காலையில் எழுந்ததும், மொட்டை மாடியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது தான் அலமேலுவின் முதல் வேலை. காய்கறி செடி, பூச்செடி என்று ஒவ்வொரு செடிக்கும் பார்த்து பார்த்து, பக்குவமாக தண்ணீர் ஊற்றுவாள். அவரைக் கொடி படர்ந்திருந்த பந்தலின் ஓரத்தில் கட்டி விடப்பட்டிருந்த கூண்டில், இரண்டு தேன் சிட்டுகள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்ததை மகிழ்ச்சியுடன் பார்த்தாள்.
தன் குடும்பத்திற்காக உழைத்து, பிள்ளைகளுக்காக வளைந்து, தேவையற்ற பொருளாக தனிமைப்படுத்தப்பட்ட அலமேலுவுக்கு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதும், தேன் சிட்டுகளை பார்த்து ரசிப்பது மட்டுமே ஆனந்தம்.
அலமேலுவுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். வசதியான வீட்டில் பிறந்திருந்தாலும், தங்கள் தோட்டத்தில் வேலை செய்த கணபதியிடம் காதல் வயப்பட்டு, பெற்றோரின் எதிர்ப்பைத் தாண்டி, திருமணம் செய்து கொண்டாள். காதல் கணவரோடு ஒரு சிறிய குடிசை வீட்டில், அவளின் வாழ்க்கை பயணம் துவங்கியது.
ஆண்டுகள் ஓடியது, ஆசை ஆசையாக கட்டிய வீட்டில், ஆறு மாதம் கூட வாழ கொடுத்து வைக்காமல், எதிர்பாராமல் நடந்த சாலை விபத்தில் பலியானார் கணபதி. அந்த செய்தியை கேட்டதும், அதிர்ச்சியில் உறைந்து போனாள் அலமேலு. பலம் கொண்ட வரைக்கும் கத்தி, அழுது ஓய்ந்தாள். ஆறுதல் சொன்ன உறவுகள், மூன்று நாட்களில் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கிளம்பியது.
'போனவரு திரும்பி வரப்போவதில்லைன்னு ஆயிடுச்சு. இதற்கு மேல இடிந்து போயி உட்கார்ந்திருந்தால், பிள்ளைங்க வாழ்க்கை வீணாகிப் போயிடும்ன்னு உணர்ந்தாள். எது எப்படி இருந்தாலும், தன் பிள்ளைங்க எல்லாரும் நல்லா இருக்கணும்...' என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாள்.
திறமையுள்ள மனம் எங்கே இருந்தாலும், சாதிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தன் வீட்டு வாசலிலேயே இட்லி கடை ஆரம்பித்தாள். முதலில் இட்லி கடைக்கு வரத் தயங்கிய ஊரார், அலமேலுவின் சாம்பார் வாசனையை நுகர்ந்து, மல்லிப்பூ போன்ற இட்லியை சுவைக்க ஆரம்பித்தனர். அலமேலுவின் இட்லி கடை வியாபாரம் சூடுபிடித்தது. காலையில் வியாபாரத்திற்காக, மதியம் ஊற வைத்த அரிசியை மாலைக்குள் மாவாக்கி விடுவாள். கிரைண்டரில் மாவு ஓடிக்கொண்டிருக்கும்போதே, சட்னி, சாம்பாருக்கு தேவையான வெங்காயம், காய்கறிகளை நறுக்கி விடுவாள்.
எல்லா வேலைகளையும் முடித்து, அவள் படுப்பதற்கு, இரவு, 11:00 மணியாகி விடும். மீண்டும், அதிகாலை, 4:00 மணிக்கெல்லாம் எழுந்து, விறகு மூட்டி அடுப்பை பற்ற வைத்து விடுவாள். ஒவ்வொரு நாளும் புகையால் ஏற்படும் கண் எரிச்சலில் அவதிப்படும் அலமேலுவை பார்க்கும்போது, கல் மனதும் கரைந்து விடும்.
'உன் உடம்பை கெடுத்து இப்படி கஷ்டப்படணுமா?' என்று யாரேனும் கேட்டால், 'என்ன பேசுறீங்க... என் புள்ளைங்களுக்காகத் தானே கஷ்டப்படுறேன்...' என்பாள்.
