சுவிசில் இளைஞர்களிடையே நேர்ந்த மோதலில் இளைஞன் ஒருவன் பரிதாபமாக பலி
.
சுவிசில் இளைஞர்களிடையே நேர்ந்த மோதலில் இளைஞன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். சுவிசின் வாட் மண்டலத்தில் டைலன் (17) என்ற இளைஞன் பிரிட்டிஷ் குத்து சண்டை வீரர்கள் அணியும் Lonsdale Jacket-யை அணிந்திருந்தான்.
இதைக்கண்ட 15 வயது மதிக்கதக்க இரண்டு இளைஞர்களில் ஒருவன் மற்றொருவனை சண்டைக்கு தூண்டிவிடும் நோக்கில் பேசியுள்ளான்.இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன் டைலனுடன் தாக்குதல் ஈடுபட்டதில், டைலன் தலையில் பலத்த காயமடைந்தான்.
இச்சம்பவத்தை கண்ட பொதுமக்கள் டைலனை அவசர ஊர்தியில் ஏற்றி உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இதன்பின் லூசேன்(Lausanne) நகர மருத்துவமனையில் மாற்றப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இதனைத் தொடர்ந்து இக்கொடிய செயலில் ஈடுபட்ட வாலிபனையும், அவனை தூண்டிவிட்ட மற்றொரு வாலிபனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் பேர்சர்(Bercher) என்ற கிராமத்திலிருக்கும் தேவாலயத்தில் நடைபெற்ற டைலனின் இறுதி சடங்கில் சுமார் 600 பேர் கலந்து கொண்டு துக்கம் தெரிவித்தனர்.
10 மாத குழந்தைதையின் கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்
.
ஸ்பெயின் நாட்டில் 10 மாத குழந்தை தன் தாயால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸை சேர்ந்தவர் கத்ரினா காடிட் ஸ்டஹேலி(40). இவர் மன வளர்ச்சி குன்றிய தன் 10 மாத குழந்தையை சுவிஸ் மருத்துவமனை அங்கீகாரம் இன்றி ஸ்பெயின் நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது மத்திய தரைக்கடல் கடற்கரை பகுதியில் ஸ்பானிஷ் பொலிசார் இவரிடம் விசாரணை மேற்கொண்டு குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தையை குளிப்பாட்டுவதாக கூறி அதிகாரிகளிடமிருந்து அனுமதிபெற்ற கத்ரினா குழந்தையின் தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து தற்கொலைக்கு முயன்ற கத்ரினாவை பொலிசார் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சுவிஸில் தேவாலய மணிக்கூண்டில் சிக்கி கொண்ட முதியவர் ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
.
சுவிஸில் தேவாலய மணிக்கூண்டில் சிக்கி கொண்ட முதியவர் ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்.
சுவிசில் ஆர்லெஷ்ம் நகரத்தில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கத்ரிடல் தேவாலயம் ஒன்று உள்ளது.
இங்கு 82 வயது மதிக்கதக்க கட்டட பொறியாளரான முதியவர் ஒருவர் தேவாலயத்தின் மணிக்கூண்டு கோபுரத்தை புதுபிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மணிக்கூண்டின் உச்சியிலிருந்து எதிர்பாரதவிதமாக மூன்று மீற்றர் தூரத்தில் இருந்து கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் அவருடைய உயரத்திற்கு செல்ல இயலாமல் திணறியுள்ளனர். பின்பு REGA என்ற விமான மீட்புக்குழுவினரால் ஹெலிக்காப்டரின் மூலம் மீட்கப்பட்டதுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உலகின் தலைசிறந்த ஹோட்டலாக சுவிஸின் Grand Hotel Kronenhof தெரிவு
.
உலகின் தலைசிறந்த ஹோட்டலாக சுவிஸின் Grand Hotel Kronenhof என்ற நட்சத்திர ஹோட்டல் தெரிவாகியுள்ளது.
சுவிசின் பான்டிரிசீனா(Pontresina) பகுதியின், எங்கடைன்(Engadine) நீண்ட பள்ளதாக்கில் Grand Hotel Kronenhof நட்சத்திர ஹோட்டல் அமைந்துள்ளது.
கடந்த 19ம் நூற்றாண்டில் புதிய பரோக் பாணியில் கட்டப்பட்ட இந்த ஆடம்பர ஹோட்டல் அருகில் பெர்னினா பனிப்பாறைகள் மற்றும் எங்கடைன்(Engadine) மலைகள் அமைந்துள்ளன.
இதில் 2,000 சதுர மீற்றர் அளவில் ஸ்பா ஒன்று புதுப்பிக்கப்பட்டு, மலையுச்சிகளை காணும் வகையில் நீச்சல் குளத்தோடு கட்டப்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள உள்ள ஆடம்பர சேவைகள் பெரும்பாலும் மக்களை கவர்ந்துள்ளதால் TripAdvisor என்ற பயண இணைதளத்தில் உலகத்தின் சிறந்த ஹோட்டல் என பெயர் பெற்றுள்ளது.