பெண் என்பவள் அதிசயமாகவும், ஆண் என்பவன் அவசர மாகவும் அறியப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அன்று மழலையர் வகுப்பிலேயே தனி வரிசைகள். ஆரம்பப் பள்ளியில் சகஜமாகப் பழகியவர்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒதுங்கி அமர்வது பழக்கம்.
இருபாலர் பயிலும் பள்ளிகள் அன்று மிகவும் குறைவு. எதற்கு வம்பு என நிர்வாகம் நினைத்தது. எங்கள் பள்ளியோ பெண்களும் படிக்கும் பள்ளி. எட்டாம் வகுப்பு வருகிறபோது அரும்பு மீசை ஆரம்பிக்கும். பெண்கள் தாவணி அணிவது அப்போது கட்டாயம். ஒன்றாய்ப் படித்தாலும் ஒரு வரிகூட பேசாமால் உம்என்று இருக்க வேண்டும் என்று பெண்களுக்குப் போதிக்கப்பட்டது. தூரத்தில் ஆண் வருகிறபோதே தலையைத் தாழ்த்திக்கொண்டு பார்க்காததுபோல் கடந்து செல்ல வேண்டும். அப்படியே ஏதேனும் கேட்டாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வதே வழக்கம்.
பிரிக்கப் பிரிக்க ஆர்வம் அதிகரிக்கும். 6-ம் வகுப்பிலேயே சில மாணவர்கள் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசி அசிங்கப்படுவார்கள். பெண்க ளைப் பற்றியே சிந்திப்பதில் அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். ஒவ் வொரு வகுப்பிலும் ஒரு பெண்ணை உலகப் பேரழகியாக அறிவித்துவிடுவார்கள். அதை அறிந்த மற்ற அத்தனை பெண்களுக்கும் வருத்தம் ஏற்படும். அவரவர் கண்களில் அவர்களே அழகு. நான்கைந்து மாணவர்கள் அந்தப் பெண்ணை பகிரங்கமாகப் பின்தொடர்வர்கள். எங்குச் சென்றாலும், என்ன செய்தாலும், அவர்கள் வீட்டு நாய் போல சென்று வருவதை அனைவரும் அறிவர். வீடுவரை வழியனுப்பிவிட்டு வருவதும் உண்டு. 8-ம் வகுப்பு வரை படிப்பில் எட்டாத உயரத்தில் இருந்தவர்கள் இதனால் குட்டிக்கரணம் போட்டு மதிப்பெண்களில் மந்தமாகி குப்புற விழுவதும் உண்டு.
கொடி கட்டிப் பறக்கும் பெண்கள்
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் இந்த மாணவர்கள் காதல் கடிதங்களைக் கொடுப்பதும், அதைப் பெற்ற அப்பெண்கள் செருப்பைக் கழற்றிக் காண்பிப்பதும் உண்டு. சில நேரங்களில் கண்களால் அம்பு எய்தியது போதாதோ என்று எண்ணி, காகித அம்புகளை எறிவதும் உண்டு. இந்தப் பள்ளிப் பேரழகி கள் கல்லூரி சென்றதும் அங்கு தங்களைவிட இன்னும் அழகான பெண்களைப் பார்த்து உள்ளம் நொறுங்குவதும் உண்டு. அறிவால் சிறந்த பெண்கள் அங்கேயும் கொடிகட்டிப் பறப்பார்கள். அழகு எப் போதும் தொடர்புடைய உணர்வுதான் என்பது புரியும் போது காலம் கடந்திருக்கும்.
எனக்குத் தெரிந்த ஒரு மாணவன் 10-ம் வகுப்பில் 500-க்கு பெற்ற மதிப்பெண்களைவிட மேனிலை வகுப்பில் 1,200-க்கு பெற்ற மதிப்பெண்கள் குறைவு. கற்பனைகளுக்கு உருவம் கொடுத்து கனவுகளில் மிதந்ததால் வழுக்கி விழுந்த வரலாறு அது.
எங்கள் பள்ளி மேனிலை ஆனபோது ஆண்கள் மட்டும் படித்த பல பள்ளி மாணவர்கள் அங்கு சங்கமமாயினர். அவர்களுக்கு அதுவரை பெண்களின் வாசனையே கிடையாது. அவர்கள் அந்தப் புதிய அனுபவத்தில் வசமிழந்து போனதைப் பார்த்திருக்கிறேன். அவர் கள் மேற்படிப்புக் கனவுகள் சபலத்தின் காரணமாக சரிந்ததைக் கண்டிருக்கிறேன்.
இது கல்லூரியிலும் தொடர்வது உண்டு. மழலையர் வகுப்பில் இருந்து மேநிலை வரை ஆண்கள் மட்டுமே படிக்கும் வகுப்புகளில் படித்தவர்கள் கல்லூரிக்கு வந்ததும், அங்கிருக்கும் அத்தனை பெண்களும் மென்னடை போட்டு ஓடும் தேவதைகளாகத் தென்படுவார்கள்.
அவர்கள் பாட்டுப் போட்டிகளில் ஜாடையாகப் பாடி தங்கள் கனியாத காதலைத் தெரிவிப்பார்கள். இன்னும் சிலரோ முகத்தில் பச்சை குத்தாத குறையாக சிலர் பெயரை உதட்டில் இச்சை குத்தித் திரிவார்கள். எங்கள் கல்லூரியிலேயே நான்காண்டு பட்டப் படிப்பை கடைசி வரை முடிக்காமல் போனவர்கள் உண்டு.
