சூரிச்சில் சைக்கிளில் செல்பவர்கள் சிவப்பு விளக்கு எரிந்தாலும் நிற்காமல் செல்லலாம்? - புதிய சட்டம்
26 May,2018
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் சில இடங்களில் சைக்கிளில் செல்பவர்கள் சிகனலில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் நிற்காமல் செல்லலாம் என்னும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சைக்கிள் பயணத்தை பாதுகாப்பானதாகவும் எளிதானதாகவும் ஆக்குவதற்காக ஏற்கனவே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைமுறையில் உள்ள விதிகளை முன்மாதிரியாகக் கொண்டு Green Liberal Party of Switzerland என்னும் கட்சி இந்த யோசனையை முன்வைத்துள்ளது.
2015 முதல் பாரீஸில் சைக்கிளில் செல்பவர்கள் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போதும் ஒரு மஞ்சள் சைக்கிள் அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கும் சிக்னல்களில் மட்டும் நிற்காமல் செல்லலாம். ஆனால் வலது புறம் திரும்பும் சாலைகள் மற்றும் நேராக செல்லும் சாலைகளில் மட்டுமே இந்த விதிகள் பொருந்தும்.
இந்த நடைமுறையைத்தான் Green Liberal Party உறுப்பினர்கள் முன்வைத்தார்கள். எதிர்க்கட்சிகளோ இந்த நடவடிக்கை சைக்கிள் ஓட்டுபவர்களின் சட்ட விரோத செயல்களை சட்டப்பூர்வமாக்குவதற்கு சமம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் 70 பேர் ஆதரவாகவும் 45 பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர். புதிய விதிகள் போக்குவரத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.