பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே தெரிவித்துள்ளார்.
உற்பத்தி சிக்கல்கள் காரணமாக ஒப்புக்கொண்டபடி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இரு நிறுவனங்களும் அறிவித்திருந்த.
இந்நிலையில் இந்த நடவடிக்கையானது கடுமையான ஒப்பந்த மீறல்கள் என இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே குற்றம் சாட்டியுள்ளார்.
விநியோக சிக்கல்கள் தொடர்ந்தால், நாடு தனது தடுப்பூசி திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பாவில் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, உலகளவில் அதிக தொற்று அடையாளம் காணப்பட்ட நாடுகளில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பிரான்சில் இதுவரை 30 இலட்சத்து 35 ஆயிரத்து 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 72 ஆயிரத்து 877 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 23 ஆயிரத்து 924 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை மற்றுமொரு அதிக பாதிப்புக்கள் அடையாளம் காணப்பட்ட ஸ்பெயினில் 26 இலட்சத்து 3 ஆயிரத்து 472 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு அங்கு 55 ஆயிரத்து 441 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு இத்தாலியில் மேலும் 13 ஆயிரத்து 331 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24 இலட்சத்து 55 ஆயிரத்து 185 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் பாதிப்பு எண்ணிக்கையில் 8 ஆவது இடத்தில உள்ள இத்தாலியில் இதுவரை கொரோனா தொற்றினால் 85 ஆயிரத்து 162 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜேர்மனியில் 12 ஆயிரத்து 428 பேருக்கு கொரோனா தொற்று இறுதியாக அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 21 இலட்சத்து 37 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது.
அத்தோடு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று உறுதியான 516 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 52 ஆயிரத்து 536 ஆக உயர்ந்துள்ளது.
பிரான்ஸில் ஃபைஸர்- பயோன்டெக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 9 பேர் உயிரிழப்பு!
பிரான்ஸில் ஃபைஸர்- பயோன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும், இந்த உயிரிழப்பிற்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு தொடர்பில்லை என மருந்துகளிற்கான தேசிய நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வயது முதிர்ந்தவர்களான இவர்கள் மற்றவர்களின் உதவியுடன் தங்கி வாழும் முதியோர் இல்லங்களான EHPADயை சேர்ந்தவர்கள் எனவும் பல தீவிர நோய்களிற்காகச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள 823.000 பேரில், இதுவரை 135 பக்கவிளைவுகள் மட்டுமே பதிவாகி உள்ளன.