திருடிய பணத்தை வட்டியுடன் அனுப்பிய நபர்
02 Aug,2018
அமெரிக்காவில் நபர் ஒருவர் திருடிய பணத்தை வட்டியுடன் திருப்பி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மாகாணம் அரொசோனாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். இந்த கடிதம் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
அந்த கடிதத்தை எழுதியவர் 20 வருடங்களுக்கு முன்பாக அந்த பெண்ணின் ஹோட்டலில் வேலை செய்தவர். அவர் கடிதத்தில் எழுதியிருப்பது பின்வருமாறு,
நான் உங்கள் உணவகத்தில் 1990களில் வேலை செய்தேன். அப்போது என்னுடன் பணியாற்றிய சக ஊழியர்களின் பேச்சைக்கேட்டு, கல்லா பெட்டியிலிருந்த பணத்தை நான் திருடிவிட்டேன். அதனை நீங்கள் கண்டுபிடித்து என்னை கடையிலிருந்து நீக்கிவிட்டீர்கள்.
அதன்பின்னர் கஷ்டப்பட்டு வளர்ந்தேன். 20 ஆண்டுகள் ஓடிவிட்டது. நண்பர்கள் பேச்சை கேட்டு நான் திருடிய சம்பவம் இப்பொழுது வரை என்னை மிகவும் வருத்தமடைய செய்கிறது. ஆகவே நான் எடுத்த பணத்தை வட்டியுடன் அனுப்பியுள்ளேன். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் இருங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலங்கள் ஓடினாலும் செய்த தவறை உணர்ந்துள்ளார் இந்த மனுஷன். ஆனால் பல ஜீவன்கள் எவ்வளவு காலம் ஆனாலும் செய்த தவறை திருத்திக்கொள்ளாமல் பலரை கஷ்டப்படுத்தி வருகின்றனர்.