சூடான் நாட்டில் இருதரப்பினருக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் 56 பேர் உயிரிழந்தனர்
06 Apr,2021
.
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி பழங்குடியின மக்களுக்கும் பிற இனக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு டர்பர் மாகாணத்தின் எல் ஜெனினா பகுதியில் வசித்துவரும் பழங்குடியின மக்களுக்கும், மற்றொரு தரப்பு மக்களுக்கும் இடையே சனிக்கிழமை முதல் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி வருகின்றனர். நகரின் பல பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த மோதலில் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து சூடானில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால் பலரும் அண்டை நாடான சாட் நாட்டிற்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.