அமெரிக்காவிற்கு பதிலடி தயாராகிறது ஐரோப்பா!
09 Nov,2018
அமெரிக்க ஜனாதிபதியின் ஒருதலைப்பட்சமான கொள்கைகளுக்கு ஐரோப்பா பதிலளிப்பது அவசியமென ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு ஒன்றித்து, ஒற்றுமையை வெளிப்படுத்துவது அவசியமென்றும், அதன்மூலம் அமெரிக்காவின் கொள்கைகளை எதிர்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
பேர்லினின் நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ‘America First’ என்ற நிகழ்ச்சிநிரலின் கீழான அமெரிக்க ஜனாதிபதியின் கடுமையான எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்புவாத பொருளாதார கொள்கைகள் மற்றும் ஒருதலைப்பட்ச இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பதிலளிப்பது அவசியமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து செயற்பட்டு, முதலீடுகளையும் அதிகரிக்கும்போது, அதிகரித்த தீர்வைகள், பாதுகாப்பு விடயங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடலாம் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமெரிக்க பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியுள்ள நிலையில், வெள்ளை மாளிகை கொள்கைகளில் ஜனாநாயகக் கட்சி தலையிட வேண்டுமென ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
நடைபெற்று முடிந்த அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர், அதன் வெளிப்பாடுகளை பொறுத்திருந்தே பார்க்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.