ஐந்து மகன்களுக்கும் அடுத்தடுத்து திருமணம் நடந்தது. மகன், மருமகள், பேரன், பேத்திகளுடன், ஒரு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது அலமேலுவுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. தான் தனி மரமாக நின்றாலும், ஒரு தோப்பையே உருவாக்கி விட்டதாக பெருமிதம் கொண்டாள். குடும்ப உறவுகள் பெருக, பெருக பிரச்னைகளும் பெரிதாகியது.
அன்பு இல்லாத இடத்தில் சிறு சிறு பூசல்களும், பூத வடிவமாகியது. மன விரிசலின் காரணமாக கூட்டுக் குடும்பம் என்ற பெரிய கண்ணாடியை, 'டம்'மென்று போட்டு உடைத்தனர்.
தனிக்குடித்தனம் ஒன்றே இதற்கு தீர்வு என்று முடிவெடுத்த நான்கு மகன்களும், நான்கு திசைகளுக்கு செல்ல, கடைக்குட்டி என்று செல்லமாக வளர்த்த நடேசன் மட்டும் தன்னருகே இருந்தது, சற்று ஆறுதலை தந்தது அலமேலுவுக்கு.
வெயில் தலைக்கேறியதும் தான், பழைய நினைவுகளிலிருந்து வெளி உலகிற்கு வந்தாள் அலமேலு. தனக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அறையில் வந்து அமர்ந்து கொண்டாள். பசி, வயிற்றை கிள்ள, நொடிக்கொரு முறை தன் பேத்தி வருகிறாளா என்று வாசலை பார்த்த வண்ணம் இருந்தாள். வழக்கத்திற்கு மாறாக மருமகள் சாப்பாட்டு தட்டை கொண்டு வந்து, 'ணங்'கென்ற சத்தத்துடன் வைத்தாள். அந்த சத்தமே மருமகளின் வேண்டா வெறுப்பை காட்டியது.
மருமகளிடம், ''திவ்யா எங்கம்மா?'' என்று கேட்டாள் அலமேலு.
மாமியாரின் முகத்தை கூட ஏறிட்டு பார்க்காமல், சுவரை பார்த்தபடி, ''அவ காலேஜுக்கு போயிட்டா,'' என்று கூறியவள், திரும்பி பார்க்காமல் நடந்து சென்றாள். பெற்ற மகனே கணக்கு பார்த்து சோறு போடும்போது, எங்கிருந்தோ வாழ வந்த மருமகளிடம் அவள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
முன்பெல்லாம் தனியாக சமைத்து சாப்பிட்ட அலமேலுவுக்கு, முதுமையின் காரணமாக, கை நடுக்கமும் ஒட்டிக்கொண்டது. மகனிடம் தன் நிலையை எடுத்துக் கூறினாள்.
''தம்பி... முன்ன மாதிரி என்னால வேலை செய்ய முடியலப்பா,'' என்றாள். அவன், உடனே பதில் சொல்லாமல், மனைவியின் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தான். அவள், தலையாட்டி பொம்மையாக மண்டையை ஆட்டினாள்.
''சரிம்மா... இனிமே மூன்று வேளைக்கும் சாப்பாடு கொடுத்து விடுகிறோம். ஆனால், மாதா மாதம் வரும் வீட்டு வாடகை பணத்தை என்னிடம் கொடுத்துடுங்க,'' என்றான். அதைக் கேட்டதும் ஆடிப் போனாள் அலமேலு. ஏனெனில், பிள்ளைகள் கைவிட்டு உதறிப் போனாலும், தன் கைச்செலவுக்கு உறுதுணையாக இருந்தது வாடகை பணம் தான். அந்த முதலுக்கும் மோசமாகி, ஒரு ரூபாய்க்கு கூட மகனின் கையை எதிர்பார்க்கும் நிலை வந்து விட்டதே என்று வருந்தியவள், மகனின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காமல், ''சரிப்பா... வாங்கிக்கோ,'' என்று சம்மதித்தாள். அதன்பின் வேளா வேளைக்கு சாப்பாடு வந்தது. பேத்தி திவ்யா தான் கொண்டு வந்து தருவாள். பேரன் தரண், வெளியூரில் படிக்கிறான்.
மருமகள் வைத்து சென்ற சாப்பாட்டை திறந்து பார்த்தாள். நான்கு இட்லியும், தேங்காய் சட்னியும் இருந்தது. கூடவே, மருந்தளவிற்கு தக்காளி சட்னியும் வைத்திருந்தாள்.
'தன்னிடமிருந்து பெறும், 1,500 ரூபாய்க்கு இதற்கு மேலா சாப்பாடு கிடைக்கும்?' என்று நொந்து கொண்டே சாப்பிட்டாள். சாப்பிட்டு முடித்து, தட்டை கழுவி வைத்து, 'டிவி'யை போட்டு, கட்டிலில் படுத்துக் கொண்டாள். 'டிவி' சீரியலில் மனம் ஒட்டாமல், துாங்கி விட்டாள்.
''பாட்டிம்மா... என்ன பண்றீங்க?'' என்ற குரல் கேட்டதும் தான், சுய நினைவுக்கு வந்தாள், அலமு.
''வாடா கண்ணு... இப்பதான் காலேஜ் முடிந்து வர்றியாடா?'' என்றாள், அலமேலு.
''ஆமாம் பாட்டியம்மா... நீங்க சாப்பிட்டீங்களா... அம்மா சாப்பாடு கொண்டு வந்தாங்களா... அடுத்த வாரம் பரீட்சை வருது பாட்டிம்மா... அதனால தான் சீக்கிரம் காலேஜுக்கு போயிட்டேன்,'' என்றாள், திவ்யா.
தன்னை பற்றி அக்கறையுடன் கேட்ட பேத்தியை, அன்புடன் கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் வடித்தாள், அலமு.
''ஏன் பாட்டிம்மா அழறீங்க...''
''இந்த உலகத்துல அன்பு, பாசம் எல்லாம் அழிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்டா... நீ பேசுற கனிவான பேச்சும், காட்டுற அக்கறையும், என்னை மெய்சிலிர்க்க வைக்குதுடா.''
''எங்கே போனாலும் மனதை அலைபாய விடக்கூடாது. இந்த வயசுல பார்க்குற எல்லாமே அழகாத்தான் தெரியும். பசங்க மீது ஈர்ப்பு வரும், அது தப்பில்லை. அது, வயசுக் கோளாறு. குதிரைக்கு கடிவாளமிட்டது போல, நம் மனதை அடக்க பழகிட்டா, நம்மள எந்த தீய சக்தியாலும் அசைக்க முடியாதுன்னு சொன்னீங்களே... ஞாபகமிருக்கா பாட்டி... என்ன தான் கல்வி கற்றாலும், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதது போல, அது, வாழ்க்கைக்கு உதவாது. நீங்க கற்றுக்கொடுத்த ஒழுக்கம் தான் வாழ்க்கைக்கு உதவும். நீங்க, என் பாட்டியில்ல... எனக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம்,'' என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் திவ்யா.
அடுத்த நாள் காலை, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, சாப்பாட்டின் வரவுக்காக காத்திருந்தாள், அலமேலு.
நீண்ட நேரமாகியும், யாரும் சாப்பாடு கொண்டு வராததால், தன் கவுரவத்தை ஓரம் கட்டி வைத்துவிட்டு, சமையலறை நோக்கி சென்றாள். மகனும், மருமகளும் பேசியது காதில் விழுந்தது.
''உங்க அம்மாவுக்கு நீங்க மட்டும் தான் பிள்ளையா?'' என்று கேட்டாள் சுமதி.
''ஏன் திடீர்ன்னு உனக்கு இப்படியொரு சந்தேகம்?'' என்றான், நடேசன்.
''பெத்த தாய்க்கு சோறு போடணும்ன்னு நினைப்பு இல்லாமல், உங்க அண்ணனுங்க சாமர்த்தியமா பிழைக்குறாங்க... இப்ப நாமதான் வசமா மாட்டிக்கொண்டு கஷ்டப்பட வேண்டியிருக்கு,'' என்றாள்.
''நீ என்ன கஷ்டப்படுற...'' என்றான் கோபமாக.
''ஆமாம்... நேரா நேரத்துக்கு நீங்களா சமைக்குறீங்க, நான் தானே சமைச்சு கொட்ட வேண்டியிருக்கு,'' என்று ஆதங்கப்பட்டாள்.
