ஆக்சிஜன் தடைப்பட்டதால் 17 நோயாளிகள் பரிதாப உயிரிழப்பு
10 Sep,2021
மெக்சிகோவில் மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்ததால், ஆக்சிஜன் வினியோகம் தடைப்பட்டு 17 நோயாளிகள் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துலா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் புதன்கிழமை அதிகாலை வெள்ளம் புகுந்தது. அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் உட்பட 56 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த இந்த மருத்துவமனைக்குள், முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது.
இதையடுத்து, மருத்துவமனையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டதுடன் ஆக்சிஜன் வினியோகமும் தடைப்பட்டது. இதனால், அங்கு சிகிச்சைப் பெற்று வந்த 17 நோயாளிகள் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையால் எஞ்சிய நோயாளிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. நோயாளிகளை வெள்ள நீருக்கு மத்தியில் சிரமத்துடன் ஆம்புலன்ஸ்களில் வெளியேற்றும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இதனிடையே, தொடர் மழைக்கு மத்தியில் மெக்சிக்கோவின் அகாபுல்கோ பகுதியில் நேற்று முன்தினம் இரவு, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்ததாக கூறப்படும் நிலையில், உயிரபாயம் தொடர்பான தகவல்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.