங்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணம், போலி பதிவு இலக்கத்தை கொண்ட மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஜாஎல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் இன்று மினுவங்ககொட நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை ஒருவர் தற்கொலை
சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பெற்ற மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலை தேடி தாய் கொழும்பு சென்ற சந்தர்ப்பத்தில், 18 வயது மகளை ஆறு நாட்களாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.
உயிரிழந்த நபர் 40 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 வயது சிறுமி மொனராகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 5ம் திகதி முதல் தந்தை இவ்வாறு பாலியல் ரிதீயாக துன்புறுத்தியுள்ளார் எனத் தெரியவருகிறது.
தாயிடம் உண்மையைக் கூறி விடுவார் என்ற அச்சம் காரணமாக தந்தை இவ்வாறு நஞ்சு அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாவற்குழியில் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களை நிறுத்த வேண்டும்!- தவிசாளர் சிவஞானம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதின் முதல் கட்டமாக நாவற்குழியில் மேற்கொண்டு வருகின்ற குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வடமாகாண சபையின் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண சபையானது இன்னும் ஒரு வருடத்தில் நாட்டின் ஏனைய மாகாண சபைகளுக்கு முன்னுதாரணமாக திகழும். மாகாண சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டமையின் மூலம் ஜனநாயகம் நிலவுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கைதடியில் நேற்று நடைபெற்ற வடமாகாண சபையின் கன்னியமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
வடமாகாணசபை என்பது இந்த நாட்டின் தமிழ் இனத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய ஒரு கட்டமைப்பாகத் திகழ்கிறது. எனவே, இந்த முதலாவது மாகாணசபையில் அங்கம் வகிக்கும் நாம் அனைவரும் வரலாறு சார்ந்தவர்களாகவே காணப்படுகிறோம்.
என்னை பேரவைத் தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்தமைக்காக முதற்கண் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என் மீது நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு பாத்திரமாக செயற்படுவேன் என்று இந்த இடத்தில் உறுதிபடத் தெரிவிக்கின்றேன். இத்தக் கதிரை நிச்சயமாக நடுநிலைமையானதாகவே இருக்கும்.
இன்றைய அமர்வில் 18க்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பேசுவதற்கும் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும் இடமளித்துள்ளோம். ஆனால், இதேநிலை தொடர்ந்தும் நீடிக்கும் எனக் கூறமுடியாது.
இந்தசபையானது நாங்கள் தன்னாட்சிக்கு தகுதியுள்ளவர்கள் என்பதை உலகத்திற்கு கூறுவதற்கான அடித்தளமாக அமையவேண்டும். எனவே, இருதரப்பினரும் இந்த சபையில் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும்.
நாங்கள் இன்னுமொரு வருடத்தில் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும். அதற்கேற்ற வகையில் இந்த சபையில் நாம் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். எமது உறுப்பினர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
நாங்கள் ஒரு இனத்தின் பிரதிநிதிகள், ஒரு கலாசாரத்தின் பிரதிநிதிகள், ஒரு அரசியலை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பவர்களின் பிரதிநிதிகள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.
இதேவேளை, இந்த சபையில் அங்கம் வகிக்கின்ற இரண்டு சிங்களப் பிரதிநிதிகளுடன் நாங்கள் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்படுவோம் என்றும் இங்கு உறுதிபடத் தெரிவிக்கின்றோம் இதேவேளை முதலமைச்சர் தனதுரையில் காணி தொடர்பில் பேசினார்.
எமது தலைவர்கள் காலத்துக்குக் காலம் நீட்டிய நட்புக்கரங்களை அரசாங்கங்கள் புறந்தள்ளியே வந்துள்ளன. எமது முதலமைச்சர் இந்த அரசாங்கத்திற்கு ஒரு நட்புக்கரத்தை நீட்டியுள்ளார். அந்த நட்புக்கரத்தை அரசாங்கம் பற்றிக்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதன் முதல் கட்டமாக நாவற்குழியில் மேற்கொண்டு வருகின்ற குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் என்றார்.
மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் இலங்கைக்கு வலுவான செய்தியை மலேசியா வழங்க முடியும்: லிம் குவான் எங்
இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டு கொழும்பு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மலேசிய புறக்கணிக்க வேண்டும் என மலேசியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கான பொறுப்புக் கூறும் விடயத்தில் அந்நாடு பிடிவாதமாக இருந்து வரும் நிலையில், மனிதாபிமான எதிர்ப்பை வெளியிட்டு மலேசியா மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என அந்த கட்சியின் செயலாளர் லிம் குவான் எங் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனநாயக செயல் கட்சியின் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என ஐனநாயக செயல் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானத்துள்ளது.
மனித உரிமை, ஜனநாயகம், நீதி மற்றும் நல்லாட்சி போன்றவற்றை பொதுநலவாய அமைப்பு முன்னிலைப்படுத்துகிறது. இவற்று எதிராக செயற்பட்ட தென்னாபிரிக்கா, பிஜி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடத்தப்படுவது ஒரு சரியான முடிவல்ல என ஜனநாயக செயல் கட்சி எண்ணுகிறது.
2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போரில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக இலங்கை அரசு இதுவரை சட்டரீதியான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
அதேவேளை கொலைகள், பாலியல் வல்லுறவுகள் மற்றும் காணாமல் போன சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இலங்கை அரசுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளன.
எனினும் இலங்கை அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை எந்த வகையிலான விசாரணைகளையும் நடத்தவில்லை.
இலங்கையின் மனித உரிமை கவலைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுக்க தவறினால் ஐ.நா சர்வதேச விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடலாம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரித்திருந்தார்.
மனித உரிமைகள் மீறல் மற்றும் ஜனநாயக வீழ்ச்சி ஆகியவற்றை காரணம் காட்டி கனடா, இந்தியா ஆகிய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்கவுள்ளன. கென்யாவும் புறக்கணிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
மலேசியா இந்த மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் பொதுநலவாயம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் மனித உரிமை மீறல்களை சகித்து கொள்ளாது என்ற வலுவான செய்தியை கொழும்புக்கு வழங்க முடியும் என லிம் குவான் எங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
1974ம் ஆண்டில் வடபகுதியில் தனது இராணுவப் பணி குறித்து நினைவு கூர்ந்த பாதுகாப்பு செயலாளர்.
1974 ஆம் ஆண்டு இரண்டாம் லெப்டினன்டாக பலாலி முகாமில் சேவையாற்றியமை குறித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நினைவு கூர்ந்துள்ளார்.
தமிழ்த் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை கடந்த புதன்கிழமை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது வடமாகாணத்தில் தான் சேவையாற்றிய காலம் குறித்தும் அங்கு தனது அனுபவங்கள் தொடர்பிலும் அவர் சுவாரசியமாக கருத்துக்களை பரிமாறினார்.
இதன் போது வடமாகாணத்தில் தான் பணியாற்றிய காலம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், 1974 ஆம் ஆண்டு இரண்டாம் லெப்டினனாக பலாலி முகாமில் நான் கடமை புரிந்தேன்.
அப்போது தொடர்பாடலுக்கு நானே பொறுப்பாக இருந்தேன். முள்ளிக்குளம் முதல், சிலாபத்துறை, குதிரைமலை வரை கடற்கரையோரமாக தகவல் தொலைத்தொடர்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன
இங்கு பணியாற்றுபவர்களுக்கு நானே மாதந்தோறும் கொடுப்பனவுகளை கொண்டு சென்று வழங்கிவந்தேன்.
கடற்கரையோரங்களில் கடத்தல்கள், மற்றும் கள்ளத்தோணிகளை கண்காணிப்பதற்காகவே இந்த தொலைத்தொடர்பு மையங்கள் அன்று அமைக்கப்பட்டிருந்தன.
மாதத்தில் இரண்டாவது வாரம் பழைய ஜீப்பொன்றில் நானும் சாரதியும் பணத்தை எடுத்துக் கொண்டு பலாலியிலிருந்து புறப்படுவோம்.
பலாலியிலிருந்து ஆனையிறவு சென்று அங்கிருந்து பரந்தன் வழியாக புதுக்குடியிருப்பு சென்று அங்கிருந்து முல்லைத்தீவு செல்வேன்.
புதுக்குடியிருப்பு வீதி அப்போது கிறவல் வீதியாகவே இருந்தது. அந்த வீதிவழியாகவே நான் முல்லைத்தீவு சென்று அங்கு கொடுப்பனவுகளை வழங்குவேன்.
