ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்
21 Apr,2023
அரேபிய தீபகற்ப நாடான ஏமன் கடந்த சில ஆண்டுகளாக பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அந்நாட்டில் தீவிரமாக இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், 2014ஆம் ஆண்டு அரசை கவிழ்த்து அகற்றியது. தொடர்ந்து ஈரான் நாட்டின் துணையுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனை ஆட்சி செய்து வருகின்றனர்.
உலகின் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய இந்த உள்நாட்டு கிளர்ச்சியில் அந்நாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என 1.5 லட்சம் பேர் பலியானார்கள். போர் பாதிப்பு தாக்கம் காரணமாக அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் கோர வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். அந்நாட்டின் 3இல் 2 பங்கு மக்கள் அடிப்படை தேவைகள் கூட இல்லாதவர்களாக உள்ளனர்.
இப்படியிருக்க, புனித ரம்ஜான் மாதம் தற்போது நடைபெறும் நிலையில், ஏமன் தலைநகரான சனாவில் ஏழை மக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வுக்கு அந்நாட்டு வர்த்தகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சரியான ஏற்பாடுகளை அரசு நிர்வாகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. உரிய திட்டமிடல் இல்லாத காரணத்தால், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரளாக அங்கு கூடியுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 85 பேர் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் படுயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது. உயிரிழப்பு மற்றும் பாதிப்பு குறித்து தெளிவான விவரங்கள் பின்னர் தான் தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்து குழு அமைக்கப்படும் என ஹவுதி அரசியல் தலைவர் மஹதி - அல்- மஸ்ஹத் தெரிவித்துள்ளார்.