77 நாடுகளில் ஒமைக்ரான்.. நினைத்துப் பார்க்காத வேகத்தில் பரவுகிறது - உலக சுகாதார அமைப்பு
15 Dec,2021
தற்போதைய அளவில் 77 நாடுகளில் பரவியிருக்கும் ஒமைக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததை விடவும் மிக வேகமாக பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பு கவலையடைந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை பாடாய்ப்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, தடுப்பூசிகளின் துணையுடன் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் ஒமைக்ரான் எனும் உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று படுபயங்கரமான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் செய்தியாளர்களிடையே பேசும்போது, “தற்போதைய நேரத்தின்படி 77 நாடுகளில் ஒமைக்ரான்பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கண்டுபிடிக்கப்படாத நாடுகளிலும் கூட ஒமைக்ரான் பரவியிருக்கலாம்.
இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட டெல்டா உட்பட எந்த பிறழ்வும் இப்படி ஒரு வேகத்தில் பரவியதை நாங்கள் பார்க்கவில்லை. நினைத்து பார்த்திராத வேகத்தில் பரவும் ஒமைக்ரானை சில நாடுகள் குறைத்து மதிப்பிடுகின்றனர். ஒமைக்ரான் கடுமையான பாதிப்பை குறைந்த அளவில் ஏற்படுத்தினாலும், அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் மீண்டும் கையாள முடியாத வகையில் சுகாதார அமைப்புகளை மூழ்கடிக்கக்கூடும்.
தடுப்பூசி மட்டுமே ஒமைக்ரானை தடுக்க முடியாது. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, கைகளை அவ்வப்போது சுத்தம் செய்தல் போன்றவற்றை கடுமையாக பின்பற்ற வேண்டும். மேலும் தடுப்பூசி திறனை கணிசமான அளவில் ஒமைக்ரான் குறைப்பதாக சில தடுப்பூசி நிறுவனங்கள் கண்டறிந்துள்ளது, அதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இந்தியாவில் இதுவரை 53 பேருக்கு ஒமைக்ரான் பரவியிருக்கிறது. நாட்டிலேயே அதிக அளவாக மகாராஷ்டிராவில் 28 பேருக்கு ஓமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் மும்பையைச் சேர்ந்த 7 பேர் எந்த சர்வதேச விமான பயணமும் மேற்கொண்டவர்கள் அல்ல என்பது கவனிக்கத்தக்கது.