சோமாலியாவில் பயங்கர குண்டுவெடிப்பு - 17 பேர் உடல் சிதறி உயிரிழப்பு
16 Apr,2021
சோமாலியா நாட்டில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் உள்ள அல் சபாப் என்ற பயங்கரவாத அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவ்வப்போது அவர்கள் அந்த நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களையும், நாசவேலைகளையும் அரங்கேற்றி வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் சோமாலியாவின் தலைநகரான மொகாதிசுவில் சாலையோரம் அந்த பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. இது தெரியாமல் அந்த வழியில் ஒரு மினிபஸ் சென்றபோது பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இதில் அந்த மினி பஸ் சிக்கி உருக்குலைந்து போனது. அதில் பயணம் செய்த 17 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
குண்டுவெடிப்பில் சிக்கிய மினி பஸ், மொகாதிசு நகரில் இருந்து மிடில் சாபெல்லி என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நாசவேலைக்கு அல் சபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சாலையோர குண்டு வெடிப்பு சம்பவம், சோமாலியாவை உலுக்கி விட்டது.