பிரித்தானிய குடியேற்றவாசிகளுக்கு ஏற்படவுள்ள புதிய பிரச்சினை
03 Oct,2018
பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் குடியேற்றவாசிகள் பிரித்தானிய குடியுரிமையைப் பெறுவதற்கு ‘British Value Test ‘ எனப்படும் புதிய பரீட்சை ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டி வருமெனவும் உயர்ந்த ஆங்கில அறிவைக் கொண்டிருக்கவேண்டுமெனவும் பிரித்தானிய உள்துறை அமைச்சர் சஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.
தற்போது அமுலில் உள்ள Life in the UK எனப்படும் பரீட்சை பிரித்தானியாவின் வரலாறு மரபு மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளைக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்த பரீட்சை குடியுரிமை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்தார்.
வரலாறு பற்றி குடியேற்றவாசிகள் அறிந்து கொள்வது நல்லது தான் ஆனாலும் எங்கள் சமூகத்தை ஒன்றாக இணைக்கும் தாராளவாத, ஜனநாயக மதிப்புகளை அவர்கள் புரிந்து கொள்வதே மிக முக்கியமானதாகும். அது மட்டுமன்றி குடியுரிமை பெறுவதற்குத் தேவையான ஆங்கிலமொழித் திறனின் அளவும் உயர்த்தப்படும் என அவர் கூறினார்.
சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இரட்டை குடியுரிமை பெற்றவர்களாயின் அவர்களது பிரித்தானிய குடியுரிமை உடனடியாகப் பறிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு இத்தகைய தண்டனையே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மிக மோசமான குற்றங்களை புரியும் குற்றவாளிகளுக்கு எமது நாட்டில் இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.