உழைத்துச் சாப்பிடும் காகங்கள்
14 Sep,2018
நெதர்லாந்தைச் சேர்ந்த ரூபென் வானும், பாப் ஸ்பிக்மனும் இணைந்து தெருவில் உள்ள சிகரெட் துண்டுகளை சுத்தம் செய்யும் ரோபோ ஒன்றை உருவாக்கினார்கள்.
ரோபோவை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் சில சிக்கல்கள் இருந்தன. இதனால் ரோபோவுக்கு பதிலாக பறவைகளுக்குப் பயிற்சி அளித்து, பயன்படுத்த முடிவெடுத்தனர். நீண்டகாலமாக புறாக்களை மனிதர்கள் பயன்படுத்தி வந்ததால், அவற்றைத் தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் புறாக்களுக்கு பயிற்சி அளிக்கும்போதுதான் அது எவ்வளவு கடினமான விஷயம் என்பது அவர்களுக்கு புரிந்தது. காகங்களுக்குப் பயிற்சியளிக்க முடிவெடுத்தனர். அவைகள் சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்துவதற்கு நூதன முறையை கையாண்டார்கள். அது காகங்களுக்கு தீனி போடும் விதத்தில் அமைந்திருந்ததால் அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைத்திருக்கிறது.
“நெதர்லாந்து ரெயில் நிலையங்களில் சிகரெட் துண்டுகளைச் சுத்தம் செய்வதே மிகப் பெரிய வேலை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவே நாங்கள் முயன்று வருகிறோம். இந்த வேலையை காகங்களால்தான் மிகச் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை நாங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டோம். காகங்கள் புத்திசாலியாக இருக்கின்றன. சுற்றுப்புறத்தை உற்று நோக்குகின்றன. எளிதாக மனிதர்களிடம் நெருங்கிவிடுகின்றன. அதனால் காகங்களை வைத்து மனிதர்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
சில காகங்களுக்கு சிகரெட் துண்டுகளை எடுத்து வந்து, எங்கள் கருவியில் போடும்படி பயிற்சி அளித்தோம். சரியாக அந்தக் கருவியில் சிகரெட் துண்டுகளைப் போட்டால், கருவியிலிருந்து வேர்க்கடலைகள் வெளிவரும். அதைச் சாப்பிட்டுவிட்டு, அடுத்த சிகரெட் துண்டைத் தேடிப் பறக்க ஆரம்பித்துவிடும். இப்படிக் கடலைகளைச் சாப்பிடுவதற்காக சிகரெட் துண்டுகளைத் தேடித்தேடி எடுத்து வருகின்றன. நாங்கள் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக வேலை செய்கின்றன. இப்படி சிகரெட் துண்டுகளை எடுத்து வருவதால், காகங்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்படுகிறதா? என்பது பற்றியும் பரிசோதிக்க வேண்டியிருக்கிறது. ஒருவேளை காகங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் வேறு வழியைத்தான் நாட வேண்டும்’’ என்கிறார் ரூபென். உலகம் முழுவதும் சிகரெட் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஓர் ஆண்டில் 6 லட்சம் கோடி சிகரெட்களை மனிதர்கள் புகைக்கிறார்கள்.