ஐ.நாவிடம் அடிபணியோம்! – இலங்கை அரசு
12 Oct,2017
ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளைகளுக்கு அடிபணியவேண்டிய அவசியம் கிடையாது என்பதுடன், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்களின் அறிவுரைகளையும் கேட்டாகவேண்டும் என்ற கட்டாயமில்லை என்று இலங்கை அரசு சூளுரைத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு விடுத்த விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
“ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் இலங்கைக்கு வருவது தொடர்பில் ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுவருகின்றன. ஐ.நா. அறிக்கையாளர்கள் ஒரு நாட்டுக்குச் செல்வது வழமையான விடயமாகும். கொள்கை உருவாக்கம், உள்ளக சீர்திருத்தங்கள் போன்றவற்றில் அரசு எவ்வாறான கரிசனைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் ஓர் ஆலோசனைகளை மாத்திரமே குறிப்பிடலாம். இது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
எமது அழைப்பின்பேரிலேயே அவர் இலங்கைக்கு வருகிறார். உண்மையைக் கண்டறிய நீதி செயற்பாடுகள், பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் அவர் மதிப்பீடு செய்யவுள்ளார்.
ஒரு சிறந்த அரசு துணிச்சலோடு ஐ.நா. அறிக்கையாளர்களை மதிப்பீடுசெய்ய அழைக்கும். சிறப்பு நிபுணர்களிடம் கருத்து கேட்கும். இது சாதாரண விடயமே. இதனை குறுகிய நோக்கத்தில் பார்ப்பது தவறாகும்.
இலங்கையின் நீதி செயற்பாடுகளை 2018இல் நடைபெறும் ஐ.நா. விசேட அமர்விலும் பப்லோ டி கிரிப் அறிக்கை இடவுள்ளார்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.