ஆனாலும் அது ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே இடைவெளி இருந்த காலம். அன்று பெண்கள் தங்குவதற்குத் தனி வளாகம். அவர்கள் அரங்கத்தில் படம் பார்க்க தனி நேரம். நாடகப் போட்டிகள் நடக்கும். ஆனால், ஆண்களே அனைத்திலும் பங்கு பெறுவார்கள். பெண்கள் வேடத்தில் மீசை சரியாக முளைக்காத மாணவர்கள் நடிப்பார்கள். குரலை பெண்மையாக்க பெரி தும் முயல்வார்கள். எங்கள் பல்கலைக்கழகத்திலேயே பல முன்மொழிவுகள் உரிய நேரத்தில் வைக்கப்படும். தள்ளப்பட்டவை நூறு என்றால், கொள்ளப்பட்டவை ஒன்றிரண்டு உண்டு. அந்த சொர்க்கத்திலேயே சில திருமணங்கள் நிச்சயிக்கப்படுவது உண்டு. நடந்த பிறகு வாழ்க்கை நரகமாக மாற இணைந்த வேகத்தில் பிரிந்தவர் உண்டு. நீடித்து நெடு வாழ்வு வாழ்பவரும் உண்டு.
பேதம் குறைந்த தமிழ்நாடு
இன்று ஆண் - பெண் பேதம் தமிழகத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது. பள்ளியிலும், கல்லூரியிலும் மாணவ - மாணவியர் சகஜமாகப் பேசிப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஒருவர் எழுதிய நோட்டை அடுத்தவர் வாங்கிப் படிக்கிறார்கள். சந்தேகம் கேட்டுத் தெளிகிறார்கள். சேர்ந்து தேநீர் பருகுவது சகஜமாகி இருக்கிறது. நூலகத்துக்கு ஒன்றாகச் செல்கிறார்கள். ‘வாடா’ ‘போடா’ என அழைப்பது இயல்பாகியிருக்கிறது. அதற்கு எந்த மாணவனும் கோபித்துக்கொண்டதாகத் தெரியவில்லை. எங்கள் கல்லூரிப் பருவத்தில் அப்படி யாரும் அழைத்தும், கேட்டும் பழக்கமில்லை. இரண்டு பெண்கள் ஓர் ஆணோடு அமர்ந்து பேசுவதும், இரண்டு மூன்று ஆண்களோடு ஒரு பெண் சொந்த ஊருக்கு தொடர்வண்டியில் பயணிப்பதும் இன்று யாருக்கும் விகற்பமாகப் படவில்லை. மாணவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வகுப்புத் தோழர்கள் மருத்துவமனைக்கு அழைத் துச் செல்கிறார்கள். ரத்தம் தரவும் சித்தம் செய்கிறார்கள்.
வீடு வரை நட்பு
மகள் வேறொருவரோடு நட்பாகப் பழகுவதை அனுமதிக்கும் பெற்றோர் இன்று. வீடுவரை மகளின் வகுப்புத் தோழனை அழைத்து வந்தாலும் மரியாதை கொடுத்து சவரட்சணை செய் யும் மனப்பான்மை. இரண்டு வீட்டுப் பெற்றோரும் அறிமுகமாகிக்கொள்ளும் அளவு விசாலமான பழக்கவழக்கம். ‘பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருக்கக் கூடாது’ என்ற பழைய பஞ்சாங்கத்தை உதறி எறிந்துவிட்டு ‘என் மகள் தவறு செய்ய மாட்டாள்’ என்ற திடமான நம்பிக்கை. அன்று ஆண் ஓட்டுகிற இருசக்கர வாகனத்தில் அந்நியப் பெண் அமர்ந்து செல்வது தீயாய்ப் பரவும் செய்தி. இன்று ஏற்றிக்கொள்வதும், பயணம் செய்வதும் சாதாரணம். இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவோ, பெரிதுபடுத்தவோ யாருக்கும் நேரம் இருப்பதில்லை.
அன்று வகுப்புத் தோழியிடம் ‘இன்று உன் உடை அழகாக இருக்கிறது’ என்று சொன்னால் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு செல்லும் மனப்பான்மை இருந்தது. இன்று புலனத்தில் ‘நீ அழகு’ என்று தகவல் அனுப்பினால் கைகூப்புகிற சமிக்ஞைகளை அனுப்புவது சாதாரணம். எந்த மாணவனாவது தோழியிடம் விரும்புவதாகச் சொன்னால் ஏற்றுக்கொள்வதிலும், மறுப்பதிலும் கண்ணியம் காட்டுகிற பெரும்போக்கு ஏற்பட்டிருக்கிறது. மறுத்து விட்டால் ஒரு சில இடங்களில் நிகழும் வன்மத்தைத் தவிர மற்ற நேர்வுகளில் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று சொல்லி திருமணத்துக் கும் செல்லும் தாராளம் இருக்கிறது.
சென்னைக் கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த கிளர்ச்சியில் எத்தனையோ கல்லூரி மாணவர்கள் சில பகல் இரவுகளாக தவமிருந்தனர். அங்கேயே உணவு, உறக்கம் என்று போராட்டத்தின் நோக்கத்தை அடையும்வரை தீர்க்கமாக இருந்தனர். அங்கே பெற் றோர் துணிச்சலாக தங்கள் மகள்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அங்கு கோஷமிட்டார்கள். மற்ற மாண வர்களோடு கலந்து குரல் கொடுத்தார்கள். அவர்களைக் கண்காணிக்க யாருமில்லை. அவர்களே தங்களுக்கு வேலி யாக இருந்தார்கள்.
