மாலை மாற்றும் வேளையில் வலிப்பு வந்து மயங்கிய மணமகன்:
18 Feb,2015
மாலை மாற்றும் வேளையில் வலிப்பு வந்து மயங்கிய மணமகன்: சகோதரியின் மைத்துனரை லக்னோ,
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் நகரை சேர்ந்த ஜுகல் கிஷோர்(25) ராம்பூர் நகரை சேர்ந்த இந்திரா (25) ஆகியோருக்கும் திருமணம் செய்விக்க பெற்றோர்கள் நிச்சயித்தனர். அந்த சுபயோக சுபதினத்தில் புரோகிதர்கள் மந்திரம் முழங்க இந்திராவின் கழுத்தில் மாலை சூட்ட எழுந்த மணமகன் கிஷோர் திடீர் என்று வலிப்பு ஏற்பட்டு மணமேடையில் மயங்கி விழுந்தார்.
இந்த உண்மையை மறைத்து கிஷோரை தனது தலையில் கட்ட நினைத்த பெற்றோரை நினைத்து வேதனைப்பட்ட இந்திரா, ‘இதே மேடையில் என் கழுத்தில் மாலை அணிவித்து என்னை மனைவியாக ஏற்றுக்கொள்ள யாராவது தயாரா? என திருமணத்துக்கு வந்தவர்களை பார்த்து துணிச்சலுடன் கேட்டார்.
அவரது சகோதரியின் மைத்துனரான ஹர்பால் சிங் என்பவர் இந்திராவை ஏற்றுக்கொள்ள முன்வந்தார். இதற்கிடையில், நினைவிழந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்செல்லப்பட்ட கிஷோர், இந்திராவும் ஹர்பால் சிங்கும் அக்னி குண்டத்தை சுற்றி ஜோடியாக வலம் வரும் வேளையில் மீண்டும் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்.
தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் இன்னொருவரின் மனைவியாகி விட்டதை கண்டு திகைத்துப்போன அவர், ‘உன்னை இழந்து விட்டு நான் ஊருக்கு சென்றால் என் நண்பர்களும், உறவினர்களும் கேலி பேசுவார்கள். அவன் போட்ட மாலையை தூக்கி எறிந்துவிட்டு என்னோடு வந்து விடு’ என்று இந்திராவை வற்புறுத்தினார். கிஷோரின் பெற்றோரும், முக்கிய உறவினர்களும் இதை ஆமோதித்தனர்.
இதற்கு இந்திரா ஒப்புக்கொள்ளாததால் நிச்சயதார்த்தத்தின் போது செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய வகையில் இந்திராவை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டதாக போலீசில் மணமகன் வீட்டார் புகார் அளித்தனர். பின்னர், ஊர் பெரியவர்கள் அவர்களை அழைத்து சமரசம் செய்து வைத்ததையடுத்து, மணமகளோடு சொந்த ஊருக்கு திரும்பும் ஆசையில் மொராதாபாத்தில் இருந்து ராம்பூருக்கு வந்த ஜுகல் கிஷோர், மனபாரத்தோடும் ஏமாற்றத்தோடும் திரும்பிச்சென்றார்.