தலைதுண்டித்து கொலை செய்ய ஐ.எஸ். தீவிரவாதிகள் பயிற்சி-உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் ஐ.எஸ்.
24 Oct,2014
ஈராக் மற்றும் சிரியாவில் `ஐ.எஸ்.ஐ.எஸ்.' அமைப்பு தீவிரவாதிகளின் கை ஓங்கியுள்ளது. அவர்கள் தனிநாடு அமைத்து புதிய சட்டதிட்டங்களை உருவாக்கியுள்ளனர். தங்களிடம் சிக்கும் பிணை கைதிகளை தலை துண்டித்து கொலை செய்கின்றனர். அவர்களை ஒடுக்க அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் குண்டு வீச்சு நடத்தி வருகின்றனர். இருந்தும் அவர்களை அழிக்க முடியவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் யூ டியூப் இணைய தளத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளிக்கின்றனர். அதில், எதிரிகளை தலை துண்டித்து கொலை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பிணைக் கைதிகளை துன்புறுத்துவது, ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்துவது எப்படி? என்பன போன்றவை குறித்தும் அதிதீவிர பயிற்சி கொடுக்கப்படுகிறது.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தீவிரவாதிகள் இப்பாடத்தை கட்டாயமாக புகுத்தியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பெற்றோரிடம் அவர்களின் குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர். இதனால் விருப்பமின்றி அப்பயிற்சிக்கு பெற்றோர் குழந்தைகளை அனுமதிப்பதாக தெரிகிறது.
இந்த வீடியோ காட்சிகள் சிரியாவில் தீவிரவாதிகள் பலம் வாய்ந்த ரப்பா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் தங்களின் கருப்பு நிற கொடியை அசைத்தபடி ரோந்து வரும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகள்
இஸ்லாமிக் ஸ்டேட் உலகின் மிகப்பெரிய பணக்கார தீவிரவாத இயக்கமாக உருவெடுத்துள்ளது. கறுப்பு சந்தையில் எண்ணெய் விற்பனை, மிரட்டி பணம் பறித்தல் மூலம் மாதத்திற்கு சுமார் 10 மில்லியன் டாலர்களை பெறுகிறது. என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியா, ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும்பாலான பகுதியினை பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். உலகுக்கே அச்சுறுத்தலாக விளங்கி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் கூட்டு தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கில் பல்வேறு எண்ணெய் கிணறுகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ளனர். அங்கிருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் தீவிரவாத இயக்கம் நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் பெறுகிறது என்று அமெரிக்க பயங்கரவாதம் மற்றும் நிதி உளவுப்பிரிவு செயலாளர் டேவிட் கோஹன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த உளவுப்பிரிவு தீவிரவாத இயக்கங்களின் நிதி ஆதாரங்களை அழிப்பதற்கானது.
மற்ற தீவிரவாத இயக்கங்களவைவிட இவ்வியக்கம் பல்வேறு வழிகளில் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் செல்வத்தைக் குவித்து வருகிறது. இது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. “நம்மிடம் சில்வர் புல்லட் இல்லை, தீவிரவாத இயக்கத்தின் பொக்கிஷத்தை ஒருஇரவிலே காலியாக்கும் இரகசிய ஆயுதம் நம்மிடம் இல்லை. இது நீடித்த போராட்டமாக இருக்கும், நாம் தற்போது ஆரம்ப நிலையில் உள்ளோம்.” என்று டேவிட் கோஹன் தெரிவித்துள்ளார்.