சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், நாடுகளை கடந்து, கண்டங்களை தாண்டி, பெருங்கடல்களை கடந்து அகில உலகிலும் வியாபித்து விட்டது.
பிறப்பெடுத்த 10 மாதங்களுக்குள் சுமார் 3ண கோடி நோயாளிகளையும், 10 லட்சத்துக்கும் மேலான இறப்புகளையும் உலகுக்கு பரிசளித்து இருக்கும் இந்த வைரசுக்கு ஒரு மரணத்தை பரிசளிக்க உலக நாடுகளால் முடியவில்லை.
உலக நாடுகளின் பரிசோதனைக்கூடங்கள் இரவு-பகலாக பணியாற்றியும், கொரோனாவின் கொட்டத்தை அடக்குவதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் முழுமையாக கைவரப்பெறவில்லை.
எனவே கடிவாளம் இல்லா குதிரையாக, கரை கடந்த வெள்ளமாக எல்லையின்றி தாக்குகிறது அந்த கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர். அதன் கொடூர கரத்தில் சிக்கியவர் அனைவரும் மருத்துவ போராட்டம் நடத்தியே வெற்றிபெற வேண்டியுள்ளது. இந்த போராட்டத்தில் வெற்றியடையாதவர்கள் பரிதாபமரணத்தையும் தழுவுகின்றனர்.
இப்படி ஒட்டுமொத்த உலகையும் பீதியிலேயே வைத்திருக்கும் கொரோனா, வல்லரசு நாடான அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
உலகுக்கே பெரியண்ணன் தோரணையை பறைசாற்றும் அந்த நாடு, சுமார் 75 லட்சம் பாதிப்புகள், 2 லட்சத்தை கடந்த மரணங்கள் என கொரோனா பாதிப்பிலும் முதலிடத்திலேயே நீடிக்கிறது.
இந்த பாதிப்பில் இருந்து மக்களை மீட்க வழி தெரியாமல் ஜனாதிபதி மிகவும் திணறி வருகிறார். கொரோனா பரவலை தீவிரமாக எடுத்துக்கொள்ளாததே இந்த பாதிப்புக்கு காரணம் என எதிர்க்கட்சிகளும், நாட்டு மக்களும் அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்த பாதிப்புக்கு மத்தியில் அங்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தலும் நடக்கிறது. எனவே தொற்றையும் கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.
இது ஒருபுறம் இருக்க திரளான தொண்டர்கள் கூடும் பிரசார கூட்டங்களில் பங்கேற்பதன் மூலம், டிரம்புக்கும் தொற்று ஏற்படும் அச்சுறுத்தல் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அவர் இந்த கூட்டங்களில் பங்கேற்று தனக்கு ஆதரவு திரட்டி வந்தார்.
எனினும் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவின் உதவியாளர்களில் முக்கியமானவரான ஹோம் ஹிக்சுக்கு (வயது 31) நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதை டிரம்பும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், டிரம்ப் மற்றும் மெலனியாவுக்கும் உடனே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எதிர்பாராத வகையில் அவர்கள் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை டிரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் உறுதி செய்தார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்திக் கொண்டே, டொனால்ட் டிரம்ப், தனது அலுவல் பணிகளை மேற்கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில், அவரது மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் அளித்த ஆலோசனையின் பேரில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் வெளியிட்ட விடியோ ஒன்றில், நான் தற்போது வால்டர் ரீட் மருத்துவமனைக்குச் செல்கிறேன். நான் நன்றாக இருப்பதாகவே நினைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.