அன்றைய தினம் இரவு முல்லைத்தீவு முகாமில் தங்குவேன். மறுநாள் கொக்குளாய் சென்று அங்கும் கொடுப்பனவுகள் வழங்குவேன்.
பின்னர் ஒட்டிசுட்டான் வழியாக வவுனியா செல்வேன். வவுனியாவிலும், தொலைத்தொடர்பு இயக்குநர்கள் இருந்தனர்.
அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கிய பின்னர் அன்றைய தினம் அங்குள்ள முகாமில் தங்குவோம்.
மறுநாள் மடு,மன்னார், தள்ளாடி, தலைமன்னார், பேசாலை, சிலாபத்துறை, செல்வேன். அங்கும் கொடுப்பனவுகளை வழங்குவேன்.
அதன் பின்னர் காட்டு வீதி வழியாக குதிரைமலைக்குச் செல்வேன்.
அதன் பின்னர் பூநகரி,வழியாக யாழ்ப்பாணம் திரும்புவேன்.
குதிரைமலையிலிருந்து பூநகரிக்கு வரும் வழி காடுகள் அடர்ந்த பகுதியாகவே காணப்பட்டது.
அந்த வழியாக வரும்போதும் ஒவ்வொரு கிலோமீற்றருக்கு ஒருதடவை வாகனத்தை நிறுத்தி வாகன இயந்திருத்திற்குள் சிக்கியுள்ள வண்ணத்துப்பூச்சிகளை அகற்றவேண்டும்.
ஏனெனில் அவ்வளவு வண்ணத்துப்பூச்சிகள் அந்த வழியில் காணப்பட்டன. அதனைப் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.
இவ்வாறு மாதத்தில் இருவாரங்கள் இந்த கொடுப்பனவு வழங்குவதற்காக நான் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் சென்று வருவது வழக்கமாகும்.
பழைய ஜீப்பிலேயே நான் பயணிப்பேன். அந்த ஜீப் பல இடங்களில் பழுதுபட்டு நிற்கும். அப்போது அப்பகுதி மக்கள் இரண்டு, மூன்று கிலோமீற்றர் வரை தள்ளிவந்து திருத்துவதற்கு உதவுவார்கள் என்று தனது அனுபவத்தை பாதுகாப்பு செயலாளர் பகிர்ந்து கொண்டார்.
லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள்!
தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோர் தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாளாகிய இன்று வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பொதுநலவாய மாநாட்டில் விக்னேஸ்வரன் பங்கேற்கக் கூடாது!
பொதுநலவாய மாநாட்டில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களிடையேயான கலந்துரையாடல் யாழ்.நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மூன்று மணி நேரம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணசபையின் கன்னியமர்வு முடிவடைந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றது.
இதில் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கும் ஒவ்வொரு அமைச்சின் கீழான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன், புளொட் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான த.சித்தார்த்தன், ரெலோவின் செயலாளர் நாயகமும் மாகாணசபை உறுப்பினருமான க.சிவாஜிலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேச்சு மூன்று மணி நேரம் நீடித்தது. தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் வடக்கு மாகாண சபையின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பிலும் இதில் ஆராயப்பட்டது.
அத்துடன் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கெடுப்பது தொடர்பாகவும், இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பங்கேற்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இதன்போது அனைவரும் பொதுநலவாய மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கக் கூடாதென்றே வலியுறுத்தியுள்ளன.
பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன்: சபாநாயகர்
அடுத்த பிரதமராக தனது பெயர் முன்மொழியப்பட்டால் தான் அதனை நிராகரிக்க போவதாக சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது நான் வகித்து வரும் சபாநாயகர் பதவி எனக்கு போதுமானது. பிரதமர் பதவியை நான் விரும்பவில்லை.
தேர்தலில் போட்டியிட்டு பதவிகளுக்கு தெரிவுசெய்யப்பட வேண்டுமேயன்றி, நியமனங்கள் வழியாக பதவிகளை பெறுவது பெருத்தமற்றது.
மக்களுடன் நெருக்கமான வேலை செய்யக் கூடிய சாதாரண நாடாளுமன்ற பதவியில் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை நான் பெரிதும் விரும்புவேன் என்றார்.