எகிப்தின் இளவரசன் டென்மார்க் டிலக்ஷன் நடிக்கும் டேனிஸ் இசை நாடகம்
30 May,2018
டேனிஸ் மொழியிலும் ஆங்கிலத்திலும் பட்டை கிளப்புகிறதுஸ
கடந்த இரண்டு மாதங்களாக டென்மார்க்கின் பரடைசியா நகரத்தில் உள்ள தியேட்டரில் எகிப்தின் இளவரசன் என்ற நாடகம் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆங்கிலத்திலும் டேனிஸ் மொழியிலும் இரண்டு அரங்குகளாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் பத்தாம் திகதிவரை தொடர்ந்து நடைபெறும்.
அமெரிக்காவில் நடைபெற்று, பின் டென்மார்க்கில் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு கோடை காலத்தில் டென்மார்க் தலைநகரில் நடைபெற இருக்கிறது. இப்போதே நுழைவுச் சீட்டுக்கள் காற்றாக பறக்கின்றன.
நேற்று இந்த நாடகத்தை பார்க்கப் போயிருந்தோம். இரண்டு மாதங்களாகிவிட்டது. ஆனாலும் 525 குறோணர் விலையில் நுழைவுச்சீட்டு இருந்தும் அரங்கு நிறைந்துவிட்டது.
இந்த இசை நாடகத்தைப் பார்க்கும் போது ஒரு மேலை நாட்டு திரைப்படத்தைப் பார்ப்பதைப்போலவே இருக்கும். அதற்கேற்ற தொழில் நுட்பம் மட்டுமல்ல உயர்ந்த கலைகளும் சங்கமாகியிருந்தது.
மோசஸ்சின் கதை, கடல் இரண்டாக பிளந்து வழிவிடுவது போன்றதெல்லாம் நாம் முன்னர் பத்துக்கட்டளைகள் என்ற ஆங்கிலப்படத்திலும் பார்த்துள்ளோம். ஹொலிவூட்டில் றீம்வேர்க்ஸ்சின் நாடகப் பிரதி அமெரிக்காவின் பிரபல நாடகக் கலைஞர்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்டதால் இத்தனை மதிப்பு.
மைக்கல் ஜாக்சனுடைய பாடல்களுக்கு நடனத்தை வடிவமைத்தவர் கூட அமெரிக்காவில் இருந்து டென்மார்க் வந்து பயிற்சிகளை வழங்கியதாகக் கூறுகிறார்கள்.
இதில் சிறப்பம்சம் டென்மார்க் தமிழ் இளைஞரான டிலக்ஷன் ஜெயரட்ணம் நாடகத்தில் மோசெஸ் என்ற கதாபாத்திரமாக நடிப்பதுதான். இவரே நாடகத்தின் கதாநாயகன்.
ஆங்கிலத்திலும், டேனிஸ் மொழியிலும் இவர் பாடி நடிப்பதை டேனிஸ் மக்கள் கைகளைத் தட்டி பாராட்டுவதை காட்சிக்குக் காட்சி கண்டு மகிழ முடிகிறது.
இது போன்ற இசை நாடகங்களை முன்னரும் பார்த்தாலும் அந்த நாடகங்களில் எல்லாம் எமது தமிழ் கண்களின் பார்வையில் ஏதோ ஒரு பற்றாக்குறை இருப்பது போன்ற எண்ணமே தென்படும்.
கிறீஸ் – கொலிடே ஒன் ஐஸ் – சவுண்ட் ஒப் மியூசிக் போன்ற உலகத்தரமான படைப்புக்களில் இருந்த சாறு போதாத வரட்சி இதில் காணப்படவில்லை.
காரணம் இதுதான்..
டிலக்ஷன் தமிழ் உணர்வுகளை பிரதிபலித்து நடித்த போது ஒரு டேனிஸ் நாடகம் புதிய ஜீவன் பெற்றுவிட்டதைக் காண்கிறோம்.
பாடல், நடனம், எடுத்துரைப்பு, உடல் மொழி, அரங்க நிர்வாகம் யாவற்றிலும் சர்வதேச அரங்கில் ஒரு தமிழ் இளைஞர் முத்திரை பதித்து நிற்பதை பார்க்க நமக்கு பெருமை பிடிபடவில்லை.
சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர், வடிவேல் போன்ற மிகச்சிறந்த கலைஞர்களின் உடல் அசைவையும் சிறிய அளவில் குழைத்து ஜீவன் கொடுக்கிறார் டிலக்ஷன்.
