அமெரிக்கரின் உடலை கடற்கரையில் பழங்குடியினர் புதைத்து விட்டனர் -
23 Nov,2018
அந்தமானின் வடக்கு சென்டினல் தீவுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் வெளியுலகினருடன் தொடர்புகளை ஏற்படுத்தாமல் தனித்து வாழ்ந்து வருகின்றனர். மிகவும் மூர்க்க குணம் கொண்ட இவர்கள், தங்கள் பகுதிக்குள் நுழையும் அன்னியர்களை அம்பெய்தி கொன்று வருகின்றனர். குறைவான எண்ணிக்கையில் வாழும் இந்த பழங்குடியினரை பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவித்துள்ள மத்திய அரசு, வடக்கு சென்டினல் தீவுக்கு அன்னியர்கள் யாரும் செல்வதற்கும் தடை விதித்து உள்ளது.
ஆனால் இந்த தடையை மீறி வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற ஜான் ஆலன் காவ் (வயது 27) என்ற அமெரிக்க வாலிபர், கடந்த வாரம் அந்த பழங்குடியின மக்களால் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அந்தமான் போலீசார், வடக்கு சென்டினல் தீவுக்கு செல்வதற்கு ஆலனுக்கு உதவிய 7 மீனவர்களை கைது செய்துள்ளனர். இதற்கிடையே கொல்லப்பட்ட அமெரிக்கர் ஜான் ஆலன் காவ் உடலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை நோக்கி செல்வதே ஆபத்தானதாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஹெலிகாப்டர்களையும் குறிவைத்து அவர்கள் அம்பு எய்யும் வழக்கம் கொண்டவர்கள்.
இந்நிலையில் அமெரிக்கரின் உடலை கடற்கரையில் பழங்குடியினர் புதைத்து விட்டனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸ் விசாரணையின் போது பேசிய மீனவர்கள், அமெரிக்கரின் உடலை கரையில் இழுத்து சென்று புதைத்ததை பார்த்தோம் என கூறியுள்ளனர்.
அவரிடன் உடலை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் நிலையில், அந்தமான் போலீஸ் ஜெனரல் தேபேந்திர பதாக் பேசுகையில் “குடும்பத்தாரின் உணர்வுப்பூர்வமான கவலை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் இவ்விவகாரத்தை சட்டத்தில் கருத்தில் கொண்டுதான் எல்லா நகர்வையும் முன்னெடுக்க முடியும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படி ஆலன் காவ் உடலை மீட்கலாம் என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள் எனவும் காலம் கடத்துவது நிலையை மேலும் மோசமானதாக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது