அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்தின் மூன்று ஷரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவையாகும்.
இதன்படி குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும் பான்மையுடன், மக்களின் அங்கீ காரத்தை பெறும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று சபையில் அறிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவிப்பு நேரத்தின் போதே சபாநாயகர் கரு ஜெயசூரிய அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபைக்கு அறிவித்தார்.
இதன்படி தீர்ப்பை எடுத்துகாட்டி சபாநாயகர் கரு ஜெயசூரிய குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் 2, 3 மற்றும் 4 ஆம் சரத்துக்கள் அரசியலமைப்பின் 3, 4, 12(1) மற்றும் 14(1) ஆம் உறுப்புரைகளுக்கு முரணாக இருப்பதாகவும் அரசியலமைப்பின் 80ஆவது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களினது எண்ணிக்கையில் (சபைக்கு சமூகமளிக்காத உறுப்பினர்கள் உட்பட) மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பொன்றில் ஊடாக மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
மேலும் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட விடயங்கள் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொண்டு கைச்சாத்திடப்பட வேண்டும்.
மேற்குறித்த செயல்முறையின் ஊடாக அரசியலமைப்பின் 83 ஆவது உறுப்புரையின் கீழ் இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் பெரும்பான்மையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றம் தமது தீர்மானத்தில் தெரிவித்துள்ளது என்றார்.
அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துதல், முன்கூட்டியே கலைக்கப்படும் மாகாண சபையொன்றின் அதிகாரங்கள் ஏனைய அனைத்து மாகாண சபைகளும் கலைப்படுவதற்கு குறித்துரைக்கப்படும் திகதி போன்றவற்றை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்ற ஏற்பாடுகளை கொண்ட அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சரத்துக்கள் அனைத்தும் அரசியலமைப்புக்கு முரணானவை என்றும் இந்தச் சட்டமூலம் சட்டமாக்கப்பட வேண்டுமெனில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பொன்றில் ஊடாக மக்களால் அங்கீகரிக்கபட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தமது தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்த பின்னரே உயர்நீதிமன்றம் குறித்த தீர்ப்பை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதன்படி இந்த மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மை அங்கத்தவர்களின் தீர்மானமாகவே இது பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் மொத்தமாகவே 5 சரத்துக்கள் மட்டுமே காணப்படுவதுடன், அவற்றில் 2,3 மற்றும் 4 ஆவது சரத்துக்களே செயற்பாட்டு சரத்துக்களாக காணப்படுகின்றன.
இதன் பிரகாரம், அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் ஒரே தினத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட வேண்டிய திகதியை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்ற ஏற்பாடுகள் சட்டமூலத்தின் 2 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன், கலைப்பதற்கென குறித்துரைக்கப்பட்ட திகதிக்கு முன்னதாக முடிவடைகின்ற ஏதேனும் மாகாண சபையின் பதவிக்காலம் குறித்துரைக்கப்பட்ட அந்த திகதி வரை நீடிக்கப்பட வேண்டும். குறித்துரைக்கப்பட்ட அந்த திகதிக்கு அப்பால் தொடர்ந்திருக்கின்ற ஏதேனும் மாகாண சபையின் பதவிக்காலம் அந்த திகதியன்று முடிவடைய வேண்டும் என்பதுடன், அந்த திகதியன்று அது கலைக்கப்பட வேண்டும் என்ற ஏற்பாடுகள் சட்டமூலத்தின் 3 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன் யாதேனும் காரணத்திற்காக மாகாண சபையொன்று முன்கூட்டியே கலைக்கப்படும் பட்சத்தில், அத்தகைய மாகாண சபையின் அதிகாரங்கள் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பதற்கான திகதியை பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கவேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் சட்டமூலத்தின் 4 ஆவது சரத்தில் காணப்படுகின்றன.
இதன்படி அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மேற்படி சரத்துக்கள் மூன்றுமே அரசியலமைப்புக்கு முரணாக காணப்படுவதன் காரணத்தால், அச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படுவதுடன், சர்வஜன வாக்கெடுப்பொன்றினால் மக்கள் அங்கீகரித்தால் மாத்திரமே அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சட்டமாக்க முடியும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.