இத்தாலியில் மாளிகை ஒன்றின் பெட்டகத்தை உடைத்து திருடிய சிங்களவர் கைது!
28 Nov,2013
இத்தாலியின் சிசிலி தீவில் டவர்மினா நகரில் மாளிகை ஒன்றில் காவலராக பணிப்புரியும் சிங்களவர் ஒருவர் ரோம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பணியாற்றிய மாளிகையில் உள்ள பெட்டகம் ஒன்றை உடைத்து அதில் இருந்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொள்ளையிட்ட பணம் மற்றும் பொருட்களுடன் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதான சிங்களவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக ரோம் பொலிஸார் தெரிவித்தனர்.
மாளிகையின் உரிமையாளரான பிரபு ரோம் நகரில் வசித்து வந்துள்ளார். மாளிகையின் உரிமையாளர் மாளிகைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். எனினும் எவரும் பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் மாளிகையில் உள்ள பெட்டகம் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்து பணம் மற்றும் பொருட்களை இலங்கையர் கொள்ளையிட்டு தப்பிச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பின்னர் ரோம் நகரின் பியூம்சீனோ விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள இலங்கை பிரஜைக்கு மூன்று முதல் 10 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சைபர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை இளைஞர் துபாயில் கைது
துபாய் இளைஞர்களின் கலாசாரம் பற்றி கேலி காணொளியை இணையத்தளத்தில் பதவிவேற்றிய குற்றச்சாட்டில் அமெரிக்காவை சேர்ந்த இலங்கை இளைஞர் ஒருவர் துபாய் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் வூட்பெரி மினசோட்டா என்ற பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான சீஷானி காசிம் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு ராஜ்ஜிய அரசின் இணையத்தள பயன்பாட்டு குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் இவர் தெரியவருகிறது.
இலங்கையில் பிறந்த காசிம் 2012 ஆம் ஆண்டு இணையத்தளத்தில் பதவிவேற்றம் செய்தமைக்காக ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சைபர் குற்றங்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டனை தளமாக கொண்ட மனித உரிமைகளுக்கான ஐக்கிய அரபு ராஜ்ஜியம் நிலையம் தெரிவித்துள்ளது.
இவர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவது மற்றும் அபராதம் விதிப்பது என்பன அதிகாரிகளுக்கு சவாலாக இருக்கும் என நம்பபடுகிறது.