வட இந்தியாவில் இருந்து வந்த என் நண்பர் ‘மாணவ - மாணவியர் ஒன்றாக ஈடுபடும் இத்தகைய கிளர்ச்சிக்கு வடக் கில் வாய்ப்பே இல்லை’ என்று சிலாகித்தார்.
சின்ன அசம்பாவிதம்கூட நடக்காமல் அத்தனை இதயங்களிலும் அன்புச் சுவடுகளை மட்டும் பதித்துவிட்டு விலகிச் சென்றது அந்தப் பெருங்கூட்டம். 30 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்திய மாகி இருக்குமா என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.
ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது. பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது. பக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று. எப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி. அன்று பண்டம் மாற்றுமுறை பாசத்தால் நிகழ்ந்தது. புதிதாக நம் வீட்டு வத்தக் குழம்பு சின்னக் கிண்ணத்தில் அடுத்த வீட்டுக்குப் பயணிக்கும். அங்கு வைத்த மிளகு ரசம் இங்கு பதிலுக்கு வந்து சேரும். எந்த விசேஷமாக இருந்தாலும் அதற்காகச் செய்த பலகாரம் சுற்றியுள்ள வீடுகளுக் கும் சுடச்சுட வழங்கப்படும்.
நம் வீட்டு முருங்கை அதிகம் காய்த்தால், அது அடுத்த வீட்டினர் சாம்பார் வைப்பதற்காகவும். பக்கத்து வீட்டு செவ்வாழை தார் போட்டால் தண்டும் பழமும் கண்டிப்பாக நம் சமையலுக்கு வந்து சேரும். பால்காரர் மாடு கன்று போட்டதும் மறக்காமல் சீம்பால் அளிப்பது உண்டு. அதற்காகவே நாங்கள் அவர்கள் வைத்திருக்கும் மாடு எப்போது கன்று போடும் என்று காத்திருந்ததும் உண்டு. பாலில் கலக்கும் தண்ணீரை சீம்பாலால் அவர்கள் சரிசெய்து விடுவார்கள். இருப்பவர் இல்லாதவருக்குத் தருவதும், அதிகம் இருப்பவர் அடுத்தவரிடம் பகிர்வதும், யாரும் உபதேசிக்காமல் அன்று மக்கள் கடைப்பிடித்த நெறிமுறையாக இருந்தது.
ஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அருகருகே வாழ்ந்த சூழல் அது. எல்லோரிடமும் அவ்வப்போது பற்றாக்குறை தலைநீட்டும். அதை புரையேறும் தலையைத் தட்டிக்கொடுப்பதைப் போல சுற்றியிருப்பவர்கள் தங்கள் தாராளத்தால் அமுக்கி விடுவார்கள்.
’ரெண்டு தீக்குச்சி வேண்டும்’
நாங்கள் சிறுவராக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிரே மாட்டு வண்டி ஓட்டும் அண்ணன் தம்பிகள் ஐவர் இருந்தனர். அவர்களுக்கு நாங்கள் வைத்த பெயர் ’பஞ்ச பாண்டவர்’. காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் நாங்கள் தட்டுப்பட்டால் ஒற்றைக் கைகொடுத்து எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்துப் பள்ளியில் இறக்கிவிடுவார்கள். நூறு கிலோ அரிசி மூட்டைகளை அலாக்காக முதுகில் தூக்குவார்கள். உடலில் இரும்பையும் உள்ளத்தில் காந்தத்தையும் வைத்திருந்தவர்கள் அவர்கள். சமயத்தில் தீக்குச்சிகளை இரவல் கேட்டு இரவில் வருவார்கள். தீப்பெட்டிகூட சமயத்தில் வாங்க முடியாத சூழல் இருந்ததை இன்றையத் தலைமுறை நம்ப மறுக்கும்.
அந்தத் தோழர்கள் வீட்டுப் பெண்கள் அரிசி களைந்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து பானையில் ஊற்றிய நீரையெல்லாம் எடுத்துக்கொண்டு, கைநிறைய சாணத்தை வீட்டில் போட்டுவிட்டுச் செல்வார்கள். சமயத்தில் மிஞ்சிய குழம்பையும், சோற்றையும் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள். நள்ளிரவில் அரிக்கன் விளக்கோடு வெளியே வந்தால் அலறியடித்துக்கொண்டு ’என்ன ஆபத்தோ!’ என்று விசாரிக்க வருவார்கள். ’அண்ணன்’ என்றும் ’தம்பி’ என்றும் உறவு வைத்து அளவளாவுவார்கள். அத்தனை அந்நியோன்யம்.
அன்று அவசரத்திற்கொன்று கேட்பது கவுரவக் குறைச்சல் அல்ல. அதிகாலையில் காப்பித் தூள் டப்பா வறண்டி ருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டில் ஒரு குவளை இரவல் வாங்கி திருப்பித் தருவது உண்டு. இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்தால் பாலுக்குப் புரையூற்ற பக்கத்து வீட்டில் இரண்டு கரண்டி தயிர் வாங்கி வருவது உண்டு. அவற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள், மன நிறைவோடு பகிர்ந்தார்கள்.
