8மாத கர்ப்பிணியை கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவர்.
உடுமலையில் 8 மாத கர்ப்பிணியை கொன்று, பிளேடால் கையை அறுத்து கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
காதல் மனைவி
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜீவாநகர் 2–வது வீதியை சேர்ந்தவர் ஆகாஷ்ராஜ் (வயது 24). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அதே பகுதியை சேர்ந்த முகமது நாசரின் 2–வது மகள் கஜிதாபேகத்தை (18) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் முகமது நாசர், அவருடைய மனைவி சகிலா பேகம், மகள் கஜிதாபேகம் மற்றும் மருமகன் ஆகாஷ் ராஜ் ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். திருமணத்திற்கு பின்னர் ஆகாஷ்ராஜிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் மதுகுடித்து விட்டு தனது காதல் மனைவி கஜிதா பேகத்திடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சகிலா பேகம் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்து வந்துள்ளார். தற்போது கஜிதா பேகம் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
ரத்த வெள்ளத்தில்ஸ
நேற்று வழக்கம் போல் முகமது நாசரும், அவருடைய மனைவி சகிலா பேகமும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் ஆகாஷ்ராஜியும், கஜிதா பேகமும் இருந்தனர். பின்னர் மாலையில் வேலை முடிந்து சகிலா பேகம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
சகிலாபேகம் தனது மகள் பெயரை பலமுறை சொல்லி அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஏணி கொண்டு வந்து வீட்டின் மீது ஏறி, ஓட்டை பிரித்து உள்ளே பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி குலைநடுங்க வைத்தது. அங்கு கஜிதா பேகமும், ஆகாஷ்ராஜியும் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர்.
மயங்கி கிடந்தார்
இது குறித்து உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அங்கு கஜிதா பேகம் இறந்து கிடந்தார்.
ஆகாஷ்ராஜின் 2 கைகளில் இருந்து பிளேடால் அறுத்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் கஜிதா பேகத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.
சம்பத்தன்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரம் அடைந்த ஆகாஷ்ராஜ், கர்ப்பிணி என்றும் பாராமல் கஜிதா பேகத்தின் தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்து சுவற்றில் மோதவைத்துள்ளார். அப்போது தலையில் பலத்த அடிபட்டதால் நிலைகுலைந்து போன கஜிதாபேகம் மயங்கி கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது.
தற்கொலை முயற்சி
இதற்கிடையில் தனது கர்ப்பிணி மனைவியை கொன்று விட்டோமே என்ற பயத்தில் ஆகாஷ்ராஜ் தனது இரண்டு கைகளிலும் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது அவருடைய உடலில் இருந்து அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியது. இதனால் மனைவி உடல் அருகேயே ஆகாஷ் ராஜ் மயங்கி கிடந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் கஜிதாபேகம் உடல் கிடந்த அறை முழுவதும் ரத்தம் ஆறாக ஓடியிருந்தது. ஆனால் கஜிதா பேகத்தின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை.
இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என தெரியவரும்.
மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஆகாஷ்ராஜ் சுயநினைவு திரும்பினால்தான், கொலைக்கான முழுகாரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.