எத்தனையோ ஆற்றல் மிக்க தமிழ் நாடகக் கலைஞர்கள் எல்லாம் இருந்தபோதும் இத்தகைய பெரிய நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கைகூடி வந்ததாகக் கூறமுடியாது. அந்த வகையில் டிலக்ஷனுக்கு கிடைத்திருப்பதும் அவர் படைத்திருப்பதும் சாதனையே.
சிறு வயதில் இருந்தே இசையை பயின்று தந்தையின் இசைக்குழுவில் பங்கேற்ற டிலக்ஷன் இசையோடு நடிப்பிலும் தேறியிருப்பதற்கு அக்காலத்தே வருடத்திற்கு 24 எழுச்சி விழாக்களை நடத்திய அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
நாடகத்தின் கதாநாயகி டிலக்ஷனுக்கு முற்றிலும் ஈடு கொடுத்து நடித்துள்ளார். அவருடைய நடனம், பாத்திர ஒப்புவிப்பு, ஒயிலான நடை யாவும் ரசிகரை சர்ர்ரென ஈர்த்துவிடுகிறது.
ஆடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாடலில் ஆடலும் சேரத்தோன்றும்..
கலைகளை தெய்வமாய் காணத் தோன்றும்.. என்ற பாடலே மனதில் உலாப்போனது..
இது மட்டுமா..
முக்கிய வில்லன்கள், துணைப் பாத்திரங்கள் யாவருமே நாடகத்தையும், இசையையும் முறைப்படி கற்றவர்களாக இருந்த காரணத்தினால் அரங்கு முற்றாகவே புறபெஷனல் அரங்காக ஒளி வீசியது.
ஒன்றல்ல இரண்டல்ல நாடகத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் கைகோர்த்துள்ளன..
01. ஒளியமைப்பும் பின்னணி காட்சிகளும் சேர்ந்த அழகு.
02. ஒப்பனை, ஆடை அலங்காரமும் அவற்றோடு கூடிய நடிப்பின் வசீகரமும்.
03. சீனோ கிராபி எனப்படும் காட்சியமைப்பு சீன் பை சீனாக வந்த அழகழகு.
04. பின்னணி இசை இவை மட்டுமா இன்னமும் உண்டு.
சுமார் 25ற்கு மேற்பட்ட நடிகர்கள் நடிப்பம், நடனமுமாக மேடையை பலப்பல கோணங்களில் நிரப்பி நின்றார்கள். அதைவிட முக்கியம் மக்களுக்கு தெரியாமலே நின்று பதினைந்துக்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள் இரண்டரை மணி நேரம் நடத்திய ராகராஜாங்கம் அமோகமோ அமோகம்.
கரோக்கியோ என்று நினைத்தோம்.. அத்தனையும் லைவ் மியூசிக் என்றவுடன் அரண்டு விடுகிறோம்.
அதுமட்டுமல்ல நாடகத்தை தொய்யவிடாது தொடர்ந்து உயர்த்திச் சென்றதும் பின்னணி இசையே.
நாடகப் பிரதியாக்கம் சர்வதேச திரைப்பட கதையமைப்பு ஒழுங்கு போல செம்மையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. டேனிஸ் உரையாடலைவிட ஆங்கில உரையாடலின் ஜீவன் மிகு சிறப்பு என்கிறார்கள்.
நாடகத்தில் ஒலியமைப்பு ஓரிடத்தில் கூட கூச்சத்தம் போடவில்லை, இது நம்மவர்கள் படிக்க வேண்டிய பெரிய பாடம்.
நாடகம் என்பது மட்டுமல்ல கலை வடிவங்கள் அனைத்தும் சரியான கொம்னிகேஷன் என்னும் தொடர்பாடல், சேர்ந்து வேலை செய்யும் புரிதல் என்பவற்றின் அடிப்படையில் நடக்கும் கூட்டு வேலைத்திட்டமாகும்.
வண் மான் ஷோ காட்டும் நம்மவர்களில் பலர் படிக்க வேண்டிய பாடமாகும்.
கூட்டு வேலையை சரிவர செய்கிறார்கள்.. இது தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்.
பத்துக்கோடி தமிழர் இருந்தும் இப்படி நாடகங்களை நடத்த நம் தமிழகத்திலேயே முடியவில்லை. ஆனால் வெறும் சென்னை மாநகரமளவு சனத்தொகை உள்ள சிறிய இனங்கள் இவ்வளவு பெரிய தொகை பணத்தை நுழைவுச் சீட்டுக்காக கொடுத்து தொடர்ந்து அரங்கை நிறைத்து வைத்திருப்பது ஆச்சரியம் தந்தது. தமிழர்கள் சிந்திக்க வேண்டிய அரங்கம் இதுவாகும்.