ஜமுக்காளமும் மடக்கு நாற்காலியும்
மரச் சாமான்கள் அன்று விலை அதிகம். வீட்டடுக்கான முக்கியப் பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் இல்லை. பெரும்பாலும் பெண்களுக்கு பாயே விரியும். கொஞ்சம் வசதி இருந்தால் ஜமக்காளம் விரிக்கப்படும். ஆண்கள் அமர ஒன்றிரண்டு இரும்பு மடக்கு நாற்காலிகள். சிறுவர்கள் தரையில் அமர வேண்டும். வருகிற உருப்படி அதிகமானால் மர ஸ்டூல்கள் மேலிருக்கும் அரிசி டின்கள் இறக்கப்பட்டு துணியால் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டு இருக்கைகளாக மாறும். இன்னும் சிலர் கூடுதலாக வந்தால் அண்டை வீடுகளில் இருந்து நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படும். விருந்தினர் சென்றதும் உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கப்படும். ஏணி என்பது ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும்.
பரணில் இருக்கும் பாத்திரம் எடுக்கவும், கூரையில் ஏறி பழுது பார்க்கவும் வேண்டியபோது அடுத்தவர் ஏணி நமக்கு ஏற்றம் தர சித்தமாக இருக்கும். மரணம் என்பது பெரும்பாலும் வயோதிகத்தில் வரும். இறந்தவரை சாய வைக்கிற நாற்காலிகூட இரவலாய்ப் போகிற இடங்கள் உண்டு.
நம்மிடம் போதிய நாற்காலிகள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட்டதில்லை. உடனே இரவல் வாங்கி வர மகன்கள் என்கிற இரு காலிகள் இருந்ததால். தோசை சுடுவதற்கு அம்மாக்கள் கைவசம் முக்காலி இருக்கும். விருந்தினர் அமர்ந்து சாப்பிட நான்கைந்து பலகைகள் இருந்தன. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது அளவோடு சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலியும் முழங்கால் வலியும் வராமல் எல்லோரும் திடமாக இருந்தார்கள்.
பக்கத்து வீட்டு அட்டிகை
அவசரம் என்றால் அடுத்த வீட்டினரிடம் மிதிவண்டியை இரவல் வாங்குவது உண்டு. திருப்பும்போது மரியாதைக்காக காற்றை நிரப்பித் தருவார்கள். சமையல் எரிவாயு திடீரெனத் தீரும்போது பக்கத்து வீட்டு உபயத்தால் அடுப்பைப் பற்ற வைப்பதும் உண்டு. அன்று கத்தி முதல் சுத்தி வரை தேவையான பொருளை வழங்கிக்கொள்வதில் நட்பும், உரிமையும் சோம்பல் முறித்தன. கைக்கும் வாய்க்குமே வருமானம் நீடிக்கும் பரிதாப நிலை நடுத்தரக் குடும்பங்களில் நர்த்தனமாடியது. பெண் பார்க்க வருகிறபோது பக்கத்து வீட்டு அட்டிகைகூட பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கப் பயன்படும்.
இரவல் என்பது சின்ன நகரங்களில் மட்டுமே இருந்தது. கிராமங்களில் யார் வேண்டுமானாலும் எந்த வேப்ப மரத்திலும் பல் துலக்க குச்சியை ஒடித்துக்கொள்ளலாம். எந்த மோட்டார் ஓடினாலும் தங்கள் துணிகளை மூட்டையாக எடுத்துச் சென்று துவைத்துக்கொள்ளலாம். ஓடுகிற தண்ணீரில் சிண்டுகள் சோப்புத் தேய்த்துக் குளித்துக்கொள்ளலாம்.
அதற்காகவே பெரிய தொட்டிகள். உழவர்கள் தங்கள் நிலத்தில் இன்றும் வாணிகம் செய்வதில்லை. வருவோர் போவோர் ஆசையோடு மாங்காய் கேட்டால் காசு வாங்காமல் பறித்துத் தருவார்கள். கரும்பு வயல்களில் அங்கேயே ஒடித்து ருசிக்கத் தடையில்லை. குழந்தைகளுக்குப் பால் என்று கேட்டால் பணம் பெற்றுக் கொடுப்பதில்லை. இந்த அரிய பண்புகளால் சிற்றூர்களில் இன்னமும் மனிதம் ஜீவித்திருக்கிறது.
வீட்டுக்குள்ளேயும் இரவல் உண்டு. அண்ணன் வளர்ந்ததும் தம்பிக்கு அந்த சட்டை தானாக வரும். அக்காவின் தாவணி தங்கைக்குத் தாரை வார்க்கப்படும். ஐந்தாவது படிக்கும் அண்ணன் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நான்காம் வகுப்பை முடித்த தம்பிக்கு புத்தகங்களை அப்படியே ஒப்படைக்க, அவன் அதிலேயே படிப்பைத் தொடரும் சிக்கனங்கள் உண்டு. வசதியற்ற மாணவர்கள் மற்றோர் படித்த புத்தகங்களை அரை விலைக்கு வாங்கி அவற்றை வைத்துத் தேறுவது உண்டு. வண்ணப் பென்சில்கள் வீட்டின் பொதுவுடைமை. வேண்டியபோது அண்ணன் தம்பிகள் எடுத்துப் பயன்படுத்தி மீள வைப்பது மரபு.
இன்று பொதுவுடைமை என்பது இல்லத்துக்குள்ளேயே இல்லை. அண்ணனுக்கு வாங்குவதை தம்பிக்கும் தருவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் தகராறு. அவசரத்துக்கு என்று அடுத்தவரிடம் கேட்பது அநாகரிகம். அழுகி எறிவார்களே தவிர, பகிர்ந்து மகிழ மாட்டார்கள். பற்றாக்குறை இல்லாத நிலை பல வீடுகளில் இன்று இருக்கிறது. பெட்டியில் இல்லாத வறுமை உள்ளத்தை நிறைத்திருப்பது உண்மை.
-
அருகில் இருக்கும் பள்ளியே அழகான பள்ளி. அன்று சில குடும்பங்களில் அத்தனை வசதிகள் இருந்தாலும், பொங்கிப் பெருகும் செல்வம் கொழித்தாலும் நகரத்துக்குச் சென்று பிள்ளைகள் படித்து வருகிற வழக்கமில்லை. அப்பா, அம்மாவுடனேயே குழந்தைகள் தங்கி, கிராமத்துப் பள்ளியில் படிப்பதே வாடிக்கை. இன்றிருப்பதுபோல விடுதியில் தங்கிப் படிக்க வைப்பதும், மதிப்பெண்களைக் கொட்ட வைக்கும் பள்ளிகளில் அனுமதித்து, பெற்றோர் அங்கேயே அறையெடுத்துத் தங்கும் அவலமும் அன்றில்லை.
பள்ளி என்பது படிக்க மட்டுமல்ல; ஒன்றாகச் சேர்ந்து விளையாடவும், அன்பையும் பண்பையும் கற்கவும் அது நாற்றங்கால். கட்டிடம் முக்கியமல்ல. தரையின் ஜொலிப்பு அவசியமல்ல. நடத்தும் ஆசிரியரின் ஆளுமையும் முக்கியமல்ல. காலை முதல் மாலை வரை பள்ளி வளாகத்தில் குழந்தைகள் பட்டாம்பூச்சியாகச் சிறகடித்துப் பறந்தால் போதுமென பெற்றோர் நினைத்த காலம் அது.
பள்ளியில் சேர பிறப்புச் சான்றிதழ் கூட அன்று தேவையில்லை. வலது கையால் தலைக்கு மேல் வைத்து இடது காதை முழுமையாகத் தொட் டால் படிக்கிற வயது வந்துவிட்டது என்று பொருள். குள்ளமாக இருந்த தால் எனக்கு எட்டவில்லை. இருந்தா லும் சேர்த்துக் கொண்டனர். இன்று வரை எட்டாமல்தான் இருக்கிறது. பள்ளிக்கு முதல் நாள் செல்ல அன்று குழந்தைகள் அழுததில்லை. வீட்டில் யாரும் பொத்திப் பொத்தி வளர்க்காத தால் பள்ளி எங்களை பயமுறுத்தவில்லை.
பாட்டும், எழுத்தும் படிப்பு
அன்று பெரும்பாலும் மாணவர்கள் நடந்தே வருவார்கள். ஒரு சில வசதி யான குடும்பங்கள் குழந்தைகளை மிதிவண்டியில் கொண்டுவந்து விட ஆள் வைத்திருப்பார்கள். பள்ளியில் தாமதமானால் மகன்களைத் தேடும் தந்தையுமில்லை, அழைத்துச் செல் லும் அயர்ச்சியும் இல்லை. படிப்பைக் காற்றடிப்பதுபோல கஷ்டப்பட்டு மூளைக்கு அனுப்பும் முயற்சியும் இல்லை. தனிப்பாடம் என்பது ஆரம்பப் பள்ளியில் கிடையவே கிடையாது. படிப்பு என்பது பாட்டும், எழுத்தும்.
ஆரம்பப் பள்ளியில் அத்தனை பாடத்துக்கும் ஒரே ஆசிரியர். காலை முதல் மாலை வரை வகுப்பறை அந்த ஒருவர் கண்காணிப்பில் தவழும் தாய்மடி. கை பிடித்து சின்னப் பலகையில் ஆனா, ஆவன்னா எழுதக் கற்றுத் தருவார்கள். பல்பத் தால் எழுதிய பாடத்தை அழித்த பிறகும் சுவடுகள் இருக்கும். பள்ளித் தோழன் பலகை யைத் துடைக்க கற் றுத் தந்த உத்தி ஒன்று. உள்ளங்கைகள் இரண்டையும் அதன் மேல் வைத்து ‘காக்கா காக்கா தண்ணி போடு, குருவிகிட்ட சொல்லாதே’ என்போம். கை வியர்வையை தண்ணீர் என நினைத்து பலகையைச் சுத்தம் செய்வோம். நண்பன் ஒருவன் இலை ஒன்றைக் காண்பித்து படிப்புத் தழை என்று பறித்து பையில் வைப்பான். அதை வைத்தால் படிப்பு நன்றாக வருமாம். நானும் செய்திருக்கிறேன். அது அழுகி துர்நாற்றம் வந்ததோடு சரி. மாம்பழம் வரைய தமிழ் எழுத்து ‘மு’வை எழுதி சுழிப்பதைச் செய்து உள்ளிருப்பவற்றை அழிப்பது எளிய வழி.
அன்று அகல உழுவதைவிட ஆழ உழுதது அதிகம். எங்களுக்கு முதல் வகுப்பில் சரஸ்வதி டீச்சர். மாணவர்களுக்கு இன்னொரு தாயாய் இருப்பார். எந்தக் குழந்தையையும் அவர் திட்டியது இல்லை. காலையில் பள்ளியில் பிரார்த்தனை நடக்கும்.
முதல் பூ டீச்சருக்குத்தான்
இரண்டாம் வகுப்பில் பென்சில் அறிமுகமாகும். காகிதம் எழுதத் தரப் படும். எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த சாவித்திரி டீச்சர் கத்தரிக் காய் எவ்வளவு நல்லது என்று வகுப்பெடுத்தார். அதுவரை கத்தரிக்காயைத் தொடாமல் இருந்த நான், அதற்குப் பிறகு சுவைத்துச் சாப்பிடத் தொடங்கினேன். ஆசிரியர் வாக்கே வேத வாக்கு.