''அதுக்குத்தான் மாதா மாதம், சொளையா, 1,500 ரூபாய் கொடுக்குறேன்ல,'' என்றான்.
''அது, உங்க அம்மா கொடுக்கிறது. ஏதோ உங்க கைக் காசை கொடுக்குறது போல அலுத்துக்குறீங்களே,'' என்று எகிறினாள்.
''இப்ப என்ன தான் செய்யணும்ன்னு சொல்ற?'' என்றான்.
''உங்க அம்மா கழுத்துல இருக்குற, ஆறு பவுன் செயின் என் கைக்கு வந்தால் தான், உங்க அம்மாவுக்கும் சேர்த்து சமைப்பேன்,'' என்றாள் உறுதியாக.
''அடப்பாவி... அவங்க கைச்செலவுக்கு இருந்த பணத்தை தான் புடுங்கிட்ட, இப்போ அவங்க தங்க சங்கிலியையும் வாங்கி தரச் சொல்றியா?'' என்றான் கடுப்பாக.
''முடிவா என்ன சொல்ற?'' என்றான்.
''கண்டிப்பா அந்த செயின் என் மகளுக்கு வேணும்ன்னு சொல்றேன்,'' என்றாள் பிடிவாதமாக.
''நீ என் அம்மாவுக்கு சோறு போடவே வேணாம். என் அம்மாவை எப்படி பார்த்துக் கொள்ளணும்ன்னு எனக்கு தெரியும்,'' என்றான்.
''எப்படி பார்த்துப்பீங்க?'' என்றாள் கிண்டலாக.
''அந்த கவலை இனி உனக்கு வேண்டாம்... உன்னை மாதிரி மருமகளிடமிருந்து தப்பித்து, சுதந்திரமாக இருக்கத்தான் நிறைய முதியோர் இல்லங்கள் இருக்கே... உனக்கு கொடுக்கிற காசை, அங்கே கொடுத்தால், அவர்கள் அம்மாவை ராணி போல பார்த்துப்பாங்க,'' என்றான்.
அவர்கள் பேசுவதை கேட்ட அலமேலு அம்மாவுக்கு, பசி மறந்து போக, தன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்.
ஒரு வாரமாக, சாப்பாடு ஒழுங்காக வராமலிருக்க, இந்த பிரச்னைக்கு தீர்வு கட்ட எண்ணினாள் அலமேலு.
ஒரு ஞாயிற்றுக் கிழமை-
அலமேலு தன் துணிகளை ஒரு பைக்குள் எடுத்து திணித்துக் கொண்டிருந்தாள். நடேசன் சேரில் அமர்ந்திருந்தான். மாமியாரின் செய்கைகளை பார்த்தபடி நின்றிருந்தாள், மருமகள் சுமதி.
மகனின் அருகே சென்றவள், ''தம்பி... இந்த வீட்டை வித்து வரும் பணத்தை ஐந்தாக பிரித்து, ஆளுக்கொரு பங்காக எடுத்துக்கோங்க... அப்புறம் என் பேத்திக்கு வேணும்ன்னு கேட்டிருந்தால், இந்த செயினை நானே கழற்றி கொடுத்திருப்பேன்... இதற்காக நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டிருக்கத் தேவையில்லை. என் பேத்தியை விட எனக்கு இந்த வயசுல தங்க சங்கிலி முக்கியமா என்ன...'' என்று தன் கழுத்திலிருந்த செயினை கழற்றி, திவ்யாவின் கழுத்தில் போட்டாள், அலமு.
''திவ்யா கண்ணு... மாடியில் இருக்கும் செடிகளுக்கு மறந்துடாமல் தினமும் தண்ணீ ஊத்துடா,'' என்றாள்.
''பாட்டிம்மா... நீங்க கண்டிப்பா போகணுமா?'' என்றாள் திவ்யா.
''ஆமாம்டா கண்ணு... வயசானவங்க, வாழ்கிறவர்களுக்கு வழி விடணும். அதுதாண்டா உலக நியதி,'' என்றாள்.
''பாட்டி... ஒரு நிமிடம்,'' என்று கூறிய திவ்யா, அவள் அம்மாவின் அருகே சென்றாள்.
