சவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்
22 May,2018
சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் எ330 ஜெட் விமானம் 151 பயணிகளுடன் சவுதியின் புனித நகரான மெக்காவில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவை நோக்கி பறந்து சென்றது. நடுவானில் விமான என்ஜினில் உள்ள ஹைட்ராலிக் சிஸ்டம் திடீர் என செயலிழந்தது.
இதனால், அருகில் இருந்த நகரான ஜெட்டாவில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர்.
ஜெட்டா விமான நிலைய ஓடுதளத்தில் விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் முன் பகுதி தரையில் மோதி சேதம் அடைந்தது. இதில், விமானத்தில் இருந்த 52 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்த அவசரகால கதவு வழியே வெளியேற்றப்பட்டனர்.
ஒரு பெண் பயணிக்கு மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சவுதி விமானபோக்குவரத்து விசாரணை ஆணையம் இந்த விபத்து குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.