மூன்றாம் வகுப்பில் ஜோதி டீச்சர். அவ்வளவு எளிமையாக எங்களுக்கு ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தினார். அத்தனை மாணவர்களிடமும் சிரித்த முகத்துடன் நடந்துகொள்வார். மூன் றாம் வகுப்பில்தான் ஆங்கில எழுத்துகள் கற்றுத் தரப்பட்டன. எழுதப் பேனாவும் எங்களுக் குத் தரப்படும். ஆண்டு தொடக்கத்தில் பெறுகிற பேனாவை முழுஆண்டுத் தேர்வு வரை பாதுகாக்க வேண்டும். அவ்வப்போது கீழே விழுந்து உடைந்து முள் (நிப்) முறியும். புது முள்ளுக்கு 3 பைசா. நீல மசியை நிரப்ப 3 பைசா. கருப்பு மையை நிரப்ப 4 பைசா. நாளடைவில் தேய்ந்து முள் பட்டையடிக்க ஆரம்பிக்கும். புது முள் கொஞ்சம் அழுத்தமாக எழுத, அதன் நடுவே பிளேடை விட்டு நெம்புவதும் உண்டு. சமயத்தில் பேனா லீக்கடித்து சட்டைப் பை மசியால் நனைவதும் உண்டு. நான்காம் வகுப்பிலும், ஐந் தாம் வகுப்பிலும் கமலாட்சி டீச்சர். பள்ளி முடியும் வரை கண்டிப்பு, அதற்குப் பிறகு கனிவு.
வீட்டுப் பாடம் என்பது அரை மணி நேர வேலை. ஒன்றாம் வகுப்பில் சின்னக் கரும்பலகையின் இரண்டு பக்கமும் எழுதும் அளவே வீட்டுப் பாடம். இரண்டாம் வகுப்பில் 16-ம் வாய்ப் பாடு வரை பலமுறை எழுதி எதைக் கேட்டாலும் உடனடியாகச் சொல்ல வேண்டும். திண்ணையிலேயே அமர்ந்து வீட்டுப் பாடத்தை முடித்த பிறகு உள்ளே நுழைவோம். அதற்குப் பிறகு விளையாட்டு மட்டுமே. இருட்டும் வரை விளையாட்டு. பின்னர் வீட்டுக்கு வந்து கை, கால் அலம்பி சாப்பிட்ட பிறகு சுகமான தூக்கம். வீட்டில் எப்போதும் ஆசிரியர் பற்றியே பேச்சு இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் வகுப்பாசிரியருக்கு பொங்கல் வாழ்த்து அட்டையை கைப்பட வரைந்து, அனுப்புவதற்கு காசு இல்லாததால் அப்படியே வைத்திருப்போம். வீட்டுச் செடியில் முத லில் பூத்த சாமந்தியை டீச்சருக்கு எடுத்துச் செல்வதில் அப்படியொரு பெருமை.
நண்பனை காணவில்லை
ஆண்டுத் தொடக்கத்தில் வாங்கித் தருகிற இரண்டு, மூன்று ஜோடி சீருடை மட்டுமே. அவற்றில் கழுத்துப் பட்டை நுனியில் மஞ்சள் தடவி அணிந்து செல்வோம். முக்கால்வாசி மாணவர்கள் மதிய இடைவேளையில் வீட்டுக்கு வந்து உணவருந்திவிட்டுச் செல்வார்கள். குடிநீர்க் குப்பிகளை தூக்கிச் செல்லும் வழக்கமில்லை. பள்ளியின் குடிநீர்க் குழாயில் கைகளைக் குவித்து கவ லையின்றி நீர் பருகி நிம்மதியாக இருந்தோம். பள்ளி வேலைகளை குழுவாக மாணவர் செய்த காலம் அது. அடுப்புக் கரி, ஊமத்தங்காய் ஆகியவற்றை அரைத்து வகுப்பறைக் கரும்பலகையில் மாணவர்கள் அவ்வப்போது பூசுவார்கள். மண் பானை யில் தண்ணீர் கொண்டு வர ஒரு குழு. பெருக்க ஒரு குழு. பிரார்த்தனை மைதானத்தை கூட்டுவதற்கு ஒரு குழு.
என்னோடு மூன்றாம் வகுப்பு வரை ஒன்றாகப் பள்ளிக்குச் சேர்ந்து செல் கிற நண்பன் ஒருவன் உண்டு. நான்காம் வகுப்பு தொடங்கும்போது என்னை அழைத்துச் செல்ல அவன் வரவில்லை. காத்திருந்து பார்த்திருந்துவிட்டு, களைத்துப் போய் அவசர அவசரமாக பள்ளிக்கு ஓடினேன். வகுப்பிலும் அவன் இல்லை. ஒரு வாரம் கழித்து நான் படித்த மூன்றாம் வகுப்பைக் கடக்கும்போது அவனை அங்கு பார்த்தேன். எல்லாக் காலத்திலும் தேர்ச்சி பெறாமல் போவது ஒருவித சோகம்தான்.
நாங்கள் துவைத்த உடையோடு பள்ளிக்குச் செல்கையில் ஓரிரு மாணவர்கள் அங்கங்கே சலவை செய்த கூர்மையான உடைகளுடன் பள்ளிப் பேருந்துக்கு காத்திருப்பதைப் பார்ப்போம்.
சீருடை கூர்மையும் புத்தி கூர்மையும்
எங்கள் கையில் அத்தனை புத்தகங்களையும் அட்டவணை என்கிற பாகுபாடே இல்லாமல் சுமக்கும் பை. அவர்களிடமோ பளபளக்கும் சின்ன அலுமினியப் பெட்டி. அவர்கள் மிகவும் உயர்ந்த படிப்பைப் படிக்கிறார்கள் என்கிற எண்ணம். உயர்நிலைப் பள்ளி யில் சேர்ந்து ஆறாம் வகுப்பில் அவர்கள் வந்து எங்களோடு இணையும்போது அது எவ்வளவு பெரிய தவறு என்பது புரியும். சீருடையின் கூர்மைக்கும், புத்திக் கூர்மைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இன்று மழலையர் பள்ளியில் சேர்வதற்கே மகத்தான கூட்டம். முதல் நாளே சென்று விண்ணப்பம் வாங்க வீதியில் படுத்து பெற்றோர் காத்திருக் கும் பள்ளிகளும் உண்டு. பள்ளி இறுதி வரை கங்காரு குட்டிகளைச் சுமப்பதுபோல பெற்றோர் காபந்து செய்யும் நடைமுறை.
படிப்பு என்பது நிகழ்காலத்தைத் தவறவிட்டு எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொள்ளும் திட்டமிட்ட முதலீடு இன்று.
‘அந்தக் காலத்தில்‘ என்று ஆரம்பித்தாலே வயதாகிவிட்டது என்று பொருள். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மாற்றங்கள் முந்தைய 500 ஆண்டு களுக்கான வளர்ச்சியை அனைத்துத் துறையிலும் உள்ளடக்கியது என்பதால்,50 ஆண்டுகள் ஆயுள் நிறையப் பெற்றவர்க்கு சென்ற ஆண்டே யுகமாகத் தோன்றும் விசித்திரம் உண்டு.
நாங்கள் பள்ளி சேரும்போது பெரும்பாலும் அப்பா வந்தது இல்லை. பல சிறுவர்களுக்கு அம்மா மட்டுமே வருவார். அதற்குப் பிறகு அம்மாவும் வந்தது இல்லை. அந்தந்தப் பகுதி யில் இருக்கும் மாணவர்கள் அங்குள்ள பள்ளியில் சேருவது நடைமுறையாக இருந்தது. யாரும் பள்ளியின் நீள அகலங்களை வைத்து தரம் பிரித்துப் பார்த்தது இல்லை. பள்ளி செல்வது பல் துலக்குவதைப் போல இயல்பாக இருந்த காலம் அது. காலையில் அதிகம் தூங்கினால் எட்டி உதைக்கப்பட்டு எழுப்பப்பட்ட குழந்தைகள் உண்டு. யாரும் ‘நேரத்துக்குப் போ’ என உசுப்பியதும் இல்லை, ‘நிறைய மதிப்பெண் பெறு’ என்று உற்சாகப்படுத்தியதும் இல்லை. பள்ளியில் அதிகம் குறும்பு செய்யும் மாணவனை மிரட்டும் உச்சபட்ச எச்சரிக்கையே, ‘அம்மாவை அழைத்துவரச் சொல்லி விடுவேன்’ என்பதே.
சிலேட்டும் சின்ன குறிப்பும்
ஆசிரியர்கள் யாரென்று தெரிந்துகொள்ளாமலேயே ஆரம்பப் பள்ளிப் படிப்பு முடிந்துவிடும். நாங்களாகச் சென்று வீட்டில் சகல நேரமும் ஆசிரி யர் பெருமை பேசுவோம். அன்று சிறுவர்களுக்கு டீச்சரே உலகம். எங்களுக்கு நம்பகமான கலைக் களஞ்சியமே எங்கள் வகுப்பு ஆசிரியர்தான். அவர் நன்மதிப்பைப் பெற்றுவிட மாட்டோமா என்பது பெரிய எதிர்பார்ப்பு. ‘நன்று’ என வீட்டுப் பாடத்தில் ஆசிரி யர் எழுதிவிட்டால், சிலேட்டை அழிக்காமல் அனைவரிடமும் காட்டி மகிழ்வோம்.
‘உங்கள் மகன் ஒழுங்காகப் படிக்கவில்லை’ என்கிற சின்ன குறிப்புகூட வீட்டுக்கு அனுப்பப்பட்டது இல்லை. தேர்வு முடிந்ததும் பெற்றோரிடம் கை யொப்பம் வாங்கி வர ‘ரேங்க் ஷீட்’ தரப்படும். என்ன மதிப்பெண் பெற்று இருந்தாலும் சிறிய கடிதலுடன் அது கையெழுத்தாகிவிடும்.
உயர்நிலைப் பள்ளியில் சேர மாற்று சான்றிதழ் எங்கள் வசமே கொடுக்கப்பட்டுவிடும். அதற்குப் பிறகு அருகில் இருக்கும் உயர்நிலைப் பள்ளியே எங்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். அன்று சேர்க்க மட்டும் யாரேனும் ஒரு பெற்றோர் வருவார். அதிகக் கெடு பிடி இல்லாமல் சேர்க்கை நடக்கும். அந்தந்த உயர்நிலைப் பள்ளிக்கு என்று அணைக்கு நீர்ப் பிடிப்புப் பகுதி இருப்ப தைப் போல குறிப்பிட்ட தொடக்கப் பள்ளிகள் உண்டு. அங்கிருந்து வருபவருக்கு அவசியம் இடமுண்டு.
பெற்றோரின் பெருந்தவம்
எனக்காக என் அப்பா ஒருநாளும் பள்ளிக்கு வந் தது இல்லை. பெரும்பாலான மாணவர்களுக்கு அன்று அதுவே நிலைமை. ஆண்டு விழாக்களில் பல மாணவர்கள் பரிசு பெறும் போது புகைப்படம் எடுக்கவும் ஆள் இருக்காது. அவற்றைக் குறித்து லட்சியம் செய்யவும் பெருமைப் படவும் அன்றையப் பெற்றோருக்கு அவகாசம் இல்லை. இன்றோ போட்டி யில் தோற்ற மகனுக்கு கடையில் கோப்பை வாங்கித் தரும் பெற்றோர் உண்டு.
‘என்ன படிக்கிறான்’, ‘ஏது படிக்கி றான்’ என்று தெரியாமலேயே பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் உண்டு. விடிய விடிய விழித்து தேநீர் தயாரித்து மகனின் மனப்பாடத்தைப் பரிசோதிக் கும் பெற்றோர் அன்று கிடையாது. கைக்கும் வாய்க்குமாய் நாட்களைத் தள்ளிய காலத்தில் அதற்கெல்லாம் அவகாசம் இல்லை.
இன்று தேர்தல் முடிவை தொலைக்காட்சியில் பார்ப்பதுபோல தேர்வு முடிவுகளைப் பற்றி ஆர்வமாய் அறியும் பழக்கமும் இல்லை. கல்லூரியில் அனுமதிப்பதற்கு மட்டும் பெற்றோர் வருவது உண்டு.
இன்று மழலையர் பள்ளியில் சேர்க்கவே பெற்றோர் பெருந்தவம் புரிகின்றனர். இடம் கிடைக்குமா என்று மடி யில் நெருப்புடன் மன்றாடுகின்றனர். விருப்பமான பள்ளியில் இடம் கிடைத் தால் அங்கப்பிரதட்சணம் செய்கிற பெற்றோரும் உண்டு. மழலையர் பள்ளியில்கூட மாதம் ஒருமுறை பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு.
பதற்றத்துடன் பற்கள் படபடக்க நிற் கும் பெற்றோரைப் பார்க்கலாம். திருப் பதி தரிசனத்துக்கு முந்துவதைப் போல வகுப்பாசிரியரை முதலில் பார்க்க தள்ளுமுள்ளுவில் ஈடுபடும் ஆர்வக்கோளாறுகளும் உண்டு. மக னைப் பற்றி நான்கு வார்த்தைகள் நல்லபடி கேட்டால் முகம் மெய்ஞானம் அடைந்ததைப் போன்ற பரவசத்துடன் பளபளக்கும். அங்கு வகுப்பறையில் ஒட்டப்பட்டிருக்கும் படக்குறிப்புகளைப் பார்த்து மளமளவென குறிப்புகள் எடுக்கும் அம்மாக்கள் உண்டு. அதிலிருக்கும் செய்தியை ஆசிரியர் கற்றுத் தருவதற்கு முன்பு உணவை ஊட்டும்போது சொல்லிக் கொடுத்து முதலிடம் பெற வைக்கும் முயற்சிக்காகவே அந்தக் கடும் உழைப்பு.
மனதில் கட்டிய மலைக் கோட்டை
எந்த வீட்டிலாவது முணுக் முணுக் என விளக்கு மங்கலாக எரியும் வெளிச்சத்தில் பெற்றோர் இருவரும் தலையில் துண்டு போட்டுக்கொள் ளாத சோகத்துடன் அமைதியாக அமர்ந்திருந்தால் அன்று அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நடந்திருக்கிறது என்றும், நல்லபடியாக நான்கு வார்த்தைகள் மகனைப் பற்றியோ, மகளைப் பற்றியோ ஆசிரியர் சொல்லவில்லை என்றும் தெரிந்துகொள்ளலாம். அந்த ஒரு நிமிடத்தில் அவர்கள் மனத்தில் கட்டிய மலைக்கோட்டை சரிந்து விழுந்ததால் இந்த சோகக் காட்சி. இந்த சந்திப்புகளில் பெரும்பாலான பெற்றோருக்கு இருக்கும் பதற்றமே, ‘நம் குழந்தை முட்டாளாகப் பிறந்துவிட்டதோ’ என்பதே. ‘உங்கள் மகன் மகிழ்ச்சியாக இருக்கிறான், பள்ளி பிடித்திருக்கிறது’ என்று எல்லாவற்றையும் நேர்மமறையாகச் சொல் லும் பள்ளிகள் பல உண்டு. அவர்கள் மகனைப் பற்றி மட்டும் பின்னூட்டம் கேட்டால் பிரச்சினை இல்லை. அடுத்த வர் மகனைப் பற்றி உயர்வாகச் சொன்னவற்றை தன் மகனுக்கு சொல்லவில்லையே என்ற ஆதங்கமே அதிகம். இப்பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பில் ஒரு நன்மை ஏற்படுவது உண்டு. அது குறும்பு செய்யும் குழந்தைகளின் தாய்மார்கள் நெருக்கமாகிவிடுகிறார்கள். எல்லாம் ஓர் ஆறுதலை முன்வைத்துத்தான்.
இன்று தொலைபேசி புலனம் வழி யாக வீட்டுப்பாடம் அஞ்சல்வழிக் கல்விபோல அனுப்பப்படுவதுண்டு. ஒரு நாள் உடல்நலத்தால் விடுப்பு எடுத்தாலும் வீட்டுப்பாடம் செய்வது விடு படக்கூடாதாம். இதனால் குழந்
Share this: