அரசியல் கைதிகளின் விவகாரமும் கூட்டமைப்பின் படுதோல்வியும்
07 Oct,2018
யதீந்திரா
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் நீண்ட காலமாகத் தொடர்கிறது. அதற்கு ஒரு நியாயமான தீர்வை இன்றுவரை காண முடியவில்லை. அரசியல் கைதிகள் சிலர் சாகும் வரை உணவுதவிர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது, மகசின் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 43 அரசியல் கைதிகள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளதான செய்தி வெளியாகியிருக்கிறது. இது புதிய விடயமல்ல. இதற்கு முன்னரும் கூட பல தடவைகள் இ;வ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அப்போது என்ன நடைபெற்றதோ அதுவே இப்போதும் நடைபெறுகிறது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆங்காங்கே எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து கூட்டமைப்பினரும் நித்திரையால் எழும்பியிருக்கின்றனர். ஆனால் கேள்வி – ஏன் இந்த விடயம் தொடர்ந்தும் ஒரு பேசு பொருளாகவே இருக்கிறது? ஏன் இதற்கு ஒரு நிரந்தர தீர்வை காண முடியாமல் இருக்கிறது? இத்தனைக்கும் கூட்டமைப்பு அளும் மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்திற்கு முழு அளவில் ஆதரவு வழங்கிவருகிறது. அதாவது, நாட்டின் எதிர்க்கட்சி அரசியலை முழு அளவில் முடக்குவதற்கு அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு உறுதுணையாக இருக்கிறது. சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி அதற்கே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்தின் போதும் கூட்டமைப்போ, எந்தவொரு கேள்வியுமின்றி அதனை ஆதரித்துவருகிறது.
ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்தின் போதும் பாதுகாப்பு செலவீனம் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு கிழக்கில் இராணுவம் தேவையற்ற வகையில் நிலைகொண்டிருக்கிறது, அதனை அகற்ற வேண்டுமென்று கூறி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற கூட்டமைப்புத்தான், இவ்வாறு இராணுவத்திற்கு அதிக நிதியை ஒதுக்கும் வரவு செலவுத்திட்டங்களையும் ஆதரித்து வருகிறது. உண்மையில் கூட்டமைப்பு பாதுகாப்புச் செலவீனத்தை குறைத்து அதனை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கு ஓதுக்குமாறு கோரியிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தனோ வெறும் அரசாங்கத்தின் தலையாட்டியாக இருந்து வருகிறார். இப்படியெல்லாம் அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு முண்டு கொடுத்து வருகின்ற போதிலும் கூட, அரசாங்கமோ மிகச் சிறிய விடயங்களில் கூட, விட்டுக் கொடுப்புக்களை செய்யவில்லை. இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது? இதனை அரசாங்கத்தின் எதேச்சாதிகாரப் போக்கு என்பதா அல்லது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் இயலாமை என்பதா?
அரசியல் கைதிகளின் பிரச்சினை ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பிரச்சினை. இதனை எப்போதோ முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியும். நீண்டகாலமாக எந்தவொரு விசாரணையுமின்றி சிறைகளில் வாடும் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதாயின் இதனை அரசியல் ரீதியில் மட்டுமே செய்ய முடியும். சட்டரீதியில் இந்தப் பிரச்சினைய தீர்க்க முடியாது. சுமந்திரன் போன்றவர்கள் இதற்கு மீண்டும் மீண்டும் சட்டரீதியான விளங்கங்களையே வழங்கிவருகின்றனர். இப்போதும் கூட, தங்களுடைய விடுதலைக்காக உண்ணாவிரமிருக்கும் அரசியல் கைதிகளை முழுமையாக விடுதலை செய்வதற்கு மாறாக பகுதி பகுதியாக விடுவிப்பது தொடர்பிலேயே பேசச்சுவார்த்தை இடம்பெற்றிருக்கிறது. சுமந்திரனுக்கும் அரசாங்க தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அவ்வாறானதொரு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனினும் அதனை அரசியல் கைதிகள் நிராகரித்திருக்கின்றனர். தங்களை விடுவிப்பதாயின் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரியிருக்கின்றனர். அதைவிடுத்து தங்களை பிரித்தாளும் வகையிலான செயற்பாடுகளுக்கு தாம் இணங்கப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
உண்மையில் அரசியல் கைதிகள் அனைவருக்கும் ஒரு பொது மன்னிப்பை வழங்குமாறு கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் கேட்க முடியும். இதற்கு இணங்குமாறு தாம் அதரவு வழங்கிவரும் அரசாங்கத்தை கோர முடியும். இதற்கு ஆதரவு வழங்க மறுத்தால் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை தவிர்ப்போம் என்று வாதிட முடியும். ஆனால் சம்பந்தனோ இவை எதுபற்றியும் கரிசனை கொள்ளவில்லை. இப்போதும் ஜனாதிபதி மைத்திரிபாலவை புகழ்ந்து கொண்டிருக்கிறார். அண்மையில் திருகோணமலைக்கு வருகை தந்திருந்த, ஜனாதிபதி மைத்திரிபாலவை காளிகோவிலில் வைத்து சந்திந்து, முடிந்தவரை புகழ்ந்திருந்தார். ஆனால் சம்பந்தன் இப்படியெல்லாம் புகழ்ந்து கொண்டிருக்கும் போதுதான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜ.நா கூட்டத்தொடரில் தன் இராணுவம் தவறு செய்யவில்லை என்றும், அதில் சர்வதேசம் தலையிட வேண்டாமென்றும், எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே பார்த்துக் கொள்கின்றோம் என்றவாறும் உரையாற்றியிருக்கின்றார்.
