கோட்டாபயவுக்கு வழங்கப்படவுள்ள உத்தியோகபூர்வ இல்லம்; கோட்டாபயவின் முடிவு!
22 Nov,2019
ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷ எந்தவொரு உத்தியோகபூர்வ இல்லங்களையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியாக கடந்த திங்கட்கிழமை பதவி பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
புதிய ஜனாதிபதியாக ஒருவர் பதவியேற்றதும் அவருக்கென உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படுவது வழமை, இந்நிலையிலேயே அவர் உத்தியோகபூர்வ இல்லத்தை தவிர்த்து தற்போது வசித்து வரும் இல்லத்தில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தனது இராஜதந்திர மற்றும் உத்தியோக பூர்வ நடவடிக்கைக்காக மாத்திரம் ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் கொழும்பு, மஹகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வந்தார்.
அத்துடன், பதவியில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னரும் குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு அமைச்சரவை அவருக்கு அனுமதி வழங்கிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.