பிரதமருக்கு வழங்கிய கடிதங்கள் வீசியெறிப்பட்டதன் பின்னணி என்ன?
30 May,2018
I
கிளிநொச்சிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மக்களின் கோரிக்கை கடிதங்கள் வீசியெறியப்பட்ட சம்பவம் சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், அதனை திட்டமிட்ட சதிச் செயல் என ஐக்கிய தேசிய கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வைத்தியர் விஜயராஜா தெரிவிக்கின்றார்.
சமகால விடயங்கள் தொடர்பாக ஆராயும் எமது ஆதவன் தொலைக்காட்சியின் நிலைவரம் நிகழ்ச்சியானது, இக்கடித விவகாரம் குறித்து ஆராய்ந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.
குறித்த கடிதங்கள் மூலப்பிரதிகளே என உறுதிப்படுத்துவதற்கான ஒளிப்பட ஆதாரங்கள் ஊடகவியலாளர்களின் கமராக்களில் சிக்கியுள்ளன. எனினும், அவற்றை பிரதிகள் எனக் குறிப்பிட்ட வைத்தியர் விஜயராஜா அவை பழைய கடிதங்கள் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு, தமது கட்சியின் வளர்ச்சியை சகிக்க முடியாத சிலர் இவ்வாறு கடிதங்களை வீசி எறிந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். அது மாத்திரமன்றி ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் இவ்விடயம் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த விஜயராஜா, இது திட்டமிட்ட வதந்தி என்றும் குறிப்பிட்டார்.
இதன் உண்மைத் தன்மையை இரு தினங்களுக்குள் வெளிப்படுத்தவுள்ளதாகவும், சீ.சீ.ரி.வி. காணொளிகளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக எமது கிளிநொச்சி பிராந்திய செய்தியாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, வீசப்பட்ட கடிதங்களில் விண்ணப்பங்கள் பல காணப்பட்டதை அவர் கோடிட்டுக் காட்டினார். குறிப்பாக, கிளிநொச்சியில் படித்து பட்டம் பெற்ற இளைஞர் யுவதிகள் பலர் வேலைவாய்ப்பற்று காணப்படுகின்ற நிலையில், வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் கிளிநொச்சிக்கு நியமனம் பெற்று வருவதாகக் குறிப்பிட்டார். அவ்வாறு நியமனம் பெறுபவர்கள் அமைச்சர்களின் நலன்சார்ந்தவர்களளாவே உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
மாவட்டத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள், அங்குள்ளவர்களின் நலன்சார்ந்து பேசாத காரணத்தினாலேயே இவ்வாறான நிலை உருவாகின்றன என்ற கருத்தையும் எமது செய்தியாளர் முன்வைத்தார். மக்களின் தேவைகள் குறித்து குரல்கொடுக்காமல் உள்ள இவ்வாறானவர்கள், ஊடகவியலாளர்கள் மீது குற்றஞ்சாட்டுவது முறையற்றதென்றும் குறிப்பிட்டார். அதே சந்தர்ப்பத்தில், மக்கள் பிரதிநிதிகள் செய்ய மறுக்கும் விடயங்களை ஊடகவியலாளர்களான தாம் நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மக்களின் பிரச்சினைகள் குறித்து சரியான முன்வைப்புக்கள் இல்லாத நிலை, பல பிரச்சினைகள் இழுபறியில் செல்வதற்கு காரணமாக அமைகின்றன. குறிப்பாக கிளிநொச்சி மீளாய்வுக் கூட்டத்தின்போது, சரியான விபரங்களுடன் தம்மிடம் வருமாறு பிரதமர் குறிப்பிட்டதோடு கல்வி, நீர்ப்பாசனம், வீதி உள்ளிட்ட பல திட்டங்களுக்கான சரியான வரைபுகளை முன்வைக்காத அதிகாரிகளை கடிந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது