சென்னை: ‘‘உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்’’ எனப்பாடினார் திருமூலர். வாழ்க்கை வாழ்வதற்கு உண்ண உணவும், உடுத்த உடையும், வாழ இருப்பிடமும் அவசியம். இதில் உண்ணும் உணவு சுகாதாரமானதாக இருக்கவேண்டும். நேரத்திற்கு ஏற்றவாறு உண்பது அவசியம். ஆனால் இன்றைய நவீன யுகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடிகிறதா? என்றால் கேள்விக்குறிதான்.
பெருநகரங்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் அல்லது பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் காலை நேரங்களில் உணவை அவசர அவசரமாகவும், வெந்தும் வேகாமலும், சுவையோ அல்லது சுகாதாரத்தைப்பற்றியோ யோசிக்காமல் அரைகுறை வயிற்றுடன் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் அல்லது பள்ளிக்கு செல்வோரை நாம் காண்கிறோம்.
அதேபோல் மதிய நேரத்திலோ அல்லது இரவிலோ சரியான நேரத்திற்கு போதிய அளவு உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. காரணம் அவர்கள் உணவுக்கு பதிலாக அடிக்கடி டீ, காபி, நொறுக்கு தீனி, பாஸ்ட்புட் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. இது நாளடைவில் பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது. இதன் விளைவு வயிற்றுப்புண் ஏற்பட்டு அல்சரில் கொண்டு சேர்க்கிறது.
அல்சர் நமது உடலில் உள்ள சிறுகுடலில் ஏற்படும் பாதிப்பு. நேரம் தவறி சாப்பிடுவது, நீண்டநேரம் சாப்பிடாமல் இருப்பது, அதிக காரமான திண்பண்டங்களை சாப்பிடுவது போன்ற பல காரணங்களால் அல்சர் உருவாகிறது. அல்சர் இருந்தால் சாப்பிடும்போது வயிற்றில் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், குமட்டல், வாந்தி உள்ளிட்டவைகள் ஏற்படும்.
வயிற்று புண் நோய் இருப்பவர்கள் சாக்லெட், குளிர்பானங்கள், மது, பெப்பர்மிட், காபி, கருப்பு தேனீர், ஆரஞ்சு, திராட்சை, பூண்டு, மிளகாய், பால் உணவுகள், காரம், வெங்காயம், தக்காளி விழுது, தக்காளி பொருட்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக கோதுமை, கோழி, மீன், பீன்ஸ், முட்டை, தயிர், அத்திப்பழம் உள்ளிட்டவற்றை கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக சேர்த்து சாப்பிடலாம். அதேபோல் புளிப்பான பழங்கள் மற்றும் காரமான உணவுகளையும் தவிர்ப்பது அவசியம்.
இளநீரை தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதேபோல் முற்றிய தேங்காய் பருப்புகளை நன்கு காயவைத்து, செக்காடப்பட்டு எதுவும் கலக்காமல் இருக்கும் தேங்காய் எண்ணெயை வயிறு எரிச்சலின் போது குடிக்கலாம். இப்படி குடித்தால் சிறிது நேரத்தில் எரிச்சல் குறைந்துவிடும். அத்துடன் இளநீர் நம் உடலில் சிறு குடலில் உண்டாகும் புழுக்களை அழிக்கிறது. இவற்றில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழுவழுப்பு தன்மை குடலில் உள்ள புண்களை குணப்படுத்துகிறது. இவை சிவப்பு ரத்த அணுக்கள் அழியாமல், ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுகிறது