லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர்.
அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் அவரது முதலாளியான சுபா சுந்தரத்தையும் நன்கு அறிந்தவர் ராமமூர்த்தி.
சுபா சுந்தரம் பூந்தமல்லி காவல் நிலைய தொலைபேசி மூலம் இந்த ராமமூர்த்தியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
ஹரி பாபு இறந்துவிட்டான் என்று அவர் சொன்னதுமே சுபா சுந்தரத்திடமிருந்து வந்த முதல் ரியாக்ஷன், ‘அவன் போகட்டும். முதலில் அந்த கேமராவை எடுக்க வேண்டும்.’ தேள்கடி ராமமூர்த்திக்கு இது முதல் அதிர்ச்சி.(முன்னைய கட்டுரையின் தொடர்ச்சிஸ)
தொடர்ந்துஸ
தொடர்ந்து பேசிய சுபா சுந்தரம், ‘இதோ பார். அந்த கேமராவை உன்னால் எடுத்து வர முடியுமா? அது விலைமதிப்பில்லாத சொத்து. மில்லியன் கணக்கில் லாபம் தரக்கூடியது.
என்ன சொல்கிறாய்?’
சம்பவ இடத்தில் இருந்த பத்திரிகையாளர்களை, புகைப்பட நிபுணர்களை சி.பி.ஐ. விசாரித்துக்கொண்டிருந்த சமயம் தேள்கடி ராமமூர்த்தியை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயனே விசாரித்தார்.
அவர் கூறிய தகவல் மிகவும் பயங்கரமானதாகவும், அதிர்ச்சி தரத்தக்கதாகவும் இருந்தது.
சுபா சுந்தரம் கூறியதற்குத் தான் மறுத்துவிட்டதாகச் சொன்ன அளித்த தகவல்களுக்குப் பிறகு சுபா சுந்தரத்தை முழுமையான விசாரணைக்கு உட்படுத்துமாறு கார்த்திகேயன் சொன்னார்.
ராஜிவ் படுகொலை நடந்து சரியாக நாற்பது நாள்கள் முடிந்திருந்த சமயம். ஜூலை 1ம் தேதி ஒரு சம்பவம் நடந்தது. அதுவரை சந்தேகத்தில் மட்டுமே இருந்து, கைது செய்யப்பட்டிராத சுபா சுந்தரம் அன்றைக்கு தேள்கடி ராமமூர்த்திக்கு டெலிபோன் செய்தார்.
அது ஒரு மிரட்டல் தொலைபேசி. என்னை யாரென்று நினைத்தாய்? என் செல்வாக்கு தெரியுமா? என் தொடர்புகள் தெரியுமா? என்னைப் பற்றி சி.பி.ஐயில் என்னென்னவோ சொல்லியிருக்கிறாயாமே?
நான் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ராமமூர்த்தி பயந்துபோய் உடனே அன்றிரவு ‘மல்லிகை’ (சென்னை கிரீன்வேஸ் சாலையில் இயங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அலுவலகம்) அலுவலகத்துக்கு ஓடி வந்தார்.
கார்த்திகேயனைச் சந்தித்து சுபா சுந்தரம் மிரட்டிய விவரத்தைச் சொல்லி, பாதுகாப்புக் கேட்டார்.
கார்த்திகேயன் என்னை அழைத்தார். சுபா சுந்தரத்தை என்ன செய்யலாம்? எனக்குச் சந்தேகமே இருக்கவில்லை. கைது செய்யலாம்.
கைது செய்யத்தான் வேண்டும். ஆனால் காரணங்கள்?
1. ஹரி பாபுவைத் தெரியாது என்று பொய் சொன்னது.
2. சம்பவ இடத்திலிருந்து முக்கியமான கேமரா ஆதாரத்தை அகற்ற ரகசிய சதித்திட்டம் தீட்டியது.
3. அது விலைமதிப்பற்றது, நிறையப் பணம் கிடைக்கும் என்று இன்னொருவரைக் குற்றம் செய்யத் தூண்டியது.
4. சி.பி.ஐக்குத் தகவல் அளித்த ஒருவரை மிரட்டியது.
5. அனைத்துக்கும் மேலாக, தனக்கும் ஹரி பாபுவுக்கும் உள்ள தொடர்பை இணைத்து, விடுதலைப் புலிகளுடன் தனக்குள்ள நெருக்கம் குறித்த செய்திகள் வரத்தொடங்கியபோது, ஹரி பாபுவின் தந்தையை விட்டே மறுப்புச் செய்தி வெளியிட முயற்சி செய்தது.
ராஜீவ் கொலை
இதற்குமேல் என்ன வேண்டும்? சுபா சுந்தரத்தின் விடுதலைப் புலி தொடர்புகள், ஹரி பாபுவின் நண்பர்கள் பற்றி விசாரித்தபோது ரவிசங்கரனால் சுட்டிக்காட்டப்பட்ட பாக்யநாதன் என்கிற, சுபா சுந்தரத்தின் இன்னொரு முன்னாள் ஊழியரின் விடுதலைப் புலி தொடர்புகள் எனப் பல காரணங்கள் இருந்தன.
உடனே கைது செய்யுங்கள் என்றார் கார்த்திகேயன். அதற்கு முன்னால் ஏழு பேர் ஏற்கெனவே கைதாகியிருந்தார்கள்.
5. தேடு, விடாதே! பொ
ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் சுபா சுந்தரத்தின் கைது என்பது அத்தனை பெரிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமல்ல.
நளினி முருகன்
இந்த வழக்கை ஒரு முடிவுக்குக் கொண்டுவர எங்களுக்குப் பேருதவி புரிந்தது, நளினி, முருகனின் கைதுதான்.
தலையும் புரியாமல், காலும் புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த புலனாய்வு அதிகாரிகளுக்கு நளினி, முருகனின் கைதும் அவர்கள் அளித்த தகவல்களும் மட்டுமே இறுதிவரை கைவிளக்காக இருந்தது என்பதை மறுக்க முடியாது.
ஆனால் நடைபெற்ற சம்பவம் ஒரு மாபெரும் படுகொலைச் சம்பவத்துக்குப் பின்னால் ஒரு பயங்கரமான சதித்திட்டம் இருக்கிறது என்பதை முதல் முதலில் உணர்த்தியது சுபா சுந்தரத்தின் நடவடிக்கைகள்தாம்.
அவர் மீது ஏற்பட்ட சந்தேகம்தான் எங்களைக் குறி பிசகாமல் செயல்பட வைத்தது.
தொடக்கத்தில் இது சி.ஐ.ஏ.வின் சதி என்றும் காஷ்மீர் தீவிரவாதிகளின் சதி என்றும் வட கிழக்கு மாகாணத்தில் செயல்படும் உல்ஃபா போன்ற இயக்கங்களின் வேலையாக இருக்கலாம் என்றும் விதவிதமாக யூகங்கள் எங்களை அலைக்கழித்துக்கொண்டிருந்த சமயத்தில் இந்த யூகங்களே திட்டவட்டமான முடிவுகளாகச் சில உயரதிகாரிகளாலேயே முன்வைக்கப்பட்ட சமயத்தில், இது விடுதலைப் புலிகளால் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது என்று ஆணித்தரமாக முடிவு செய்து விசாரணையையும் தேடுதல் வேட்டையையும் நகர்த்தத் தொடங்க சுபா சுந்தரமே ஒரு தொடக்கப்புள்ளியாக இருந்தார்.
அவரைக் கைது செய்தது சற்றுத் தாமதமாகத்தான் என்றாலும் அவர் அளித்த சந்தேகமே ஆதாரம் என்பதால்தான் அவரது கைதை முதலில் விவரித்தேன்.
அவருக்கு முன்னால் ஏழு பேர் கைதாகியிருந்தார்கள். ஜூன் 11ம் தேதி பாக்யநாதன், அவரது தாயார் பத்மா.
ஜூன் 14ம் தேதி நளினி மற்றும் முருகன். பிறகு ராபர்ட் பயஸ், அறிவு என்கிற பேரறிவாளன். அப்புறம், ஜெயக்குமார். எல்லாம் நூல் பிடித்தது போல ஹரி பாபுவின் வீட்டில் நிகழ்த்திய விசாரணைகளிலிருந்து தொடங்கியதுதான்.
ஹரி பாபு வீட்டில் முதல் முதலில் விசாரிக்கப்போனபோது உருப்படியாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்பது உண்மையே.
சொல்லப்போனால் எங்களுக்குப் பெரிதாக எந்த சந்தேகமும் அங்கு எழவில்லை. குடிசை வீடு. எளிய மனிதர்கள். மகனை இழந்த துக்கம்.
ஹரி பாபு ஒருவேளை சதித்திட்டத்தில் பங்குள்ளவனாகவே இருந்திருந்தாலும் இவர்களுக்கு அது தெரிந்திருக்குமா என்பதே சந்தேகம்தான் என்று நினைக்கும்படியான தோற்றமும் வாழ்க்கையும்.
யாரோ அப்பாவி போட்டோகிராபர், படமெடுக்கச் சென்று உயிரை விட்டிருக்கிறான் என்றுதான் யாருக்குமே முதலில் தோன்றும். எங்களுக்கும் அப்படித்தான் தோன்றியது.
ஆனால் நான் நேரடியாக விசாரணைக்கு முதல் முறை அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது ஒரு சம்பவம் நடந்தது.
ஹரி பாபுவின் அம்மா, என்னிடம் டீ சாப்பிடறிங்களா என்று கேட்டார். கேட்டுவிட்டு அவர் டீ போட உள்ளே போயிருந்தால் பிரச்னையில்லை.
ஒரு பையனை அழைத்து, ‘சாருக்கு டீ வாங்கிட்டு வா’ என்று சொன்னார். எனக்கு தர்ம சங்கடம்தான்.
அவர்கள் இருந்த ஏழைமை நிலையைப் பார்க்க, ஒரு டீ வாங்கிக் கொடுப்பது கூட அவர்களுக்குச் சுமைதான்.
எனவே நானே காசு கொடுக்கலாம் என்று பாக்கெட்டில் கைவிட்ட சமயம், சட்டென்று அந்தப் பெண்மணி தன் ரவிக்கைக்குள் கைவிட்டுக் காசை எடுத்துவிட்டார்.
ஒரு கணம் அதிர்ந்து போனேன். அது ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ அல்ல. கத்தையாக நூறு ரூபாய் நோட்டுகள்!
அந்த வீடு, அந்த ஏழைமை, அந்தச் சூழலுக்கு அத்தனை பணம் சம்பந்தமே இல்லாதது. அவரை நம்பி யாரும் அத்தனைப் பணத்தைக் கடனாகக் கூடக் கொடுக்க மாட்டார்கள்.
வெகு அலட்சியமாகக் கையில் எடுத்த கட்டிலிருந்து ஒரு நோட்டை உருவி ஒரு பையனிடம் கொடுத்து டீ வாங்கி வா என்று சொல்லி அனுப்பிய அந்தப் பெண்மணி என்னை மிகவும் பாதித்தார்.
புத்தியில் அதன்பிறகு வேறு எதுவுமே தோன்றவில்லை. திரும்பத் திரும்ப அதே காட்சி.
அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் வந்த பிறகும் மனத்தை விட்டு அகல மறுத்த காட்சி.
எங்கிருந்து வந்திருக்கும்? என்ன சம்பாத்தியம் அவர்களுக்கு? யார் கொடுத்திருப்பார்கள்? சொந்தமாக ஒரு கேமரா வாங்கக்கூட துட்டு சுமந்த ரவிக்கையும் பொருந்தவில்லை.
ஏதோ இடிக்கிறது. என்னவோ ஒன்று ஒளிந்திருந்து ஆட்டம் காட்டுகிறது. ஹரி பாபு வீட்டில் தேடுதல் வேட்டை நடத்திய சக அலுவலர்களையும் அழைத்துப் பேசினேன்.
அத்தனை பேரும் அடித்துச் சொன்னார்கள். ‘கண்டிப்பாக அந்த வீட்டில் ஒன்றுமில்லை சார். நாங்கள் துப்புரவாகத் தேடிவிட்டோம்.
இருக்கிற பொருள்களையெல்லாம் எடுத்து மொத்தமாக விற்றால்கூட ஆயிரம் ரூபாய் தேறாது.’ நானும் அந்த வீட்டுக்குப் போனவன்தான். என் கண்ணிலும் வித்தியாசமாக எதுவும் தட்டுப்படவில்லை.
வெகு நுணுக்கமாக மூலை முடுக்கெல்லாம் ஆராய்ந்து பார்த்தும் ஒரு குற்றத்தின் பின்னணியைச் சுட்டிக்காட்டக்கூடிய தடயம் என்று ஏதும் அங்கே இல்லை. இருக்க வாய்ப்பில்லை என்றே உறுதியாகத் தோன்றியது.
ஆனாலும் எப்படி இது? இந்தப் பணம்? எங்கிருந்து வந்திருக்கும்? யார் கொடுத்திருப்பார்கள்? எதற்காக?
ஹரி பாபுவின் தந்தை நின்ற விதம், நடந்த விதம், பேசிய விதம் அனைத்தையும் மனத்துக்குள் ஓட்டிப்பார்த்தேன்.
அவர் ஏதோ சொல்ல விரும்புபவர் போலவும், மனைவியை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் சட்டென்று அடங்கிவிடுபவர் மாதிரியும் தோன்றியது.
எதற்கும் இருக்கட்டும் என்று அவர்கள் வீட்டிலிருந்து புறப்படும்போது அவரைத் தனியே வெளியே அழைத்து, ‘இதோ பாருங்கள்.
உங்கள் மகன் இறந்துவிட்டான். விசாரணைக்கு உதவியாக, அவன் சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றி நீங்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்தால் உங்களுக்குப் பெரும் தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு வந்திருந்தேன்.
இதையெல்லாம் நான் எண்ணிப் பார்த்தபடி அமர்ந்திருந்தபோது, ஹரி பாபுவின் தந்தை என்னைத் தேடி அலுவலகத்துக்கு ஒருநாள் வந்தார்.
தன்னுடன் ஒரு கேமரா ஸ்டாண்டை எடுத்து வந்திருந்தார். என்ன அது என்று நான் விசாரித்தபோது ஹரி பாபுவின் கேமரா ஸ்டாண்ட் என்றும் நாங்கள் வீட்டுக்குச் சென்றபோது அதனைக் காண்பிக்க மறந்துவிட்டதாகவும் சொன்னார்.
வழக்கில் எங்களுக்குத் தன்னால் முடிந்தளவு உதவி செய்வதாக அவர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
அச்சம் காரணம். தம்மீது எந்தத் தவறும் இல்லை என்று திரும்பத் திரும்ப நிரூபிக்க சந்தர்ப்பங்களை உருவாக்க விரும்பியதும் காரணம்.
எனக்கு அந்த கேமரா ஸ்டாண்ட் மிகவும் இடித்தது. அத்தனை பெரிய ஸ்டாண்ட் அந்த வீட்டில் இருந்திருந்தால் யார் கண்ணிலும் படாமல் போகாது.
திரும்பத் திரும்ப அது வீட்டில்தான் இருந்ததா என்று கேட்டு உறுதி செய்துகொண்டு அவரை அனுப்பினேன்.
மிகவும் குழப்பமாக இருந்தது. மிகவும் தெளிவாகிவிட்டது போலவும் இருந்தது. ஒரு முடிவு செய்தேன்.
திரும்பவும் ஹரி பாபு வீட்டுக்குச் சென்று தேடுங்கள்.
அங்கு என்னவோ இருக்கிறது. நிச்சயமாக இருக்கிறது. ஓர் அங்குலம் விடாமல் அகழ்ந்து எடுத்துவிடுங்கள். உத்தரவிட்டுவிட்டுக் காத்திருந்தேன்.
ஹரி பாபு வீட்டுக்குச் சென்ற சி.பி.ஐ அதிகாரிகள் நான் சொன்னபடி இம்முறை வெகு நுணுக்கமாகத் தேடத் தொடங்கினார்கள்.
அது ஒரு சிறு குடிசைதான். எதையும் ஒளித்து வைக்க முடியாத இடம்தான். ஆனால் ஒளித்து வைக்க முடியாத இடத்திலா ஒளித்து வைக்க நினைப்பார்கள்?
எனவே இம்முறை தேடுதல் வேட்டை தன் எல்லைகளைச் சற்றே விஸ்தரித்தது. வீட்டுக்குப் பின் பக்கம், அக்கம் பக்கம், ஓலைக்கூரை என்று எண்ணிப்பார்க்க முடியாத எல்லைகள் வரை தேடினார்கள்.
நான் நினைத்தது சரி. தேடச் சென்ற அதிகாரிகளுள் ஒருவர் பரபரப்புடன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.
‘சார்! நீங்க உடனே இங்க வரணும்.
இங்க என்னென்னவோ இருக்கு சார்!’ பங்களாக்களுக்கு மட்டும்தானா அவுட்ஹவுஸ் இருக்கும்? குடிசைகளுக்கும் இருக்கலாம். தப்பில்லை.
ஹரி பாபுவின் வீட்டை ஒட்டி, சற்றுத் தள்ளி இருந்த அந்த இன்னொரு மறைவிடத்தை என்னுடைய சகாக்கள் திறந்தது, உண்மையில் இந்த வழக்கின் சொர்க்க வாசலைத் திறந்தது மாதிரி. உள்ளே பண்டில் பண்டிலாக பேப்பர்கள்.
அத்தனையும் அச்சுத்தாள். ஹரி பாபுவின் பிற பொருள்கள். பல ரசீதுகள். கடிதங்கள். பாக்கியநாதன் ஹரி பாபுவுக்கு எழுதிய கடிதங்கள்.
ஹரி பாபுவின் காதலி சுந்தரி அவருக்கு எழுதிய கடிதங்கள்.
சந்தன மாலையுடன் தற்கொலை குண்டுதாரி தனு
சம்பந்தமே இல்லாமல் மே மாதம் 21ம் தேதி பூம்புகார் எம்போரியத்தில் ஒரு சந்தன மாலை வாங்கியதற்கான பில். அதில் 65 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முதல் முதலாக ஹரி பாபு என்கிற பெயருக்கு அப்பால் எங்களுக்கு வேறு சில பெயர்கள் இந்த வழக்கோடு சம்பந்தப்பட்டு, தெரியத் தொடங்கியது அந்தக் கணத்திலிருந்துதான்.
யார் பாக்கியநாதன்? யார் முத்துராஜா? முருகன் என்பது யார்?
இந்தக் கடிதங்கள் சுட்டும் இந்தப் பெயர்கள், இந்த வழக்குடன் தொடர்புடையவைதானா? எனில், எந்தளவு? சுந்தரி என்ற பெண் விழுப்புரத்திலிருந்து ஹரி பாபுவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள்.
காதல் கடிதம். அந்தக் கடிதம்தான் எத்தனை அதிர்ச்சி சுமந்திருக்கிறது?
வேண்டாம். நாம் இலங்கைக்கெல்லாம் போக வேண்டாம். இங்கேயே திருமணம் செய்துகொண்டு வாழலாம்.
நீ போகிற பாதை ஆபத்தாகத் தெரிகிறது. நமக்கு எதற்கு அதெல்லாம் என்று இந்தப் பெண் எதைச் சொல்கிறாள்? முன்னதாக, ஹரி பாபுவுக்குக் கடிதம் எழுதியிருந்த பாக்கியநாதன் பிபிஎல் ஆல்ரவுண்டர்ஸ் என்றொரு அச்சகம் நடத்தி வருகிறார் என்பது தெரிந்திருந்தது.
பாக்கியநாதனின் அச்சகம், ஹரி பாபு வீட்டில் பேப்பர் பண்டில்கள் ஓரளவு ஒத்துப் போவதாகவே இருந்தது.
ஆனால், அவரும் சுபா சுந்தரத்திடம் வேலை பார்த்தவர்தான் என்கிற விவரம் ரவி சங்கரன் மூலமாகத் தெரியவந்தபோதுதான் ஹரி பாபு பாக்கியநாதன் சுபா சுந்தரம் விடுதலைப் புலிகள் என்று ஒரு நேர்க்கோடு போட்டு யோசிக்கத் தோனன்றியது.
இடையே நளினியும் முருகனும் வந்தபோது எங்கள் வேலை மிகவுமே எளிதாகிப் போனது.
தொடரும்ஸ
கே. ரகோத்தமன்