நாடகக் காலர் மனோகருக்கு பிறகு தமிழில் வெற்றிடம் வந்துவிட்டதை எண்ணி மனது வருந்துகிறது.
எத்தனையோ வசதிகள் இருந்தும்..
தமது பிள்ளை டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும் என்று கனவு காணும் பெற்றோரிடையே தமது மகனை ஒரு இசை, நாடகக் கலைஞனாக கண்டு மகிழும் திரு.திருமதி ஜெயரட்ணம், மெற்றி தம்பதியர் இத்தருணம் பாராட்டப்பட வேண்டிய பெற்றோராகும்.
எல்லாவற்றையும் விட முக்கியம் தமிழ் மக்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. நமது பிள்ளைகளுக்கு நடனமாட, பாட ஒரு வாய்ப்பளித்தால் மட்டுமே கலைவிழா பக்கமாக தலை காட்டுவோம் என்று சத்தியப்பிரமாணம் எடுத்தவர்கள் போல அவர்களில் பலர் பொறுப்பற்று நடப்பது மிகப்பெரிய தவறாகும்.
இது போன்ற உயர் கலை வடிவங்களை நேரடியாக அரங்கு வந்து பார்க்க வேண்டும், மாறாக கலை வடிவங்களை ஏட்டிக்கு போட்டியாக தமிழிலும் தரவேண்டும்.
நிதியுதவிக்காக மட்டுமே தமிழில் கலைவிழா நடக்க வேண்டும் என்ற கரிய காலமும் இன்றுவரை மாறாத துயரமாக இருக்கிறது, அதுவும் மாற வேண்டும்.
இது போல தமிழ் கலைகளும் தொழிலாக்கப்பட வேண்டும்.
ஆரம்ப காலங்களில் கலைவிழாக்களை நடத்தியபோது எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்து அரங்கை நிறைத்தோம். ஆனால் வேறு வழியற்ற அன்றைய காலத்தில் அது சரியாக இருந்தது. ஆனால் இன்றோ அதுவே மிகப்பெரும் பிழையாக மாறிவிட்டது. வாய்ப்பு இருந்தால் மட்டுமே கலைவிழாவுக்கு வருவோம் என்ற பாழ் நிலைக்கு சமுதாயம் போக அன்றைய தப்பான கொள்கையே காரணமாகிவிட்டது.
இதை மாற்ற வேண்டும். நமக்கு வாய்ப்பல்ல அதற்கும் மேலால் நாமே முன்வந்து நல்ல கலைகளை ஆதரிக்க வேண்டும் இல்லையேல் வீட்டுக்குள் போக முடியாது முட்கள் வளர்ந்தது போல தப்பான கலைகள் வளர்ந்துவிடும்.
இன்று சில நாடுகளில் விடப்படும் விடலைத்தனமான பகடிகளே கலையாக மாறியும் விடும்.
எகிப்தின் இளவரசனை பார்க்கும் போது நம் தமிழரையும், இவ்வளவையும் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.
டிலக்ஷன் போன்ற இளைஞர்களை நினைத்து பெருமைப்பட்டால் மட்டும் போதாது.
முதலில் இந்த நாடகத்தை பார்க்க தமிழர் திரண்டு போகாவிட்டால் நாம் தமிழரை நினைத்து பெருமைப்பட முடியாதன்றோ..
பெருமைப்பட முடியாத தமிழ் சமுதாயத்தை வைத்துக் கொண்டு ஒரு தமிழனைப்பார்த்து என்ன பயன் என்ற கேள்வியும் இருக்கிறதல்லவா..?
இதற்காக துவண்டுவிடாதே தமிழா..
வீழ்ந்தவன் எழ முடியும்.. எட்டுத்தடவை தோற்ற சிலந்தி கூட ஒன்பதாவது தடவை எட்டித்தொடும் இலக்கை என்றால் உன்னால் முடியாதா தமிழா..
தோற்றால் சிலந்திக்கே மீசை முளைக்கிறது.. நீ இப்படி பிளவுபட்டு சீரழிந்து சீறுவாணமாக போகலாமா.. கூடாது எழுந்து வா..
தமிழா சிந்திப்பாய்.. உன்னால் முடியும்..
உன்னைவிட உன் தமிழால் முடியும் எழுந்து வா..
வாழ்க எகிப்தின் இளவரசன்..
TKS.S.DURAI