அரசியல் கைதிகளின் விவகாரத்தையே கையாள முடியாமல் தடுமாறும் கூட்டமைப்பால் எவ்வாறு அரசியல் தீர்வு விடயத்தை கையாள முடியும்? தமிழ் மக்களின் பிரச்சினைக்காக சர்வதேசத்தின் குரள்வளையை நெறிக்கப் போவதாகவும், சர்வதேசத்தின் துணையுடன் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை பெறப் போவதாகவும் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் அவ்வப்போது ஊடகங்களுக்கு முன்னால் உறுமிக் கொண்டிருக்கின்றனர். தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? தங்களுக்கு முன்னால் இருக்கின்ற அரசியல் கைதிகளின் பிரச்சினையையே கையாள முடியாமல் தடுமாறும் கூட்டமைப்பின் தலைவர்கள், சர்வதேச சமூகத்தை கையாளப் போவதாக சொல்வதை ஒரு நல்ல நகைச்சுவை என்று கூறுவதில் தவறுண்டா?
உண்மையில் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. இதனை உணர்ந்ததன் விளைவே அவ்வப்போது அரசாங்கத்தை நம்பி நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்று மாவைசேனாதி அறிக்கைவிடுவதும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ காலக்கெடு விதிப்பதும், போன்ற நகைச்சுவைகள் அரங்கேறுகின்றன. அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கிவிட்டு, அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்தில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், காலக்கெடு விதிப்பதென்பதும் அவர்கள் எங்களை எமாற்றிவிட்டார்கள் என்பதெல்லாம், தமிழ் மக்களை மடையர்களாக்கும் செயலன்றி வேறென்ன.
ஜனாதிபதி விருப்பம் கொண்டால் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஒரு இரவில் தீர்க்க முடியும். பிரமதர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு உதவ முடியும். ஆனால் அவர்களிடம் அப்படியான எண்ணம் எதுவுமில்லை. இவ்வாறான விடயங்கள் அனைத்தும் ஒரு இழுபறிநிலையில் இருப்பதைதே அவர்கள் விரும்புகின்றனர். விடுதலைப் புலிகள் விடயத்தில் தாங்கள் எந்தவொரு விட்டுக் கொடுப்பையும் செய்யவில்லை என்பதை சிங்கள மக்களுக்கு காண்பிப்பதன் ஊடாகவே, தங்களின் வாக்கு அரசியலை பலப்படுத்த முடியுமென்று அவர்கள் நம்புகின்றனர். அந்த அடிப்படையில்தான் முடிவுகளையும் எடுக்கின்றனர். மொத்தத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் தங்களின் அதிகார நலன்களை முன்னிலைப்படுத்தியே சிந்திக்கின்றனர். அவர்கள் அப்படித்தான் சிந்திப்பார்கள். அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலனை மட்டும் முன்னிறுத்தி சிந்திக்க வேண்டிய, செயல்பட வேண்டிய கூட்டமைப்போ அரசாங்கத்தின் நலன்களுக்காக தமிழ் மக்களின் நலன்களை தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் தேசிய அரசியல் நலன்களை ஓங்கிஒலிக்கக் கூடியதொரு புதிய தலைமை உருவாகாத வரையில் இந்த நிலைமை பழைய குருடி கதவை திறடி நிலையில்தான் தொடரும். அரசியல் கைதிகளின் பிரச்சினை, சிங்கள குடியேற்றம் மற்றும் காணி அபகரிப்பு என்றவாறு அவ்வப்போது சில பிரச்சினைகள் எட்டிப் பார்க்கும். பிரச்சினைகள் எட்டிப் பார்த்தவுடன் அரசியல் வாதிகளை திட்டித் தீர்க்கும் படலமும் ஆரம்பிக்கும். பின்னர் சிறிது காலத்தில் அனைத்தும் அமைதியடையும். பின்னர் ஒரு பிரச்சினை எட்டிப் பார்க்கும். மீண்டும் நம்மத்தியில் சத்தங்கள் எழும். ஆனால் தமிழர் பிரச்சினைகளை இவ்வாறு எதிர்கொள்ள முடியாது. தமிழர் விவகாரம் ஒரு இனப்பிரச்சினை. அதனை அதற்குரிய கட்டமைப்புடனும் கருத்தியல் பலத்துடன் அணுக வேண்டும். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு தனித்தரப்பாக கையாளும் ஆற்றலை கூட்டமைப்பு எப்போதோ இழந்துவிட்டது. எனவே இன்று கூட்டமைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்தும், செத்த பாம்மை அடிப்பதற்கு சமமானதுதான். துரதிஸ்டவசமாக செத்த பாம்பை மக்கள் வழிபடுவதால் அதனை அடிக்காமலும் இருக்க முடியவில்லை. இதுவும் ஒரு துரதிஸ்டவசமான அரசியல் சூழல்தான்.