ஐரோப்பாவில் மையம் கொண்ட கொரோனா வைரஸ் - வேகமெடுக்கும் தொற்று எண்ணிக்கை
12 Nov,2021
ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளது
ஐரோப்பாவில் பரவலாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியது. கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பெருந்தொற்றாக பரவி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் இருந்தது. கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதன்பின்னரே பல்வேறு நாடுகள் ஊரடங்குகளில் தளர்வுகளை ஏற்படுத்தியது. உருமாறிய டெல்வா வகை வைரஸ் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. கொரோனாவுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அதனை தற்போது சமாளிக்க முடிகிறது.
இந்நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா மையம் கொண்டுள்ளது. ரஷ்யா, இங்கிலாந்து ஜெர்மன் ஆகிய நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. உருமாறிய டெல்டா வைரஸால் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. உக்ரைன், ஆஸ்திரியா, ரஷியா ஆகிய நாடுகளில் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாதிப்பு, டெல்டா வைரஸால் ஏற்பட்டது என தெரிய வந்துள்ளது.
ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 50 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஒரே நாளில் 235 பேர் பலியானது அதிர்ச்சியளிக்கிறது. ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 40 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. ஒரே நாளில் ரஷ்யாவில் 1,237 பேர் இறந்துள்ளனர். கடந்த சில வாரங்களில் ரஷ்யாவில் கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளது. இங்கு அதிகமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
ரோமனியா, லாட்வியா , குரோஷியா, ஹாலாந்து நாடுகளில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கையில் அந்நாட்டு அரசுகள் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு தளர்வுகளால் தான் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.