இது ராஜபக்ச பாணி- மங்கள கருத்து
16 May,2020
என் மீதான இந்த விசாரணைகள் எதிர்வரும் தேர்தலை நோக்கமாக கொண்டவை என முன்னாள் நிதியமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார். இது ராஜபக்சவின் வழமையான பாணி என விசாரணையை முடித்துக்கொண்டு வெளியேறியவேளை செய்தியாளர்களிற்கு தெரிவித்துள்ள அவர் முன்னைய ராஜபக்ச ஆட்சியின் போது தன்னை சிஐடியினர் மூன்று முறை விசாரணை செய்ததை நினைவுகூர்ந்துள்ளார். அவர்கள் என்னை உளரீதியாக அழிப்பதற்கு முயன்றனர் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
நீங்கள் தவறான ஆளுடன் மோதிகின்றீர்கள்,நீங்கள் எவ்வளவிற்கு தாக்குதலை மேற்கொள்கின்றீர்களோ அவ்வளவிற்கு நான் வலிமையானவனாக மாறுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளிற்காக நிதியை ஏற்பாடு செய்தமை தொடர்பிலேயே சிஐடியினர் முன்னாள் நிதியமைச்சரை விசாரணை செய்துவருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலின் போது மன்னாரில் 12.000 பேர் வாக்களிப்பதற்காக 220 வாகனங்களை ஏற்பாடு செய்தார் என முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் வடமாகாணத்திலிருந்து பலமைல்தொலைவில் உள்ள வாக்குசாவடிகளிற்கு வாக்களிக்க செல்லவேண்டியவர்களிற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடபகுதி புனர்வாழ்வு திணைக்களம் குறிப்பிட்ட நிதியை ஒதுக்கியது என தெரிவித்துள்ளார்.
அவர்கள் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்,1990இல் யாழ்ப்பாணத்திலிருந்தும் ஏனைய பகுதிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கங்கள் போல நாங்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அவர்களிற்கு வாக்களிப்பதற்காக உள்ள உரிமையை உறுதி செய்தோம் எனவும் முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் விசேடமான குழுவை சேர்ந்தவர்கள் குறித்து குறிப்பிடுகின்றோம்,அவர்கள் 30 வருடங்களிற்கு மேலாக துயரத்தை அனுபவிப்பவர்கள்,அவர்கள் கடந்த 30 வருடங்களாக எந்த அரசாங்கம் அவர்களிற்காக எதனையும் செய்யாத மக்கள்,இதற்கு நாங்கள் அனைவரும் பொறுப்பேற்கவேண்டும்,அவர்களது வாக்குரிமை பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது என முன்னாள் நிதியமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்படுவதற்கு உதவியது குறித்து நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
இது குறித்து நான் பெருமைப்படுகின்றேன் என சிஐடியினருக்கு நான் தெரிவித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.