பெட்ரோல் வரியால் திண்டாடும் மக்கள்-எமனாக மாறிய கார்-சுவிசில் காட்டு பன்றிகள்
சுவிசில் சாலையமைப்பிற்கு நிதி தேவைப்படுவதால் பெட்ரோல் வரியை உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் திண்டாட்டத்திற்குள்ளாகியுள்ளனர்.
சுவிசின் போக்குவரத்து துறை அமைச்சர் டோரிஸ் லூதர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாலையமைப்பிற்கு அதிக நிதி தேவைப்படுவதால் பெட்ரோல் வரியை 12 முதல் 15 சதவீதமாக அதிகப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் மாதம் ஒன்றிற்கு 14 முதல் 18 பிராங்குகள் ஒவ்வொரு வீட்டாரும் வரி செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த சாலை மேம்பாடு திட்டம் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளிடம் பலத்த வறவேற்பினை பெற்றிருந்தாலும், அதற்காக பெட்ரோலுக்கு விதிக்கப்படும் வரித்தொகை மிக அதிகமாக உள்ளது என கடுமையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
மேலும் TCS மற்றும் ACS என்ற இரு போக்குவரத்து சங்கங்களும் வரி அதிகரிப்பிற்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளது.
ரிவர்ஸ்சில் எமனாக மாறிய கார்
சுவிசில் காரை பின்னோக்கி ஓட்டி சென்ற நபர் ஒருவர் எதிர்பாரதவிதமாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
சுவிசின் கிராவுபண்டன்(Graubற்nden) மாகாணத்தில் உள்ள ஷீயீட்(Scheid) என்ற கிராமத்தில் நேற்று முன் தினம் 41 வயது நிரம்பிய நபர் ஒருவர் தனது குடியிருப்பின் கார் நிறுத்தத்திலிருந்து காரை பின்னோக்கி(Reverse) எடுத்துள்ளார்.
அப்போது திடீரென 20 மீற்றர் வேகத்தில் புறப்பட்ட கார் பலமுறை தலைகீழாய் சுழன்று அருகிலிருந்த பள்ளி விளையாட்டு மைதானத்தில் வந்து நின்றது.
இச்சம்பவத்தை நேரடியாக பார்த்த நபர் ஒருவர் இவரை விரைவாக மருத்துவமனையில் அனுமதித்த போதும், விபத்து நேர்ந்த கணமே இவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து பொலிசார் கூறுகையில், கார் ஜன்னல் வாயிலாக இந்நபர் வெளியே தள்ளப்பட்டதன் விளைவாக அவர் இறந்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.
பயிர்களை நாசமாக்கும் காட்டுபன்றிகள்
சுவிசில் காட்டு பன்றிகள் பயிர்களை பெருமளவில் சேதப்படுத்தியுள்ளது.
சுவிசின் ஆர்கூ பகுதியில் Wild boars என்ற காட்டு பன்றிகள் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசமாக்கியுள்ளது.
இக்காட்டு பன்றிகள் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் பனியினால் காட்டை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் வரத்தொடங்கியது என சுவிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் 7,80,000 பிராங்குகள் (8,77,000 டொலர்கள்) மதிப்புடைய பயிர்களை சேதப்படுத்தியதால், பன்றிகளை வேட்டையாடக்கூடாது என இரு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த சட்டம் மாறி, அவைகளை சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்பேரில் கடந்த 2012ம் ஆண்டு 1,600 பன்றிகளும் 2013ம் ஆண்டில் 1200 பன்றிகளும் வேட்டைகாரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டன.
மேலும் இரவு நேரங்களில் பன்றிகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக அகச்சிவப்பு கண்காணிப்பு சாதனங்களை (infrared tracking devices) ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.
பள்ளியில் ஆபாச படம் பார்த்த ஆசிரியர்: அதிர்ச்சியில் மாணவர்கள்
சுவிசில் ஆசிரியர் ஒருவர் ஆபாச படங்களை வகுப்பறையில் பார்த்த குற்றத்திற்காக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுவிசின் சூரிச் மாகாணத்தில் உள்ள வர்த்தக மேலாண்மை பள்ளியில் கடந்த 24ம் திகதி ஆசிரியர் ஒருவர், வகுப்பறையில் ஆபாச படங்கள் மற்றும் கை, கால் வெட்டப்பட்டு நிர்வாண நிலையிருந்த பெண்ணின் புகைப்படத்தையும் தனது கணணியில் பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென இப்படங்கள் புரொஜக்டரின் மூலம் வகுப்பறையிலிருந்த கரும்பலகையில்(Black board) ஒளிப்பரப்பாகியதை கண்ட மாணவர்கள் திகைத்து போயினர்.
இதுகுறித்து நிர்வாகி ரெனி போர்டினீர் கூறுகையில், இச்செயலை ஆசிரியரே செய்ததாக ஒப்புக்கொண்டது தனக்கு பேரதிர்ச்சியாய் உள்ளது.
மேலும் இக்குற்றத்திற்காக தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஆசிரியர் தன் 40 வருட பள்ளி வாழ்க்கையில் தவறு ஏதும் புரியாததால், நடவடிக்கை எடுப்பது பற்றி மாணவர்களும், துணைத்தலைவரும் கலந்து ஆலோசிக்க உள்ளனர் என கூறியுள்ளார்.