பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதை தடை செய்ய வேண்டும்! - என்கிறார் சம்பிக்க
06 Jun,2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயரை உச்சரிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கு ஜேர்மனியை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும் என்று அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்க, தெரிவித்துள்ளார்.
திம்புலாகல விகாரையின் தலைமை பிக்குவானகித்தலகம சீலாலங்கார தேரரின் 23 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு மஹாரகமவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர்பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, "சிலர் இன்று பயங்கரவாதிகளை நினைவுகூற முற்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளை நினைவுகூறும் அவர்கள் பயங்கரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான செயற்களுக்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒன்றாக வாழவேண்டியது அவசியம். சகவாழ்வு அவசியம். ஆனால் யாராவது பிரிந்து செல்லவோ அதற்காக யுத்தம் புரியவோ தயார் என்றால் அதேபோல் முன்னைய பயங்கரவாதிகளின் பயங்கரவாதச்செயல்களை வீரதீர செயல்களாக கொண்டாட முற்படுவார்களானால், அதேபோல் பதிலளிக்க எமக்கும் நேரிடும்.
எமது நாட்டில் எதிர்காலத்திலும் மீண்டும் இவ்வாறான பிரச்சனைகளை ஏற்படுத்த பல தரப்பினர் முயற்சிக்கலாம். எனினும் கடந்தகால சம்பவங்களின் பாடங்களைக் கற்றுக்கொண்டு மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடாத வண்ணம் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரத்த ஆறு ஓடுவதை தடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அடிமைகளைப்போல் மண்டியிட்டுக் கொண்டு கடந்தகாலங்களில் சில தலைவர்கள் நடந்து கொண்டதுபோல் அடிமை மனப்பான்மையுடன் செயற்பட வேண்டும் என்பது அல்ல. தைரியமாக எழுந்துநின்று பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த பௌத்த தலைமை பிக்குகள், இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினரைப்போல் தைரியமாக முகம்கொடுத்து நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயரை உச்சரிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கு ஜேர்மனியை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும். பிரபாகரனின் எச்சங்கள் மீண்டும்ஆங்காங்கே முளைத்து வருகின்றன. அவை மீண்டும் பலமாக தலைதூக்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமு். இதற்கு அவற்றை முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது அவசியம். இதற்கு ஏனைய நாடுகளிடமிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
எமக்குத் தெரியும் ஜேர்மனியில் இவ்வாறான நிலையொன்று ஏற்பட்டிருந்தது. அங்கு இன்றும் ஹிட்லரின் பெயரைக்கூட உச்சரிக்க முடியாது. அதேபோல் கம்போடிய போன்ற நாடுகளிலும் சர்வாதிகாரிகள் இருந்தனர். அவர்களின் பெயர்களையும் அந்த நாடுகளில் உச்சரிக்க முடியாது. v ஏனெனில் அந்த நாடுகள் அனைத்தும் சிந்திய இரத்தத்தினாலும், கண்ணீரினாலும் பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கின்றன. துரதிஸ்டவசமாக எமது நாட்டில் பயங்கரவாதிகளை விடுதலைப் போராட்ட வீரர்களாக நினைவுகூறுவதற்கு இடமளிப்பதன் ஊடாக நாம் பாரியத் தவறை இழைக்கின்றோம். அதனால் இந்த நாட்டில் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழலை கட்டியெழுப்புவதை தடுக்க செயற்படும் தரப்பினருக்கு எதிராகஇனமத பேதமின்றி அனைவரும் அணிதிரண்டு செயற்பட வேண்டிய காலகட்டம் எழுந்துள்ளது" என்றும் தெரிவித்தார் சம்பிக்க ரணவக்க