நாய்களின் மோப்ப சக்தியால் மலேரியா நோயை கண்டறியலாம்: விஞ்ஞானிகள் தகவல்
01 Nov,2018
வாஷிங்டன்: நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கொசுக்களால் பரவும் மலேரியா நோய்க்கு ஆண்டுதோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணமடைந்து வருகின்றனர். இந்த நோய் ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவுமின்றி தாக்குகிறது. மேலும், மலேரியா நோயானது ஒரு நபரை தாக்கியுள்ளதா என்பது அவரின் இரத்தத்தை பரிசோதனை மேற்கொண்டால் மட்டுமே கண்டறியப்படும். அந்த வகையில் மலேரியா நோயினால் எவரேனும் பாதிக்கப்பட்டால், அந்த நபரை நாய்களின் மோப்ப சக்தியின் மூலமாக கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வினை ஆப்பிரிக்க நாடான காம்பியா மாகாணத்தில், அமெரிக்காவின் ஆய்வு கவுன்சில் மேற்கொண்டுள்ளது. நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய 5 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் காலுறைகள் சேகரிக்கப்பட்டு நாய்களிடம் மோப்ப சக்திக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் 70 சதவீதம் பேருக்கு மலேரியா நோய் இருந்ததை மோப்ப நாய்கள் கண்டுபிடித்துள்ளன. அதற்காக அந்த நாய்களுக்கு சிறப்பு மோப்ப பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே மலேரியா நோயை கண்டறிய நாய்களுக்கு மோப்ப சக்தி பயிற்சி அளிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்று புற்று நோய்கள், நீரிழிவு நோயினால் ஏற்படும் கோமா போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.