''அம்மா... பிறக்குற எல்லாருக்கும் இறப்பு நிச்சயம் தான். ஆனால், பிறக்குற எல்லா உயிர்களுக்கும் முதுமைப் பருவம் கிடைத்திடாது. முதுமை என்பது ஒரு வரம். அது, கிடைக்க கொடுத்து வச்சுருக்கணும்மா... வாழ்க்கை ஒரு வட்டம் மாதிரி, அதுல நேற்றைய மருமகள் தான் இன்றைய மாமியார். இன்றைய மருமகள் தான், நாளைய மாமியார். உனக்கும் வயசாகும்... புரிஞ்சுக்கோம்மா,'' என்றாள்.
''அப்பா... பாட்டி, இட்லி கடை நடத்தி தானே உங்களை வளர்த்தாங்க?''
''ஆமாம்!'' என்றான் நடேசன் ஒற்றை வரியில்.
''நீங்க ஐந்து பேரும், பாட்டியிடம் பசின்னு ஓடி வந்து நின்றபோது, ஒவ்வொருத்தருக்கும், பாட்டி, முழு இட்லிய கொடுத்தாங்களா... இல்ல, ஒரு இட்லியை ஐந்து பங்காக பிரிச்சுக் கொடுத்தாங்களா?'' என்றாள்.
மகள் கேட்ட கேள்வி, நடேசனை, யாரோ கன்னத்தில் ஓங்கி அறைந்தது போலிருந்தது. அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
''உடம்பு நல்லாயிருந்த காலத்துல, பல பேர் பசியை போக்கிய பாட்டிக்கு, ஒரு வாய் சோறு போட முடியலைன்னு முதியோர் இல்லத்துக்கு அனுப்புறீங்க... செடி, கொடிகள் மீது பாட்டி வைத்திருக்கும் பாசத்தை கூட நீங்க அவரிடம் காட்டவில்லையே அப்பா... உங்களுக்கும் ஒரு மகன் இருக்கிறான் என்பதை மறந்துடாதீங்க... சாட்டையடியாய் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்த மகளின் பேச்சில், சுமதி வெலவெலத்துப் போனாள். நடேசன் கண்களில், நீர் அரும்பத் துவங்கியது.
''வயதான காலத்தில் தான் பெற்ற பிள்ளைகளோடும், பேரன், பேத்திகளோடும் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டிய காலத்தை, முதியோர் இல்லத்தில் தொலைக்க சொல்கிறீர்கள். அப்பா, நீங்க உயிரோடு இருக்கும்போது, பாட்டியை, வீட்டை விட்டு வெளியே அனுப்பினால், நீங்க வாழ்ந்தும் பயனில்லை. இனிமேலும் பாட்டி இருக்கணுமா... போகணுமான்னு நீங்க தான் முடிவெடுக்கணும்,'' என்று திவ்யா பேசிக் கொண்டிருக்கும்போது, சற்றும் எதிர்பாராமல், நடேசனும் - சுமதியும், அலமேலுவின் கால்களில் விழுந்தனர்.
''நாங்க அறியாமையில் தப்பு செய்து விட்டோம். எங்களை மன்னிச்சிடுங்கம்மா,'' என்று மன்னிப்பு கேட்டனர். அலமேலு, அவர்களை துாக்கி, ஒரு சேர அணைத்து அழுதாள். பெற்ற மனம், பிள்ளைகளை வாழ்த்துமே தவிர, வசை பாடாது,''
தன்னை வெட்டியவன் வீட்டில் தோரணமாக தொங்கும் வாழை போல, தன்னை வெறுத்த மகனையும், மருமகளையும் பெருந்தன்மையுடன் மன்னித்து ஏற்றுக்கொண்டாள் அலமு.
''அலமு... உன் பேத்தி போல பத்து பேர் இருந்தால் போதும், எதிர் காலத்தில் நம் நாட்டில் முதியோர் இல்லங்களே உருவாகாது,'' என்று திவ்யாவை மனமார பாராட்டினாள், அலமுவின் தோழியான பக்கத்து வீட்டு, பாப்பாத்தியம்மாள்.
முதுமைப் பசி என்பது, உறவுகளுடன் சேர்ந்து இருப்பது தான் என்பதை புரிந்து கொண்டாள், சுமதி.