ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் புதிய அமைப்பாளர்கள் நியமனம், தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை உட்பட பல விடயங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் அதிருப்தியில் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
தனது ஆசியுடன் பொது வேட்பாளராகக் களமிறங்கி ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் தன்னிடம் ஆலோசனை பெறாமல் முடிவுகளை எடுப்பதாக சந்திரிக்கா கருதுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த அணிக்கு சார்பாகச் செயற்படும் தொகுதி அமைப்பாளர்களை கடந்த வாரம் பதவியிலிருந்து தூக்கினார்.
அத்துடன், வெற்றிடங்களுக்குப் புதியவர்களையும் அதிரடியாக நியமித்தார். இதன்போது அத்தனகல தொகுதி அமைப்பாளர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பெயரை அவர் பரிந்துரைத்தார்.
இலங்கையில் இரண்டு தடவைகள் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி வகித்த தன்னை தொகுதி அமைப்பாளராக நியமிக்கும் ஜனாதிபதியின் முடிவு சந்திரிக்காவுக்கு உளரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் பதவியொன்றை வழங்கியிருந்தால்கூட அதை ஏற்புடைய செயற்பாடாகக் கருதலாம்.
ஆனால், இது திட்டமிட்ட அடிப்படையில் தரம் தாழ்த்தும் செயற்பாடாகும் என சந்திரிக்காவின் விசுவாசிகள் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை, ஆசிரியை ஒருவரை மண்டியிட வைத்த அரசியல்வாதியொருவருக்கு மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதற்கும் சந்திரிக்கா போர்க்கொடி தூக்கியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை பொதுவேட்பாளராக சந்திரிகாவே பரிந்துரைத்திருந்தார்.
ஆட்சி மாற்றத்துக்கான சமரில் அவர் முக்கிய வகிபாகத்தையும் ஏற்றிருந்தார். இதனால், ஜனாதிபதியாகத் தெரிவான பின்னர் சந்திரிகாவின் ஆலோசனைகளின் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார்.
ஆனால், கடந்த சில மாதங்களாக இவ்வாறு ஆலோசனை பெறப்படுவதில்லை எனக் கூறப்படுகின்றது.
கட்சி விவகாரங்கள் குறித்தும் நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த சந்திரிக்கா பல தடவைகள் முயன்றபோதும் ஜனாதிபதி தரப்பிலிருந்து அதற்குச் சாதகமான பிரதிபலிப்பு வரவில்லையென்றும் சந்திரிக்கா தனக்கு நெருக்கமான கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில் தற்போது நிலைமை முற்றி இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடு உருவாகியுள்ளதால் அது எதிர்கால தேர்தல் செயற்பாடுகளைப் பாதிக்காதிருக்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நிலைமையை சமாளிக்கும் சமரசமுயற்சிகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.