சுவிட்சர்லாந்தின் ZUG மாநகர சபை உறுப்பினர்களிற்கான தேர்தலில்தமிழர் ஒருவர்
07 Jul,2018
சுவிட்சர்லாந்தின் ZUG மாநகர சபை உறுப்பினர்களிற்கான தேர்தலில், முதல் முதலாக இலங்கைத் தமிழர் ஒருவர் சோசலிச ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
15 வயதில் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்த ரூபன் சிவகணேசன் என்ற தமிழரே மாநகர சபை வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரது தெரிவு ZUG நகரத்திற்கான ஓர் பல்லின மக்களின் பிரதிநிதத்துவத்தினை உறுதி செய்கின்றது.
இலங்கையில் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு சுவிட்சர்லாந்தில் தஞ்சம் அடைந்து 36 வருடங்களாக வாழ்ந்து வரும் தமிழர்களிற்கு கிடைத்த ஓர் மாபெரும் அங்கீகாரமாகும்.
ரூபன் சிவகணேசன் 2006ஆம் ஆண்டு கன்ரோன் ZUG இற்கான மாநில அரச உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டாவர்.
வலதுசாரிகளை பெரும்பாண்மையாக கொண்ட ஓர் மாநிலத்தில் முதலாம் தலைமுறையினரை சார்ந்த ஓர் இளைஞன் முதல் முறையாக 2006இல் மாநில உறுப்பினர்களிற்கான தேர்தலில் வெற்றி பெற்றது ஓர் பெரிய சாதனை ஆகும்.
ZUG மாநகர சபையில் அண்ணளவாக 30,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 120க்கு மேற்பட்ட தேசிய இனங்கள் ஒருங்கிணைந்து வாழும் ஓர் நகரம். இந் நகரம் சுவிட்சர்லாந்தில் மத்தியில் அமைந்துள்ளது.
அது மட்டுமல்லாது ZUG நகரத்தில் வாழும் 40 விகிதமான மக்கள் வெளிநாட்டவர்கள். ஒவ்வொரு 3ஆவது நபர்களின் அடிப்படை பிறப்பிடம் வெளிநாடுகளாகவே இருக்கின்றது.
இம்மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கான ஓர் பொருத்தமான வேட்பாளர் இந்நகரத்திற்கு முன் தேவையாக உள்ளது. ரூபன் சிவகணேசன் அவர்களின் தெரிவானது இத் தேவையை நிவர்த்தி செய்யும் என்பது யதார்த்தமானது.
ரூபன் சிவகணேசன, வெளிநாட்டவர்களின் அரசியல் உரிமைகள், இளைஞர்களின் அரசியல், சூழல் பாதுகாப்பு, தொழிலாளர்களின் உரிமை, போன்ற போராட்டங்களிலும் அனைத்து முன்னெடுப்புகளிலும் தன்னை எப்பொழுதும் முன் நிறுத்தி வந்துள்ளார்.
அது மட்டுமல்லாது சுவிட்சர்லாந்தில் அவ்வப் பொழுது மேலெழும் இனவாதத்திற்கு எதிராக எவ்வித தயக்கமும் இன்றி தனது எதிர்பினையும் கண்டணங்களையும் Swissblacks என்ற அமைப்பின் மூலம் பதிவு செய்து வந்துள்ளார்.
பல அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்த அனைத்து இனத்தவர்களிற்கும் பாரபட்சமின்றி தனது சமூக சேவையை 2005இல் இருந்து Asylbrற்cke என்ற அமைப்பின் ஊடாக வழங்கி வந்துள்ளார்.
15 வயதில் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்த இந்த இளைஞனின் அரசியல் வாழ்வு இன்று இன்னுமொரு படி முன்னேறி மாநகர சபையின் உறுப்பினர் தேர்விற்கு இட்டுச்சென்றுள்ளது. இந்த தேர்வானது இவரது அரசியல் செயற்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கமுடிகின்றது.
சுவிட்சர்லாந்தின் தேசிய பாராளுமன்றத்தில் 7 அமைச்சர்கள் உள்ளனர். அதே வகைப்பட்டு மாநிலங்களிலும் மாநகரங்களிலும் 7 அல்லது 5 அமைச்சர்கள் உள்ளனர்.
ZUG மாநகர சபையில் இந்த 5 உறுப்பினர்களிற்கான தேர்தலிலேயே ரூபன் சிவகணேசன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது