பிரெக்சிற் ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் பிரதமர் மே
27 Nov,2018
ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டப்பட்ட பிரெக்சிற் ஒப்பந்தத்தை பிரதமர் தெரேசா மே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.நேற்று (திங்கட்கிழமை) பிரெக்சிற் ஒப்பந்தத்தை கையளித்த பிரதமர், இது எதிர்வரும் மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் சுமூகமான மற்றும் முறையான வெளியேற்றத்தை உறுதிபடுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், ”ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் பிரஸ்சல்ஸ் ஐரோப்பிய கவுன்சிலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தத்துடன் எமது தேசிய நலனை மையமாகக் கொண்ட எதிர்கால உறவு குறித்த அரசியல் பிரகடனமும் இணைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மக்களின் ஜனநாயக முடிவுகளை எடுத்துக்காட்டுகின்ற வகையிலான இந்த ஒப்பந்தமே பிரித்தானியாவிற்கான சரியான ஒப்பந்தமாகக் நான் கருதுகிறேன்.
இந்த ஒப்பந்தமானது அதன் எல்லைகள், சட்டங்கள் மற்றும் பணத்தின் மீதான கட்டுப்பாடுகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கும் பிரித்தானியாவிற்கு உதவும்” எனத் தெரிவித்தார்