ராஜபக்சவினருக்கே தெரியாது அவர்களது மாளிகைகள் இருக்கின்ற இடங்கள்
16 Sep,2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் மாடமாளிகைகள் இருக்கின்ற இடங்கள் அவர்களுக்கே ஞாபகமில்லாத நிலைமை காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ச இரண்டு வருடங்கள் ஆட்சிகாலம் இருக்கத்தக்க முன்கூட்டியே ஏன் தேர்தலுக்குச் சென்றார் என்ற காரணத்தையும் அமைச்சர் கபீர் ஹாஷிம் வெளியிட்டார்.
கேகாலை மாவநெல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் உரைநிகழ்த்தினார்.
‘அரச குடும்பம் மிகப்பெரிய மாளிகைகளை கட்டிக்கொண்டது. மல்வானையில் மிகப்பெரிய மாளிகையொன்றை பெசில் ராஜபக்ச கட்டினார். ஆனால் அது நினைவில்லை என்று அவர் கூறுகின்றார். நிர்மாணித்த வீடுகள் எங்கே இருக்கின்றன என்பது குறித்தும் அவர்களுக்கே தெரியாது. ஏனென்றால் அவ்வளவு காணிகள் உள்ளன. ஆனால் அனைவருக்கும் நிழல் என்ற வீடமைப்புத் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது.
ஆட்சியாளர்களுக்கு வீடுகள் அல்ல மக்களுக்கான வீடுகளே நிர்மாணிக்கப்படுகின்றன. மத்திய அரசின் அதிகாரங்களை ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பிரதான கட்சிகள் அனைத்திற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டே இன்று ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது. நாங்கள் அதிகார மோகத்திற்கு உட்பட்டவர்கள் அல்லர். ஆரம்ப வருடமானது மிகவும் கடினமான காலமாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மூன்று சுமைகள் முன்வைக்கப்பட்டன. சடலங்களின் மலை, குப்பை மலை, கடன் மலை அவையாகும். இவை உட்பட ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் புரட்டிப்போடுவதற்கு பிரதமருக்கு நேரிட்டது. சுமனே சொன்னதற்காக மஹிந்த ராஜபக்ச முன்கூட்டியே தேர்தலை நடத்தவில்லை.
உடனடியாக தேர்தலை நடத்தாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என்று மஹிந்தவின் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்த படியினால்தான் அவர் உடனடியாக தேர்தலை நடத்தினார்’ என்றார்.