இலங்கை ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் - ராணுவ அதிகாரி கைது
21 Sep,2018
இலங்கையில், சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி, காணாமல் போகச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ராணுவ கர்ணல் ஒருவரை விசாரணைப் பிரிவினர் நேற்றிரவு (வியாழக்கிழமை) கைது செய்துள்ளனர்.
ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போனது குறித்து வாக்குமூலம் பெற ராணுவ கர்ணல், குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட பின்னர் குறித்த ராணுவ லெஃப்டினன் கர்ணலை கைது செய்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அரன்த பீரிஸ் என்ற ராணுவப் புலனாய்வுப் பிரிவின் லெஃப்டினன் கர்ணல் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரகீத் எக்னெலிகொட ஊடகவியலாளராகவும், கேலிச்சித்திர ஓவியராகவும் பிரபல்யமானவர்.
2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இரவு 8 மணியளவில் கொழும்பு, கொஸ்வத்தை என்ற இடத்தில் இவர் காணாமல் போனதாக போலீஸில் முறையிடப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே இந்த சம்பவம் நடந்தது.
பிரகீத் எக்னெலிகொடவை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினரே கடத்தியதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச தரப்பினர் மறுத்து வருகின்றனர்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன நாள் முதல் இன்று வரை பன்னாட்டு நிறுவனங்கள், சுயாதீன அமைப்புக்கள் அவர் குறித்து கரிசனை வெளிப்படுத்தி வருகின்றன.
பிரகீத் காணாமல் போன சம்பவம் குறித்து 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில், ராணுவப் புலனாய்வு அதிகாரிகளான லெப்டினன் கேர்ணல் ஷம்மி கருணாரத்ன, சார்ஜன் மேஜர் பிரியந்த ராஜபக்ச ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களை கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றம் விடுவித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.