'தமிழ் யுவதி கொலை'- சடலத்தின் அருகில் இராணுவத்தின் இடுப்புப் பட்டி?
29 Aug,2018
கிளிநொச்சிப் பகுதியில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொலை செய்யப்பட்டபின்னர் அவ்விடத்தில் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என வலுவாக நம்பப்படுகிறது.
மேலாடைகள் எதுவுமே இல்லாமல் குறித்த சடலம் அவ்விடத்தில் காணப்படுவதே இந்த சந்தேகத்தை பலரிடத்திலும் ஏற்படுத்தியிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.
மேலும், குறித்த பெண்ணின் காதில் தோடுகளும் காணப்பட்டுள்ளன.
சடலத்தின் சுற்றுப்புறச் சூழலில் பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தும் இடுப்பு பட்டி, ஒரு கோர்வையில் நான்கு திறப்புக்கள், பியர் ரின், நீலம் மற்று மஞ்சள் நிறங்களில் செருப்புக்கள் இரண்டு சோடி, கால் சங்கிலி, சிவப்பு பேனை ஒன்று, மற்றும் நீலப் பேனை ஒன்று, என சில சான்றுப்பொருட்கள் காணப்பட்டுள்ளன.
மேலும், கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் வகையில் கழுத்தில் கறுப்பு அடையாளம் காணப்படுவதுடன், முகம் சேதப்படுத்தப்பட்ட நிலையிலும் காணப்பட்டுள்ளது.
அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களில் எரிக்கப்பட்ட வைக்கோல்கள் மத்தியில் சடலம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. காரணம் சடலத்தின் கால்களில் கரி படிந்திருக்கிறது.
எவ்வாறாயினும், சடலம் காணப்படும் சூழலில் சிதறி கிடக்கும் சான்றுப்பொருட்களை அவதானிக்கின்ற போது குறித்த பகுதியில் கடலமாக காணப்படும் யுவதிக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் இடையே முரண்பாடுகளும், இழுபறிகளும் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பலமாக சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு பிற்பகல் 2.45 மணிக்கு சென்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்டுள்ளார்.
அத்தோடு மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது