வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
24 May,2018
லண்டன் : இங்கிலாந்தில் தாய் இன்றி தவித்த வாத்து குஞ்சுகளை, நாய் பாசத்துடன் அரவணைத்து வருவது காண்போரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டட் கோட்டையில், ஒரு வாத்து 9 குஞ்சுகள் பொரித்தது. வாத்தும், அதன் குஞ்சுகளும் இரை தேடி சுற்றித் திரிந்தது. இதை ஒரு நாய் கவனித்து வந்தது. இந்நிலையில், தாய் வாத்து கடந்த வாரம் திடீரென காணாமல் போனது. இதை பார்த்த நாய், வாத்து குஞ்சுகளின் அருகில் சென்றது. பின்னர், அவற்றை அரவணைத்தது.
குஞ்சுகளும் அந்த நாயுடன் ஒன்றிவிட்டன. அதன் பின்பு நாய் செல்லும் இடத்திற்கு குஞ்சுகளும் செல்கின்றன. நாயின் மீது ஏறி நிற்கின்றன. அதன் முதுகில் அமர்ந்து சவாரி செய்கின்றன.
இதுதொடர்பாக ஸ்டான்ஸ்டட் கோட்டையின் இயக்குனர் ஜெராமி கோல்ட்ஸ்மித் கூறுகையில், 'குஞ்சுகளிடம் நாய் போகும்போது முதலில் பயந்தோம். ஆனால், தாய் வாத்து இல்லாததை அறிந்து, குஞ்சுகளை அரவணைத்த விதம் கண்டு நெகிழ்ந்து போனோம். ஒரு தந்தையைப் போல் அக்கறையாக பொறுமையாக குஞ்சுகளை கவனிக்கிறது' என தெரிவித்துள்ளார்.